தனிப்பட்ட வாழ்க்கையில் மோசமான தோல்வியை தழுவி, மிகுந்த மனக்கஷ்டத்துடனேயே மரணித்திருக்கிறார் சரவண பவன் அண்ணாச்சி.
இவருக்கும் ஒரு கடைசி ஆசை இருந்திருக்கிறது! இன்று உலகம் முழுவதும் இத்தனை கிளைகளை அண்ணாச்சி உருவாக்கி உள்ளார் என்றால், இதற்கு எத்தனை அர்ப்பணிப்பு வேண்டும், எத்தனை உழைப்பு வேண்டும்? வெறும் வளர்ச்சி என்று மட்டும் இதை சுருக்கி விட முடியாது.
அண்ணாச்சிக்கு கடவுள் முருகன் என்றால் ரொம்பவும் உயிர். அதனால்தான் கிருபானந்த வாரியாரின் சீடராகவும் விளங்கி, தன்னுடைய ஓட்டலுக்கு சரவண பவன் என்று பெயரும் வைத்தார். தூத்துக்குடி மாவட்டம் கச்சனாவிளையில் ‘நவதிருப்பதி’ என்கிற பிரமாண்ட கோவிலைகூட இவர் உருவாக்கியுள்ளார்.
இறந்த பின்னரும் ஓட்டல் திறந்தே இருக்க வேண்டும்
எவ்வளவு சீக்கிரம் உயரத்துக்கு போனாரோ, அவ்வளவு சீக்கிரம் கீழே வந்து விழுந்து விட்டார். அப்போது விழுந்தவர்தான் கடைசி வரை எழவே இல்லை. எழ முடியவும் இல்லை. ஆனாலும் அண்ணாச்சி தன்னுடைய கடைசி ஆசையை குடும்பத்தினரிடம் சொன்னாராம். அது, தான் இறந்துவிட்டால்கூட, அதாவது இறந்த தினத்தன்று கூட, சரவண பவன் ஓட்டல்களை திறந்தே வைத்திருக்க வேண்டும் என்பதுதானாம் அந்த ஆசை.
அதன்படி, இன்று சரவண பவன் ஓட்டல்கள் வழக்கம் போல் திறந்தே இருக்கும் என்றும், இரவு 8 மணிக்குப் பின்னர் தான் மூடப்படும் என்றும் ஓட்டல் சார்பாகவே அறிவிக்கப்பட்டுள்ளது. மறைந்த உடல் வீட்டில் கிடந்தாலும், அவரது ஆசைப்படி எல்லா ஓட்டல்களும் திறந்தே வைக்கப்பட்டு உள்ளன. கடந்த 18 வருஷமாக நிம்மதி இல்லாத வாழ்க்கையை வாழ்ந்து, ஆயுள் கைதியாகவே உயிரை விட்டாலும், அண்ணாச்சியின் கடைசி ஆசையை நினைக்கும்போது மனம் கனத்து போகிறது!