Matha Rasi Palan 2019 – டிசம்பர் மாத ராசி பலன் !

0

கிரக மாற்றம்

05-12-2019 விருச்சிகத்தில் புதன் காலை 10.34 மணிக்கு
15-12-2019 மகரத்தில் சுக்கிரன் மாலை 05.58 மணிக்கு
16-12-2019 தனுசில் சூரியன் மாலை 03.28 மணிக்கு
25-12-2019 தனுசில் புதன் மாலை 03.46 மணிக்கு
25-12-2019 விருச்சிகத்தில் செவ்வாய் இரவு 09.29 மணிக்கு

மேஷம் அசுவனி, பரணி, கிருத்திகை1-ஆம் பாதம்

அன்புள்ள மேஷ ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 3-ல் ராகு, 9-ல் குரு சஞ்சரிப்பதால் பல்வேறு வகையில் ஏற்றங்களை அடைவீர்கள். தொழில் வியாபார ரீதியாக பொருளாதார நிலை நன்றாக இருக்கும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். மறைமுக எதிர்ப்புகள், போட்டிகள் போன்றவற்றை சந்திக்க நேர்ந்தாலும் கிடைக்க வேண்டிய லாபம் கிடைக்கும். விரோதிகளும் நண்பர்களாக மாறி நற்பலன்களை செய்வார்கள். கூட்டாளிகளையும் தொழிலாளர்களையும் அனுசரித்து செல்வது நல்லது. உங்கள் ராசியதிபதி செவ்வாய் 7-ல் சஞ்சரிப்பதும், மாத முற்பாதியில் சூரியன் 8-ல் சஞ்சரிப்பதும் ஒற்றுமை குறைவை ஏற்படுத்தும் என்பதால் குடும்பத்தில் உள்ளவர்களிடம் விட்டு கொடுத்து செல்வது, உற்றார் உறவினர்களிடம் பார்த்து பழகுவது நல்லது.

உடல் ஆரோக்கிய ரீதியாக சிறுசிறு மருத்துவ செலவுகளை செய்ய நேரிடும். உணவு விஷயத்தில் சற்று கட்டுப்பாடுடன் இருப்பது நல்லது. சுப காரிய முயற்சிகள் கைகூடி குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். பணவரவுகள் சிறப்பாக அமைந்து குடும்ப தேவைகளை பூர்த்தி செய்து விட முடியும். அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் எண்ணம் சிறு தடை தாமதத்திற்கு பின் நிறைவேறும். பணம் கொடுக்கல்- வாங்கலில் சரளமான நிலை இருந்தாலும் சற்று கவனமுடன் செயல்பட்டால் வீண் பிரச்சினைகளை தவிர்க்கலாம். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலை இருக்கும். மாணவர்களுக்கு பெற்றோர் ஆசிரியர்களின் ஆதரவு மகிழ்ச்சி அளிப்பதாக அமையும்.

பரிகாரம் – சிவ பெருமானுக்கு அர்ச்சனை அபிஷேகம் செய்து வழிபடுவது, பிரதோஷ விரதமிருப்பது நல்லது. கார்த்திகை தீப நன்னாளில் திருவண்ணாமலை சென்று கிரிவலம் வந்தால் நன்மைகள் பல உண்டாகும்.

சந்திராஷ்டமம் — 23-12-2019 பகல் 11.50 மணி முதல் 25-12-2019 மாலை 04.40 மணி வரை.

ரிஷபம் கிருத்திகை 2,3,4-ஆம் பாதங்கள் ரோகிணி, மிருகசீரிஷம் 1,2-ஆம் பாதங்கள்

அன்புள்ள ரிஷப ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 6-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் உங்களது செயல்களுக்கு பரிபூரண வெற்றி கிடைக்கும். எதிர்பாராத உதவிகள் கிடைத்து உங்கள் தேவைகள் பூர்த்தியாகும். மாத முற்பாதியில் சூரியன் 7-ல் சஞ்சரிப்பதாலும் 8-ல் குரு, சனி, கேது சஞ்சரிப்பதாலும் பண விஷயத்தில் மட்டும் சற்று கவனத்துடன் இருப்பது நல்லது. கணவன்- மனைவியிடையே தேவையற்ற வாக்குவாதங்கள் உண்டாகும் என்பதால் விட்டு கொடுத்து நடந்து கொள்வது உத்தமம். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் சில தடைகளுக்குப்பின் அனுகூலம் உண்டாகும். பணவரவுகள் ஏற்ற இறக்கமாக இருக்கும். முடிந்தவரை தேவையற்ற செலவுகளை குறைத்து கொள்வது உத்தமம். ஆன்மீக, தெய்வீக காரியங்களில் ஈடுபாடு அதிகரிக்கும்.

