கனவுகள் சில சமயங்களில் நமக்கு வேடிக்கையான ஒன்றாக தோன்றும். ஆனால், பல சமயங்களில் அபாயத்தை தருவது போல இருக்கும். சில கனவுகள் அப்படியே நம்மை கடந்து போய் விடும். ஆனால், பல கனவுகள் நம்மை நீண்ட காலம் நிம்மதியாக இருக்க விடுவதில்லை. கனவுகள் உண்மையில் பலிக்குமா..? கனவுகளுக்கு அர்த்தம் இருக்கா? கனவுகள் ஆபத்தானதா..? இப்படி எக்கசக்க கேள்விகள் நம்மில் பலருக்குள்ளும் இருக்கும்.
கனவில் பல விதங்கள் உண்டு. சிலர் நம்மை கொல்வது போன்றோ, நாம் மாடியில் இருந்து கீழே விழுவது போன்றோ, அல்லது நமக்கு பிடித்தவர் இறப்பது போன்றோ கனவுகள் வர கூடும். ஆனால், இவற்றில் ஒரு சில கனவுகள் நம்மை நிம்மதியாக தூங்க கூட விடுவதில்லை. ஒரு சில மோசமான அறிகுறிகள் கொண்ட கனவுகள் வந்தால் அதற்கு உளவியல் ரீதியாக என்ன அர்த்தம் என்பதை பற்றி நிபுணர்கள் கூறும் கருத்துக்களை இனி அறிந்து கொள்வோம்.
பற்கள் விழுவது போன்றோ, சாவு ஏற்படுவது போன்றோ உங்களுக்கு கனவுகள் தோன்றினால் அதற்கு உங்களது சுயத்தை நீங்கள் குறைத்து எடை போடுகிறீர்கள் என்று அர்த்தமாம். மேலும் இந்த வகை கனவுகள் வெளிப்படுத்த இயலாத கோபம் போன்றவற்றை குறிக்கிறது.
உங்கள் கனவில் யாரோ துரத்தி வருவது போன்றோ அல்லது நாய்கள் துரத்துவது போன்றோ வந்தால் அவற்றிற்கு சில அர்த்தம் உண்டு. நீங்கள் எதையும் கண்டு ஒதுங்கி போவதாலே இப்படியான கனவுகள் உங்களுக்கு வருகிறது. வேலையின்மை, எதை செய்தாலும் தோல்வி, கடன் போன்ற பிரச்சினைகள் கொண்டோருக்கே இந்த கனவுகள் ஏற்படும்.
உலகம் அழிவது போன்றோ அல்லது எதோ ஒரு பேரழிவு ஏற்படுவது போன்றோ கனவு வந்தால், உங்களின் நிலையை நீங்கள் இழந்து கொண்டே இருக்கிறீர்கள் என்பதை குறிக்கிறது. மேலும், உங்களுக்குள்ளே ஏற்படுகின்ற கசப்பு தன்மையான அனுபவங்களையும் இது உணர்த்துகிறது.
கனவில் நீங்கள் எதோ ஒரு இடத்தில் இருந்து வீழ்வது போன்ற கனவு வந்தால் நீங்கள் உங்கள் வாழ்க்கையில் தடுமாறுகிறீர்கள் என்று அர்த்தம். உங்களது கடமைகளை சரிவர செய்ய இயலாமல் தவிக்கிறீர்கள் என்றும் அர்த்தமாகும். இது போன்ற கனவுகள் அதிக மன அழுத்தத்தையும் உங்களுக்கு உண்டாக்கும்.
நீங்கள் மட்டும் ஒரு வீட்டிற்குள்ளோ அல்லது தனியாக ஒரு காட்டிற்குள் இருப்பது போல கனவுகள் ஏற்பட்டால், உங்களின் தனித்துவமான திறமைகளை வெளிபடுத்த இயலாமல் கஷ்டப்படுகிறீர்களா என்று அர்த்தம். மேலும், உங்கள் இயலாமையை இது போன்ற கனவுகள் தனிமையின் மூலமாக கனவாக வெளிப்படுத்துகின்றன.
கனவில் கார் விபத்து உண்டாவது போல திணறினால் உங்கள் மனைவியுடனோ அல்லது காதலியுடனோ மனஸ்தாபம் உள்ளது என்று அர்த்தம். மேலும், உங்களுக்காக உங்களை பற்றி யோசிக்க கூட ஒருத்தரும் இல்லை என்பதை இது உணர்த்துகிறது.
உங்களுக்கு தேர்வில் தோல்வி அடைந்தது போன்ற கனவிற்கு அர்த்தம் உண்டு. பெரும்பாலும் இது போன்ற கனவுகள் எதோ ஒரு புது விஷயத்தை செய்யும் போது தான் உங்களுக்கு தோன்றும். அதிக தயக்கம், பயம், கவலை முதலியவை இருந்தால் இந்த வகை கனவுகள் தோன்றும்.
அரை நிர்வாணமாகவோ அல்லது முழு நிர்வாணமாகவோ கனவுகள் ஏற்பட்டால் இதற்கும் உளவியல் ரீதியாக சில அர்த்தங்கள் உண்டு. புதிதாக ஏதேனும் வேலையிலோ அல்லது புதிதாக ஏதேனும் உறவையே நீங்கள் தொடங்கி இருந்தால் இந்த வகை கனவுகள் உண்டாகும். மேலும், உங்களை பற்றிய பல சந்தேகங்கள், குழப்பங்கள் உண்டாகினாலும் இது போன்ற கனவுகள் வரும். மேலும் நீங்கள் ஏதேனும் ஆபத்தில் உள்ளதையும் இது குறிக்கிறது.