குஜராத் மாநிலம் ராஜ்கோட் பகுதியைச் சேர்ந்தவர் ஆட்டோ டிரைவர் ரமேஷ் வைதூகியா. கடந்த வாரம் 7-ம் தேதி குடிப்பதற்கு பணம் தேடிய இவர், பாராபஜார் பகுதியைச் சேர்ந்த 70 வயது மூதாட்டி ஆஸ்மாவை கொலை செய்துள்ளார். பின்னர் மூதாட்டியின் கழுத்தில் இருந்த தங்கச் சங்கிலியை பறித்துக்கொண்டு சென்றுள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த குஜராத் போலீஸார், சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்தனர். அதில் குற்றவாளியின் உருவம் கண்டறியப்பட்டது.
இந்நிலையில் அடுத்த நாள் காலையில் குடிபோதையில் இருந்த ரமேஷ், சுனர்வாதா பகுதியில் விளையாடிக்கொண்டிருந்த 3 வயது குழந்தையை ஆட்டோவில் தூக்கிச்சென்று பாலியல் கொடுமை செய்துள்ளார். இரண்டு முறை பாலியல் கொடுமை செய்த பிறகு குழந்தையை தலையில் கல்லால் அடித்து கொலை செய்துள்ளார்.
இந்தச் சம்பவம் தொடர்பாகவும் சிசிடிவி கேமரா காட்சியை ஆய்வு செய்த போலீஸார், இரண்டு நபரும் ஒன்றுதான் என்பதை அடையாளம் கண்டனர். இரண்டு சிசிடிவி காட்சிகளிலும், குற்றச்செயலலில் ஈடுபட்ட நபர் ஒரே கை செயினை அணிந்திருப்பதையும், உருவத்தோற்றத்தைக் கொண்டும் அது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட போலீஸார், இன்று ராஜ்கோட்டில் குற்றவாளி ரமேஷை விரட்டிப் பிடித்தனர். மேலும் அவரை கைது செய்து தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.