12 ராசிகளுக்குமான‌ வார ராசிப்பலன் – ஜுலை 15 முதல் 21 வரை !

0

கிரக மாற்றம்: 16-07-2018 கடக சூரியன் இரவு 10.27 மணிக்கு

இவ்வார சந்திரன் சஞ்சரிக்கும் ராசிகள்!
கடகம் – 13-07-2018 மதியம் 01.43 மணி முதல் 15-07-2018 மதியம் 01.30 மணி வரை.
சிம்மம் – 15-07-2018 மதியம் 01.30 மணி முதல் 17-07-2018 மதியம் 03.09 மணி வரை.
கன்னி – 17-07-2018 மதியம் 03.09 மணி முதல் 19-07-2018 இரவு 07.56 மணி வரை.
துலாம் – 19-07-2018 இரவு 07.56 மணி முதல் 22-07-2018 அதிகாலை 04.14 மணி வரை.

இவ்வார சுப முகூர்த்த நாட்கள்!
19.07.2018 ஆடி 03 ஆம் தேதி வியாழக்கிழமை சப்தமி திதி அஸ்தம் நட்சத்திரம் சித்தயோகம் காலை 09.00 மணி முதல் 10.30 மணிக்குள் கன்னி இலக்கினம். வளர்பிறை

மேஷம் அசுவனி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம்.

எந்த ஒரு விஷயத்தையும் ஒளிவு மறைவின்றி மனம் திறந்து பேசும் குணம் கொண்ட மேஷ ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 4-ல் புதன் 5-ல் சுக்கிரன் 7-ல் குரு சஞ்சரிப்பதால் தொழில் பொருளாதார ரீதியாக ஏற்றமிகுந்த பலன்களை அடைவீர்கள். வியாபாரத்தில் இருந்த போட்டிகள் படிப்படியாக விலகி நல்ல முன்னேற்றங்கள் ஏற்படும். வெளியூர், வெளிநாட்டு தொடர்புடையவற்றால் அனுகூலங்கள் உண்டாகும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த பதவி உயர்வு மற்றும் ஊதிய உயர்வுகள் சிறு தடை தாமதத்திற்கு பின் பெற முடியும். சிலருக்கு திறமைகளுக்கு ஏற்ற பாராட்டுதல்களும், எதிர்பார்த்த இடமாற்றங்களும் கிடைக்கப் பெற்று மன மகிழ்ச்சி உண்டாகும்.

உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றி மறையும். கணவன்- மனைவி ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உற்றார் உறவினர்களும் சாதகமாக செயல்படுவார்கள். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் சாதகப் பலனை அடைய முடியும். பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும் என்பதால் குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். பொன் பொருள் சேரும். கொடுக்கல்- வாங்கல் திருப்திகரமாக இருக்கும். பெரிய தொகைகளை ஈடுபடுத்தி லாபம் காண முடியும். அசையும், அசையா சொத்துகளாலும் அனுகூலப்பலன் ஏற்படும். மாணவர்கள் கல்வியில் திறம்பட செயல்பட கூடிய ஆற்றல் உண்டாகும். நல்ல மதிப்பெண்களைப் பெறுவார்கள். துர்கையம்மன் வழிபாடு செய்வது சிறந்தது.

வெற்றி தரும் நாட்கள் – 17, 18, 19, 20, 21.

ரிஷபம் கிருத்திகை 2,3,4-ஆம் பாதங்கள் ரோகிணி, மிருகசீரிஷம் 1,2-ஆம் பாதங்கள்.

பிறர் தம் வார்த்தைகளில் குற்றம் குறை கண்டு பிடிக்காதவாறு அளவோடு பேசும் ஆற்றல் கொண்ட ரிஷப ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 3-ல் ராகு 4-ல் சுக்கிரன் சஞ்சரிப்பதும் வரும் 16-ஆம் தேதி முதல் 3-ல் சூரியன் சஞ்சரிக்க இருப்பதும் அனுகூலமான அமைப்பு என்பதால் சகல விதத்திலும் ஏற்றமிகுந்த பலன்களை அடைவீர்கள். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிட்டும். பண வரவுகள் சிறப்பாக இருக்கும். குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். எதிர்பாராத வகையில் திடீர் தனவரவுகளும் கிடைக்கப் பெறுவதால் வாழ்க்கைத் தரம் உயரும். கணவன்- மனைவியிடையே அடிக்கடி வாக்கு வாதங்கள் தோன்றினாலும் ஒற்றுமை சிறப்பாகவே இருக்கும்.

திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலம் உண்டாகும். நல்ல வரன்கள் தேடி வரும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் தேவை. உற்றார் உறவினர்கள் வழியிலும் அனுகூலங்கள் உண்டாகும். தொழில், வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபங்களையும் பெற்று விடுவீர்கள். கூட்டாளிகளும் ஆதரவாக இருப்பார்கள். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் வாய்ப்பும் அமையும். தேவையற்றப் பயணங்களை தவிர்ப்பதினால் அலைச்சல்களை குறைத்து கொள்ள முடியும். உத்தியோகஸ்தர்கள் பணியில் எதிர்பார்க்கும் உயர்வுகளுக்கான முயற்சிகளில் அனுகூலம் ஏற்படும். கல்விக்காக மாணவர்களுக்கு அரசு வழியில் உதவிகள் கிட்டும். தட்சிணாமூர்த்தியையும் சனி பகவானையும் வழிபாடு செய்வது உத்தமம்.

வெற்றி தரும் நாட்கள் 15, 20, 21.

மிதுனம் மிருகசீரிஷம் 3,4-ஆம் பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம் 1,2,3-ஆம் பாதங்கள்.

எந்த வித கடினமான வேலைகளையும் பொறுப்புடன் செய்து முடிக்க கூடிய ஆற்றல் கொண்ட மிதுன ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 2-ல் ராகு 8-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் குடும்பத்தில் ஒற்றுமை குறைவுகள் ஏற்படும். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. கணவன்- மனைவி பேச்சில் நிதானத்தைக் கடைபிடிப்பது உத்தமம். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றி மறையும். உணவு விஷயத்தில் கட்டுபாட்டுடன் இருப்பது நல்லது. குரு சஞ்சாரம் சிறப்பாக இருப்பதால் தாராள தனவரவுகள் உண்டாகி உங்கள் தேவைகள் யாவும் பூர்த்தியாகும்.

சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் நற்பலன் உண்டாகும். உற்றார் உறவினர்கள் அனுகூலமாக செயல்படுவார்கள். ஆடை, ஆபரணங்களை வாங்கும் வாய்ப்பு அமையும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் நல்ல நிர்வாகத் திறனுடன் கௌரவமாகப் பணியாற்ற முடியும். எதிர்பார்க்கும் உயர்வுகளும் கிட்டும். பணம் கொடுக்க- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தி லாபம் காண முடியும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு பயணங்களால் அலைச்சல் டென்ஷன்கள் இருந்தாலும் அனுகூலப் பலன் உண்டாகும். புதிய கூட்டாளிகளின் சேர்க்கையால் லாபங்களும், அபிவிருத்தியும் பெருகும். பல பெரிய மனிதர்களின் உதவியும், ஆதரவும் கிடைக்கும். மாணவர்கள் கல்வியிலும் விளையாட்டு போட்டிகளிலும் சிறந்து விளங்குவார்கள். நல்ல நட்புகள் தேடி வரும். சிவ மற்றும் முருக வழிபாடு செய்வது நல்லது.

வெற்றி தரும் நாட்கள் 15, 16, 17.

கடகம் புனர்பூசம் 4-ஆம் பாதம், பூசம், ஆயில்யம்.

நல்ல கற்பனை திறனும், சிறந்த ஞாபக சக்தியும் கொண்ட கடக ராசி நேயர்களே, ஜென்ம ராசியில் ராகு 7-ல் செவ்வாய் கேது சஞ்சரிப்பதால் எதிலும் நிதானமாக செயல்படுவது நல்லது. சுக்கிரன் 2-ல் இருப்பதால் பணவரவுகள் ஓரளவு சிறப்பாக அமைவதுடன் குடும்ப உறுப்பினர்களின் ஆதரவும் கிடைக்கப் பெற்று உங்களுக்கிருந்த நெருக்கடிகள் குறையும். உடல் நிலையில் சிறுசிறு பிரச்சினைகள் உண்டாகும் என்றாலும் ஆரோக்கியத்தில் சற்று அக்கறை செலுத்தினால் தேவையற்ற மருத்துவ செலவுகளை தவிர்க்கலாம். அசையா சொத்துகளால் வீண் விரயங்களை சந்திக்க நேரிடும். எதிர்பாராத வகையில் கிடைக்கப் பெறும் உதவிகளால் தேவைகள் யாவும் பூர்த்தியாகும். எடுக்கும் முயற்சிகளில் எதிர் நீச்சல் போட்டே வெற்றியினைப் பெற முடியும்.