உடல் ஆரோக்கியத்தில் சற்று அக்கறை செலுத்தினால் தேவையற்ற மருத்துவ செலவுகளை தவிர்க்கலாம். பணம் கொடுக்கல்- வாங்கலில் கவனமுடன் செயல்பட்டால் லாபத்தை அடைய முடியும். பெரிய தொகைகளை ஈடுபடுத்தாது இருப்பது நல்லது. தொழில் வியாபாரத்தில் சற்று மந்தமான நிலை காணப்படும் என்றாலும் லாபங்கள் தடைப்படாது. அடிக்கடி பயணங்கள் மேற்கொள்ளும் வாய்ப்பும் உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு உடன் பணிபுரிபவர்களின் ஆதரவுகள் ஓரளவுக்கு மகிழ்ச்சி அளிக்கும். முன்கோபத்தை குறைப்பது, பேச்சில் நிதானத்தைக் கடைபிடிப்பது, உற்றார் உறவினர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. மாணவர்களுக்கு தேவையற்ற பொழுது போக்குகளால் கல்வியில் நாட்டம் குறையும்.

பரிகாரம் – துர்கையம்மன் வழிபாட்டையும் சனி பகவான் வழிபாட்டையும் மேற்கொண்டால் துயரங்கள் நீங்கி நற்பலன்கள் கிடைக்கும்.

சந்திராஷ்டமம் — 25-12-2019 மாலை 04.40 மணி முதல் 27-12-2019 இரவு 11.45 மணி வரை.

மிதுனம் மிருகசீரிஷம் 3,4-ஆம் பாதங்கள், திருவாதிரை,புனர்பூசம் 1,2,3-ஆம் பாதங்கள்

அன்புள்ள மிதுன ராசி நேயர்களே உங்கள் ராசிக்கு 7-ல் குரு, மாத முற்பாதியில் சூரியன் 6-ல் சஞ்சரிப்பதால் எல்லா வகையிலும் ஏற்றமிகுந்த பலன்களை அடைவீர்கள். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் தடையின்றி வெற்றி கிட்டும். குடும்பத்தில் சுபிட்சமான நிலை இருக்கும். பணம் பல வழிகளில் தேடி வந்து பாக்கெட்டை நிரப்பும். பொருளாதார மேன்மையால் வாழ்க்கை தரம் உயரும். தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். பொன் பொருள் சேரும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் தடை தாமதத்திற்கு பின் சாதகப்பலன் உண்டாகும். கணவன்– மனைவி வீண் வாக்குவாதங்களை தவிர்த்து பேச்சில் நிதானத்தை கடைப்பிடித்தால் குடும்பத்தில் அமைதி நிலவும். உற்றார் உறவினர்கள் சாதகமாக செயல்படுவார்கள்.

கடன்கள் யாவும் படிப்படியாக குறையும். தொழில், வியாபாரம் செய்பவர்கள் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்யும் காரியங்களில் நல்ல அனுகூலங்களை பெறு முடியும். கூட்டாளிகளின் ஒற்றுமையான செயல்பாடுகளால் புதிய வாய்ப்புகள் தேடி வரும். பணம் கொடுக்கல்- வாங்கல் சரளமாக நடைபெறும். சிலரின் அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் எண்ணம் நிறைவேறும். உத்தியோகஸ்தர்கள் பணியில் திறம்பட செயல்பட்டு உயரதிகாரிகளின் பாராட்டுதல்களை பெறுவார்கள். அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகள் தடையின்றி கிட்டும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்கி நல்ல மதிப்பெண்களை பெறுவார்கள். பெற்றோர் ஆசிரியர்களின் ஆதரவுகள் சிறப்பாக இருக்கும்.

பரிகாரம் – சனிக்கிழமைகளில் சனி பகவானுக்கு எள் தீபம் ஏற்றி வழிபடுவது, ஊனமுற்றவர்களுக்கு முடிந்த உதவிகளை செய்வது மிகவும் நல்லது.

