நல்லூர் கந்தன் பெருந்திருவிழா விரைவில் ஆரம்பம்! அடுத்த மாதம் கொடியேற இருக்கும் நல்லூரான்!
வரலாற்றுப் பிரசித்திபெற்ற நல்லூர் கந்தசுவாமி கோவில் வருடாந்த பெருந்திருவிழா அடுத்த மாதம் 16 ஆம் திகதி வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிறது என்று தெரிவிக்கப்பட்டது.
கொடியேற்றத்துக்கு முதல்நாளான15 ஆம் திகதி புதன் கிழமை முற்பகல் 10 மணிக்குக் கொடிச்சீலை எடுத்துவரப்படும். மாலை 5 மணிக்கு வைரவர் சாந்தி இடம்பெற்று, மறுநாள் முற்பகல் 10 மணிக்குக் கொடியேற்றம் நடைபெறும்.
தொடர்ச்சியாக 27 தினங்கள் திருவிழாக்கள் இடம்பெறும். எதிர்வரும் செப்ரெம்பர் 8ஆம் திகதி சனிக்கிழமை காலை 7 மணிக்குத் தேர்த்திருவிழாவும், மறுநாள் காலை 7 மணிக்குத் தீர்த்தத் திருவிழா இடம்பெற்று செப்ரெம்பர் 11 ஆம் திகதி வைரவர் உற்சவத்துடன் திருவிழா நிறைவு பெறும்.
ஆலயத்துக்கு வரும் பக்தர்கள் இந்துக் கலாசார முறைப்படியான ஆடைகளுடன் கோவிலுக்குள் சென்றுவழிபடலாம் என்று மேலும் தெரிவிக்கப்பட்டது.