என் மகளை பார்க்கும் போதெல்லாம்
என் இளமை பருவ படகு துடுப்பை தேடுகிறது!
காலையில் தோட்டத்தில் பூத்த பூவில் மது அருந்திய பட்டாம் பூச்சி
பூ மீது காதல் கொண்டு மறு நாள் பார்ப்பதற்கு வந்தது
ஆனால் அங்கே இருந்தவை புதிய பூக்கள்!
கடலோர சிப்பி மீது காதல் கொண்டது மீன்
ஆனால் அதனால் வெளியே வர முடியவில்லை!
வானத்தில் பறந்த பறவையில் இருந்து
உதிர்ந்து விழுந்தது இறக்கை
அதை எடுத்து தான் வரைந்த பறவைக்கு
ஒட்டி அழகு பார்த்தது குழந்தை!
நான் தேடிய இதயம் கிடைக்காததால்
கண்களில் வடிந்தது கண்ணீர்
அப்போது எனக்காய் ஓர் இதயம்
என்னுள் துடித்துக்கொண்டிருந்தது!
அவள் வருகைக்காய் நான் காத்திருந்த இடத்தில்
துளிர்விட ஆசைப்பட்டது முட்செடி!
உன் முக சுருக்கத்தில்
தெரியாது மறைந்து போகிறது
உன் மனக் கவலைகளும் ஏக்கங்களும்
அதற்கு நாம் கொடுக்கும் பெயர் முதுமை!
தினம் அவள் வருகைக்காய்
தெருமுனையில் காத்திருந்தேன்
தெருவோரம் படுத்திருந்த நாய்
என் வருகைக்காய் தினம் காத்திருந்தது
இப்போதெல்லாம் தெருமுனைக்கு
ஏன் செல்கிறேன் என்று தெரியவில்லை!
பழைய பக்கங்களை புரட்டி பார்க்கிறேன்
அவற்றில் சில பக்கங்கள் தொலைந்துபோய் இருந்தன!
என்னவளே உன் கருவிழில்
என் விம்பம் கருமையாய் தெரிகிறது!
ஓரு நாள் மட்டுமே வாழும் என்று தெரிந்தும்
செடிகள் அழகான பூக்களையே பூக்கின்றன!
அவள் தொலைந்து போனாள்
என்னுள் அவள் மீட்டிய இசை
திசை தெரியாது அலைந்து திரிகிறது!
உன்னவளின் பாதங்களை தொட தயங்காதே
உன் பரிசத்தின் உஸ்னத்தை உணர்ந்த
அவற்றால் மட்டுமே உன்னை பின் தொடர முடியும்!
பாவம் செய்த இதயத்திற்கு தெரியவில்லை
பாசத்தின் கதை இன்னும் முடியவில்லை என்று!
மணலில் கால் பதித்த என் மகளிடம்
அதட்டிக்கொண்டேன் ஏன் பாதணி அணியவில்லை என்று
மணல்கள் என்னிடன் கோபித்துக்கொண்டன!
அன்புடன்
எழுத்தாளர்: தமிழ்பித்தன்