சந்திராஷ்டமம் — 30-11-2019 பகல் 02.30 மணி முதல் 03-12-2019 அதிகாலை 00.55 மணி வரை மற்றும் 27-12-2019 இரவு 11.45 மணி முதல் 30-12-2019 காலை 09.35 மணி வரை.

கடகம் புனர்பூசம் 4-ஆம் பாதம், பூசம், ஆயில்யம்

அன்புள்ள கடக ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு சனி, கேது 6-ல் சஞ்சரிப்பதும், மாத பிற்பாதியில் சூரியன் 6-ல் சஞ்சரிக்க இருப்பதும் சிறப்பான அமைப்பு என்பதால் எல்லா வகையிலும் அனுகூலங்களை அடைவீர்கள். எடுக்கும் முயற்சியில் சாதகமான பலன்களை அடையும் யோகம் உண்டு. தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு இதுவரை இருந்த போட்டிகள் விலகி சிறப்பான முன்னேற்றத்தை அடைவார்கள். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களின் ஒத்துழைப்பு மகிழ்ச்சி அளிக்கும் வகையில் இருக்கும். புதிய வாய்ப்புகள் கிடைக்கப் பெற்று அபிவிருத்தி பெருகும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த பதவி உயர்வு மற்றும் ஊதிய உயர்வுகளை தடையின்றி பெற முடியும். சிலருக்கு வெளியூர், வெளிநாடுகளுக்குச் சென்று பணிபுரியும் வாய்ப்பும் அமையும்.

உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்துவது நல்லது. கணவன்- மனைவி வீண் வாக்குவாதங்களை தவிர்த்தால் குடும்பத்தில் ஒற்றுமையும் மகிழ்ச்சியும் நிலவும். உற்றார் உறவினர்களும் அனுகூலமாக இருப்பார்கள். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் சாதகப் பலனை அடைய முடியும். பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். பொன் பொருள் சேரும். கொடுக்கல்- வாங்கலில் சரளமான நிலை இருக்கும். பெரிய தொகைகளை எளிதில் ஈடுபடுத்தி லாபம் காண முடியும். கொடுத்த கடன்களும் திரும்ப கிடைக்கும். அசையும் அசையா சொத்துகளால் அனுகூலப்பலன் ஏற்படும். மாணவர்கள் கல்வியில் திறம்பட செயல்பட கூடிய ஆற்றல் உண்டாகும். நல்ல மதிப்பெண்களைப் பெறுவார்கள்.

பரிகாரம் – கந்த கடவுளாம் முருக பெருமானை செவ்வாய்க்கிழமைகளில வணங்கி வழிபட்டால் குடும்பத்தில் மங்களங்கள் உண்டாகும்.

சந்திராஷ்டமம் — 03-12-2019 அதிகாலை 00.55 மணி முதல் 05-12-2019 பகல் 01.20 மணி வரை மற்றும் 30-12-2019 காலை 09.35 மணி முதல் 01-01-2020 இரவு 09.40 மணி வரை.

சிம்மம் மகம், பூரம். உத்திரம்1-ஆம் பாதம்

அன்புள்ள சிம்ம ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு முயற்சி ஸ்தானமான 3-ல் செவ்வாய் சஞ்சரிப்பதும் 5-ல் குரு, 11-ல் ராகு சஞ்சரிப்பதும் தாராள தனவரவுகளை அடையும் யோகத்தை தரும். எதிர்பாராத உதவிகளும் கிடைக்கப் பெற்று உங்கள் தேவைகள் யாவும் பூர்த்தியாகும். ஆடம்பர பொருட்கள் வாங்கும் யோகம் உண்டாகும். மாத முற்பாதியில் சூரியன் 4-ல் இருப்பதால் தேவையற்ற அலைச்சல் ஏற்படும். முடிந்த வரை தூர பயணங்களை தவிர்ப்பது உத்தமம். உடலில் உஷ்ண சம்மந்தப்பட்ட பாதிப்புகள் உண்டாகி மருத்துவ செலவுகளை ஏற்படுத்தும் என்பதால் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்வது உத்தமம். குடும்பத்தில் உள்ளவர்களுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் மறைந்து நிம்மதியும் மகிழ்ச்சியும் ஏற்படும்.

உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வதன் மூலம் அனுகூலப் பலனை அடையலாம். தொழில் வியாபாரம் செய்பவர்கள் எடுக்கும் முயற்சிகளில் எதிர் நீச்சல் போட்டாவது வெற்றியினைப் பெறு முடியும். கூட்டாளிகளின் ஒத்துழைப்புடன் புதிய வாய்ப்புகள் கிடைக்கப் பெற்று எதிர்பார்த்த லாபத்தை அடைவீர்கள். பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்ய நினைக்கும் காரியங்களில் சாதகப் பலன் உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலையிருக்கும். பணம் கொடுக்கல்- வாங்கலில் சாதகப்பலன் ஏற்படும். மாணவர்கள் தேவையற்ற பொழுது போக்குகளை தவிர்த்து கல்வியில் சற்று கவனம் செலுத்துவது உத்தமம்.

பரிகாரம் – விநாயகர் வழிபாட்டை மேற்கொள்வது, சதுர்த்தி விரதம் கடைப்பிடிப்பது மிகவும் நல்லது.

சந்திராஷ்டமம் — 05-12-2019 பகல் 01.20 மணி முதல் 08-12-2019 அதிகாலை 01.30 மணி வரை.

கன்னி உத்திரம் 2,3,4-ஆம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1,2-ஆம் பாதங்கள்

அன்புள்ள கன்னி ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு சுக்கிரன் 4, 5-ல் சஞ்சரிப்பதும் மாத முற்பாதியில் 3-ல் சூரியன் சஞ்சரிப்பதும் நல்ல அமைப்பு என்பதால் கடந்த கால சோதனைகள் சற்று குறைந்து மனநிம்மதி ஏற்படும். குடும்பத்தில் சுபிட்சமும் மகிழ்ச்சியும் நிறைந்திருக்கும். பொருளாதார நிலை நன்றாக இருக்கும். பணவரவுகள் சிறப்பாக அமைந்து தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். கணவன்- மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். உற்றார் உறவினர்கள் ஓரளவுக்கு அனுகூலமாக செயல்படுவார்கள். ஆரோக்கியத்தில் சற்று கவனம் எடுத்து கொண்டால் அன்றாட பணிகளில் சுறுசுறுப்புடன் செயல்பட முடியும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் சாதகப்பலன் உண்டாகும்.

உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் கௌரவமான பதவி மற்றும் ஊதிய உயர்வுகள் கிடைக்கும். திறமைகளுக்கேற்ற பாராட்டுதல்களும் கிடைக்கப் பெறுவதால் மனமகிழ்ச்சி உண்டாகும். தொழில் வியாபாரம் சிறந்த முறையில் நடைபெற்று லாபத்தை உண்டாக்கும். இதுவரை இருந்த பிரச்சினைகள் எல்லாம் குறைந்து அனுகூலங்களை அடைவீர்கள். நல்ல வாய்ப்புகள் உங்களை தேடி வரும். பணம் கொடுக்கல்- வாங்கலில் சரளமான நிலை இருக்கும். கொடுத்த வாக்குறுதிகளையும் காப்பாற்றி விட முடியும். பெரிய மனிதர்களின் தொடர்பு உண்டாகும். ஆடம்பர செலவுகளை குறைப்பதன் மூலம் கடன்கள் ஏற்படுவதை தவிர்க்கலாம். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்கி பள்ளி கல்லூரிகளுக்குப் பெருமை சேர்ப்பார்கள்.

பரிகாரம் – சனி பகவானுக்கு க-ருப்பு வஸ்திரம் சாற்றி எள் தீபம் ஏற்றி வழிபட்டால் சகல நன்மைகளும் உண்டாகும். கோவில்களில் நல்லெண்ணெய் தானம் செய்வது மிகவும் நல்லது.
சந்திராஷ்டமம் — 08-12-2019 அதிகாலை 01.30 மணி முதல் 10-12-2019 பகல் 11.20 மணி வரை.

