தாலிக்கொடி அறுத்தோர் -மடக்கிப் பிடிக்கப்பட்டனர் -பொலிஸார் அவர்களை ஏற்கமறுப்பு!!
கிளிநொச்சி அக்கராயனில் உந்துருளியில் கணவருடன் சென்றுகொண்டிருந்த மனைவியின் தாலிக்கொடியை அறுத்த கொள்ளையனை, கணவனும் ஊர் மக்களும் இணைந்து மடக்கிப் பிடித்தனர்.
அவர்களை அக்கராயன் பொலிஸாரிடம் ஒப்படைத்தபோது ஏற்கமறுத்துள்ளனர். பொதுமக்களுக்கும், பொலிஸாருக்கும் இடையில் கருத்து முரண்பாடு இதனால் ஏற்ப்பட்டுள்ளது.
முறிகண்டியிலிருந்து அக்கராயன் செல்லும் வீதியில் 4ஆம் கட்டைப்பகுதியில் கணவனும், மனைவியும் உந்துருளியில் பயணித்துள்ளனர். காட்டுப்பகுதியில் மறைந்திருந்த இருவர் உந்துருளியைத் திடீரென மறித்தனர்.
கணவனைத் தள்ளி வீழ்த்தினர். மனைவியின் தாலிக்கொடியை அறுத்தனர். அவர் தாலிக்கொடியை இறுகப் பற்றிப் பிடித்திருந்த மையால் தாலிக்கொடி கொள்ளையனின் கைக்குச் செல்லவில்லை.
கணவன் அபயக் குரல் எழுப்பினார்.
ஊரவர்கள் அங்கு திரண்டனர். கணவனும், ஊர் மக்களும் திரண்டு கொள்ளையர்களைத் துரத்தினர். ஒருவர் கலைத்துப் பிடிக்கப்பட்டார். மற்றையவரும் மறைந்திருந்தபோது பிடிக்கப்பட்டுள்ளார்.
இருவரையும் அக்கராயன் பொலிஸாரிடம் மக்கள் ஒப்படைத்தனர். அவர்கள் முறைப்பாட்டை ஏற்க மறுத்ததுடன், கிளிநொச்சிப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யுமாறு கூறியதாகத் தெரிவித்த மக்கள், கொள்ளையர்களைப் பிடித்த எங்கள் மீது வழக்குத் தாக்கல் செய்யப் போவதாகவும் அச்சுறுத்தினர் என்று குறிப்பிட்டனர்.
இதேவேளை இந்தப் பகுதியில் இந்த மாதம் இரண்டு பெண்களின் நகைகள் கொள்ளையிடப்பட்டதாகப் பொதுமக்கள் தெரிவித்தனர்.