திருபுவனையில் பாம்பு கடியில் இருந்து தப்பிய பெண் 3 மாதங்களுக்கு பின்னர் அதே பாம்பு கடித்து பெண் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணன்- மாரியம்மாள் தம்பதியினர், புதிதாக வீடு கட்ட முடிவு செய்து, கட்டுமானப் பணிக்காக கடந்த 3 மாதங்களுக்கு முன்பு கருங்கற்களை விலைக்கு வாங்கியுள்ளனர்.
லாரியில் ஏற்றப்பட்ட இந்த கருங்கற்களை வீடு கட்ட திட்டமிட்டு இருந்த இடத்தில் கிருஷ்ணனும், மாரியம்மாளும் இறக்கினர்.
அப்போது, கல் குவியலோடு ஒரு விஷப்பாம்பும் இருந்துள்ளது. கற்களை இறக்கியபோது அந்த பாம்பு திடீரென சீறியது.
இதைப்பார்த்து மாரியம்மாள் அதிர்ச்சி அடைந்தார், அங்கிருந்தவர்கள் பாம்பை அடிக்க விரட்டியபோது அங்கிருந்து தப்பி கற்குவியலுக்குள் புகுந்தது.
இந்த சம்பவம் நடந்து 3 மாதங்கள் கடந்துவிட்ட நிலையில், மீண்டும் வீடு கட்டும் வேலை தொடங்கியது. அப்போது அங்கு குவித்து வைக்கப்பட்டு இருந்த கற்களை மாரியம்மாள் எடுத்துக் கொடுத்துக் கொண்டிருந்தார்.
அப்போது அவர் ஒரு கல்லுக்கு அடியில் பதுங்கி இருந்த பாம்பு அவரை கடித்தது. கல் ஏற்றிய லாரியில் வந்து விரட்டப்பட்ட அதே பாம்பு தான் மாரியம்மாளை கடித்து இருப்பது தெரியவந்தது.
மாரியம்மாளை மருத்துவமனைக்கு கொண்டுசென்றபோது அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.