துலாம் சித்திரை3,4-ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம்1,2,3-ஆம் பாதங்கள்

அன்புள்ள துலா ராசி நேயர்களே உங்கள் ராசிக்கு முயற்சி ஸ்தானமான 3-ல் சனி கேது மாத பிற்பாதியில் 3-ல் சூரியன் சஞ்சரிப்பதால் நினைத்ததெல்லாம் நடக்கக் கூடிய இனிய மாதமாக இம்மாதம் இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் சிறப்பாக அமையும். உற்றார் உறவினர்கள் வருகை மகிழ்ச்சியை அளிக்கும். ஜென்ம ராசியில் செவ்வாய் சஞ்சரிப்பதால் முன்கோபத்தை குறைத்துக் கொள்வது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றினாலும் உடனே சரியாகிவிடும். பொன், பொருள் போன்றவற்றை வாங்கி சேர்ப்பீர்கள். பொருளாதார நிலையும் சிறப்பாகவே இருக்கும். குடும்ப தேவைகள் பூர்த்தயாவதுடன் கடன்களும் படிப்படியாக குறையும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலம் உண்டாகும். நல்ல வரன்கள் தேடி வரும். சிலருக்கு அசையும், அசையா சொத்துகள் வாங்க கூடிய வாய்ப்பு அமையும். கொடுக்கல்- வாங்கல் திருப்திகரமாக இருக்கும்.

கொடுத்த கடனை பெறுவதில் இருந்த இடையூறுகள் விலகும். தொழில், வியாபாரம் செய்பவர்கள் கூட்டாளிகளால் அனுகூலமானப் பலனை பெறுவார்கள். வெளியூர், வெளிநாட்டுத் தொடர்புடைய வாய்ப்புகளும் தேடி வரும். புதிய முயற்சிகள் வெற்றி தரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பணியில் திறம்பட செயல்பட்டு உயரதிகாரிகளின் பாராட்டுதல்களைப் பெறுவீர்கள். புதிய வேலை தேடுபவர்களுக்கு திறமைக்கேற்ற வேலை வாய்ப்புகள் கிட்டும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும். மாணவர்கள் கல்வியில் சற்று அதிக ஈடுபாட்டுடன் செயல்படுவது உத்தமம்.

பரிகாரம் – விஷ்ணு பகவானையும் மகா லட்சுமி தேவியையும் வணங்கி வழிபட்டால் குடும்பத்தில் சகல சௌபாக்கியங்களும் உண்டாகும்.

சந்திராஷ்டமம் — 10-12-2019 பகல் 11.20 மணி முதல் 12-12-2019 மாலை 06.25 மணி வரை.

விருச்சிகம் விசாகம் 4-ஆம் பாதம், அனுஷம், கேட்டை

அன்புள்ள விருச்சிக ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு தன ஸ்தானத்தில் குரு, மாத முற்பாதியில் சுக்கிரன் 2-ல் சஞ்சரிப்பது வலமான பலன்களை உங்களுக்கு தரும் அற்புதமான அமைப்பாகும். பணவரவுகள் நன்றாக இருந்து எதையும் சமாளிக்க கூடிய பலம் உண்டாகும். அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் எண்ணம் சிறு தடை தாமதத்திற்கு பின் நிறைவேறும். கணவன்- மனைவி பேச்சில் நிதானத்தை கடைப்பிடித்தால் குடும்பத்தில் ஒற்றுமை ஓரளவுக்கு சிறப்பாகவே இருக்கும். உங்கள் ராசிக்கு மாத முற்பாதியில் சூரியன் ஜென்ம ராசியில் இருப்பதால் முன்கோபத்தை குறைத்துக் கொண்டு எதிலும் நிதானத்துடன் செயல்படுவது நல்லது.

உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் ஏற்பட்டாலும் மருத்துவ செலவுகள் ஏற்படாது. உற்றார் உறவினர்களை அனுசரித்துச் கொண்டால் அவர்கள் மூலம் ஒருசில அனுகூலங்களை அடைய முடியும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் இருந்த தடைகள் விலகி முன்னேற்றம் ஏற்படும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் நிறைய போட்டிகளை எதிர்கொள்ள நேர்ந்தாலும் கிடைக்க வேண்டிய வாய்ப்புகள் கிட்டும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைப்பளு சற்றுக் கூடுதலாக இருக்கும். உடன் பணிபுரிபவர்களின் ஒத்துழைப்பால் எதையும் சமாளித்து விடுவீர்கள். எதிர்பார்த்த உயர்வுகள் கிடைப்பதில் தாமதம் உண்டாகும். மாணவர்கள் கல்வியில் அதிக கவனம் செலுத்துவது நல்லது.

பரிகாரம் – சிவ வழிபாடு செய்வது, பிரதோஷ காலங்களில் கோவில்களில் சிவ அபிஷேகத்திற்கு தேவையான பொருட்களை வாங்கி தருவது மிகவும் நன்மையை அளிக்கும். கார்த்திகை தீபத்தன்று திருவண்ணாமலை சென்று வருவது நல்லது.

சந்திராஷ்டமம் — 12-12-2019 மாலை 06.25 மணி முதல் 14-12-2019 இரவு 11.15 மணி வரை.

தனுசு மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம்

அன்புள்ள தனுசு ராசி நேயர்களே, உங்களுக்கு ஜென்ம சனி நடப்பதும், 12-ல் சூரியன் சஞ்சரிப்பதும் சாதகமற்ற அமைப்பு என்பதால் வீண் வாக்குவாதங்கள் தேவையற்ற அலைச்சல் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் சற்று அக்கறை செலுத்தினால் தேவையற்ற மருத்துவ செலவுகளை தவிர்க்கலாம். லாப ஸ்தானத்தில் செவ்வாய் சஞ்சரிப்பதால் எதையும் எதிர்கொள்ளக்கூடிய பலம் உண்டாகும். குடும்ப தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் எண்ணமும் நிறைவேறும். குடும்பத்தினரிடமும், உற்றார் உறவினர்களிடமும் சிறுசிறு கருத்து வேறுபாடுகள் உண்டாகும். விட்டு கொடுத்து செல்வது, பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. திருமண வயதை அடைந்தவர்களுக்கு சிறு தடை தாமதத்திற்கு பின் அனுகூலப் பலன் உண்டாகும்.

கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்துவதை தவிர்ப்பது உத்தமம். தொழில் வியாபாரத்தில் எதிர்நீச்சல் போட்டாவது எதிர்பார்த்த லாபத்தை அடைவீர்கள். எந்தவொரு காரியத்திலும் ஒரு முறைக்கு பல முறை சிந்தித்துச் செயல்படுவது நற்பலனை தரும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களை அனுசரித்து செல்வதன் மூலம் அபிவிருத்தியை பெருக்கி கொள்ள முடியும். தேவையற்ற பயணங்களைத் தவிர்த்து விடுவது நல்லது. உத்தியோகஸ்தர்களின் உயர்வுகள் தாமதப்பட்டாலும் பணியில் கௌரவமான நிலையே இருக்கும். மாணவர்கள் கல்வியில் சற்று கவனமுடன் செயல்பட்டால் எதிர்பார்த்த மதிப்பெண்ணை பெற முடியும்.

பரிகாரம் – சனி பகவானை வழிபடுவதாலும் சனிக்குரிய பரிகாரங்கள் செய்வதாலும் சிறப்பான பலன்களை அடையலாம்.

சந்திராஷ்டமம் — 14-12-2019 இரவு 11.15 மணி முதல் 17-12-2019 அதிகாலை 02.45 மணி வரை.

மகரம் உத்திராடம் 2,3,4-ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம்1,2-ஆம் பாதங்கள்

அன்புள்ள மகர ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 10, 11-ல் செவ்வாய் சஞ்சரிப்பதும் மாத முற்பாதியில் லாப ஸ்தானத்தில் சூரியன் சஞ்சரிப்பதும் நல்லது என்பதால் நல்ல வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். தொழில் பொருளாதார ரீதியாக அனுகூலமான பலன்களை பெறுவீர்கள். நல்ல வாய்ப்புகள் உங்களை தேடி வரும். சொந்த தொழில் செய்பவர்கள் போட்ட முதலீட்டை விட இரு மடங்கு லாபத்தை அடைவார்கள். கூட்டாளிகளின் ஒற்றுமையான செயல்பாடுகளால் மேலும் மேலும் தொழிலை விரிவுபடுத்த முடியும். தாராள தனவரவுகளால் அனைத்து தேவைகளும் பூர்த்தியாகும் என்றாலும் சனி, குரு 12-ல் இருப்பதால் ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொண்டு சிக்கனமாக இருப்பது நல்லது. உடல் நலத்தில் சற்று அக்கறை எடுத்துக் கொள்வது உத்தமம்.

சுப காரியங்கள் சிறு தடை தாமதத்திற்கு பின் கைகூடி மகிழ்ச்சி அளிக்கும். குடும்பத்தில் உள்ளவர்களிடமும் உற்றார் உறவினர்களிடமும் பேச்சில் சற்று நிதானத்தை கடைபிடித்து அனுசரித்து நடந்து கொள்வது நல்லது. கடன்கள் படிப்படியாக குறையும். கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் சரளமான நிலையிருக்கும். பல பெரிய மனிதர்களின் தொடர்புகளால் பெயர், புகழ் உயரும். கொடுத்த கடன்களும் தடையின்றி வசூலாகும். பெரிய தொகைகளை ஈடுபடுத்தும் போது மட்டும் சற்று சிந்தித்து செயல்படுவது நல்லது. ஆடை ஆபரணம் போன்றவற்றை வாங்குவீர்கள். புத்திரர்களால் அனுகூலம் ஏற்படும். மாணவர்கள் எதிர்பார்த்த மதிப்பெண்ணை பெற்று மகிழ்ச்சி அடைவார்கள். அரசு வழியில் ஆதாயங்கள் கிட்டும்.

பரிகாரம் – சனிப்ரீதியாக ஆஞ்சநேயரையும் விநாயகரையும் வணங்கி வழிபட்டால் துன்பங்கள் நீங்கி இன்பங்கள் உண்டாகும்.

சந்திராஷ்டமம் — 17-12-2019 அதிகாலை 02.45 மணி முதல் 19-12-2019 அதிகாலை 05.40 மணி வரை.

கும்பம் அவிட்டம்3,4-ஆம் பாதங்கள் சதயம், பூரட்டாதி 1,2,3-ஆம் பாதங்கள்

அன்புள்ள கும்ப ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு லாப ஸ்தானத்தில் சனி, குரு, கேது சஞ்சரிப்பதும் சூரியன் 10, 11-ல் சஞ்சரிப்பதும் மிகவும் சிறப்பான அமைப்பு என்பதால் சகல விதத்திலும் வலமான பலன்களை பெறுவீர்கள். எதையும் எதிர்கொள்ளும் ஆற்றல் உண்டாகும். எடுக்கும் முயற்சியில் அனுகூலங்கள் ஏற்படும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் நிறைந்திருக்கும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை நிலவும். பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். குடும்ப தேவைகள் அனைத்தும் தடையின்றி பூர்த்தியாகும். கடன்கள் சற்றே குறையும். பொன், பொருள் போன்றவற்றை வாங்கி சேர்ப்பீர்கள். பூர்வீக சொத்து விஷயங்களில் வீண் விரயங்கள் ஏற்பட்டாலும் அதன் மூலம் சாதகப்பலன் அமையும்.

எதிர்பாராத உதவிகளும் கிடைக்கும். உற்றார் உறவினர்களால் அனுகூலம் உண்டாகும். ஆரோக்கிய ரீதியாக சிறு சிறு மருத்துவ செலவுகள் ஏற்படலாம். பணம் கொடுக்கல்- வாங்கலில் இருந்த பிரச்சினைகள் விலகும். பெரிய தொகைகளை எளிதில் ஈடுபடுத்த முடியும். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த கௌரவமான பதவி உயர்வுகளைப் பெற முடியும். உயரதிகாரிகளிடம் பேசும் போது பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது உத்தமம். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கப் பெறுவதுடன் எதிர்பார்த்த லாபங்களும் கிட்டும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும். மாணவர்கள் கல்வியில் நல்ல மதிப்பெண்களை எடுக்க முடியும்.

பரிகாரம் – செவ்வாய்க்கிழமைகளில் துர்கையம்மனுக்கு கஸ்தூரி மலர்களால் அர்ச்சனை செய்து வழிபட்டால் குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும்.

சந்திராஷ்டமம் — 19-12-2019 அதிகாலை 05.40 மணி முதல் 21-12-2019 காலை 08.25 மணி வரை.

மீனம் பூரட்டாதி 4-ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி

அன்புள்ள மீன ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 8-ல் செவ்வாய், 10-ல் சனி, குரு சஞ்சரிப்பதால் நீங்கள் எதிலும் கவனமாக இருக்க வேண்டிய காலமாகும். பொருளாதார ரீதியாக தேவையற்ற நெருக்கடிகள் ஏற்படும். எந்த விஷயத்திலும் ஒருமுறைக்கு பலமுறை சிந்தித்து செயல்படுவது நல்லது. சிறுசிறு மருத்துவ செலவுகள் ஏற்படும் என்பதால் உடல் ஆரோக்கியத்தில் சற்று அக்கறை செலுத்துவது நல்லது. பொருளாதார நிலை சற்று இறக்கமாகவே இருக்கும். வீண் செலவுகளை தவிர்ப்பது, பணவிஷயத்தில் சிக்கனத்துடன் இருப்பது உத்தமம். கொடுக்கல்- வாங்கலில் பிறரை நம்பி பெரிய தொகைகளை கொடுப்பதை தவிர்க்கவும். குடும்பத்தில் ஒற்றுமை ஓரளவு சிறப்பாக இருக்கும். புத்திர வழியில் தேவையற்ற மனசஞ்சலங்கள் ஏற்படும்.

பூர்வீக சொத்துகளால் வீண் செலவுகள் உண்டாகும் என்பதால் சற்று கவனமுடன் இருப்பது நல்லது. தொழில், வியாபாரம் செய்பவர்கள் கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்தி கொள்வது கூட்டாளிகளை அனுசரித்து நடந்து கொள்வது போன்றவற்றின் மூலம் அபிவிருத்தியை பெருக்கி கொள்ள முடியும். பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்ய நினைக்கும் காரியங்களில் சற்று சிந்தித்து செயல்படுவது உத்தமம். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது நற்பலனை தரும். தேவையற்ற பயணங்களை தவிர்ப்பதன் மூலம் அலைச்சல்களை குறைத்துக் கொள்ள முடியும். மாணவர்கள் கல்விக்காக மேற்கொள்ளும் பயணங்களால் அலைச்சல்கள் அதிகரிக்கும்.

பரிகாரம் – முருக வழிபாடு செய்வது, சஷ்டி, கிருத்திகை விரதம் கடைப்பிடிப்பது மிகவும் நல்லது.

சந்திராஷ்டமம் — 21-12-2019 காலை 08.25 மணி முதல் 23-12-2019 பகல் 11.50 மணி வரை.

சுப முகூர்த்த நாட்கள்

01.12.2019 கார்த்திகை 15 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை பஞ்சமி திதி உத்திராடம் நட்சத்திரம் அமிர்தயோகம் காலை 07.30 மணி முதல் 09.00 மணிக்குள் தனுசு இலக்கினம். வளர்பிறை

02.12.2019 கார்த்திகை 16 ஆம் தேதி திங்கட்கிழமை சஷ்டி திதி திருவோணம் நட்சத்திரம் அமிர்தயோகம் காலை 09.30 மணி முதல் 10.30 மணிக்குள் மகர இலக்கினம். வளர்பிறை

06.12.2019 கார்த்திகை 20 ஆம் தேதி வெள்ளிக்கிழமை தசமி திதி உத்திரட்டாதி நட்சத்திரம் சித்தயோகம் காலை 09.00 மணி முதல் 10.30 மணிக்குள் மகர இலக்கினம். வளர்பிறை

08.12.2019 கார்த்திகை 22 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை துவாதசி திதி அசுவினி நட்சத்திரம் சித்தயோகம் காலை 09.00 மணி முதல் 10.30 மணிக்குள் மகர இலக்கினம். வளர்பிறை

11.12.2019 கார்த்திகை 25 ஆம் தேதி புதன்கிழமை சதுர்தசி திதி ரோகிணி நட்சத்திரம் சித்தயோகம் காலை 09.00 மணி முதல் 10.30 மணிக்குள் மகர இலக்கினம். வளர்பிறை

15.12.2019 கார்த்திகை 29 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை சதுர்த்தி திதி பூசம் நட்சத்திரம் சித்தயோகம் காலை 09.00 மணி முதல் 10.30 மணிக்குள் மகர இலக்கினம். தேய்பிறை

29.12.2019 மார்கழி 13 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை திருதியை திதி திருவோணம் நட்சத்திரம் அமிர்தயோகம் காலை 07.30 மணி முதல் 09.00 மணிக்குள் மகர இலக்கினம். வளர்பிறை

30.12.2019 மார்கழி 14 ஆம் தேதி திங்கட்கிழமை சதுர்த்தி திதி அவிட்டம் நட்சத்திரம் சித்தயோகம் காலை 09.00 மணி முதல் 10.30 மணிக்குள் கும்ப இலக்கினம். வளர்பிறை

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleToday Rasi Palan இன்றைய ராசி பலன் – 01.12.2019 ஞாயிற்றுக்கிழமை !
Next articleToday Rasi Palan இன்றைய ராசி பலன் – 02.12.2019 திங்கட்கிழமை!