தொழில், வியாபாரம் செய்பவர்கள் கூட்டாளிகளால் நற்பலனைப் பெற முடியும். பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்ய நினைக்கும் காரியங்களில் சற்று கவனமுடனிருப்பது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலையிருக்கும். உடன் பணிபுரிபவர்களும் ஒரளவுக்கு சாதகமாகச் செயல்படுவார்கள். பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். பணம் கொடுக்கல்- வாங்கலில் நம்பியவர்களே துரோகம் செய்வார்கள் என்பதால் பெரிய தொகைகளை கடனாக கொடுப்பதைத் தவிர்க்கவும். மாணவர்கள் தேவையற்ற பொழுது போக்குகளை தவிர்த்து கல்வியில் சற்று அதிக கவனம் செலுத்துவது உத்தமம். முருக வழிபாடும் தட்சிணாமூர்த்தி வழிபாடும் செய்தால் சிறப்பான பலன்கள் கிடைக்கும்.

வெற்றி தரும் நாட்கள் 15, 17, 18, 19.

சிம்மம் மகம், பூரம். உத்திரம் 1-ஆம் பாதம்.

தனக்கு நிகரில்லாதவர்களிடம் பழகுவதை தவிர்க்கும் குணம் கொண்ட சிம்ம ராசி நேயர்களே, உங்களுக்கு ஜென்ம ராசியில் சுக்கிரன் 6-ல் செவ்வாய், கேது சஞ்சரிப்பதால் எதையும் எதிர்கொள்ளக்கூடிய திறமை உண்டாகும். எடுக்கும் காரியங்களில் எதிர் நீச்சல் போட்டாவது வெற்றியினைப் பெறுவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் தேவை. பணவரவுகள் தேவைகேற்றபடி அமைந்து தேவைகள் பூர்த்தியாகும் என்றாலும் குரு சஞ்சாரம் சாதகமற்று இருப்பதால் ஆடம்பர செலவுகளை முடிந்த வரை குறைத்துக் கொள்வது நல்லது. பணம் கொடுக்க- வாங்கலில் பிறரை நம்பி பெரிய தொகைகளை கொடுப்பதை தவிர்க்கவும்.

கொடுத்த கடன்களை திரும்ப கேட்டால் வீண் பிரச்சனைகளை சந்திப்பீர்கள். குடும்பத்தில் சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தடைக்குப் பின் அனுகூலப் பலன் ஏற்படும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை ஓரளவு சிறப்பாக இருக்கும். பூர்வீக சொத்துகளால் வீண் செலவுகள் உண்டாகும். தொழில், வியாபாரம் செய்பவர்கள் கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்தி கொள்வது கூட்டாளிகளை அனுசரித்து நடந்து கொள்வது போன்றவற்றின் மூலம் அபிவிருத்தியை பெருக்கிக் கொள்ள முடியும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது நற்பலனை தரும். மாணவர்களுக்கு கல்விக்காக மேற்கொள்ளும் பயணங்களால் அலைச்சல்கள் அதிகரிக்கும். நவக்கிரகங்களில் ராகுவிற்கு மந்தாரை மலர்களால் அர்ச்சனை செய்வது நல்லது.

வெற்றி தரும் நாட்கள் 16, 17, 20, 21.

கன்னி உத்திரம் 2,3,4-ஆம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1,2-ஆம் பாதங்கள்.

எவ்வளவு அவசரமான காரியமாக இருந்தாலும் மற்றவர்களின் சௌகர்யங்களை ஆராய்ந்து செயல்படும் பண்பு கொண்ட கன்னி ராசி நேயர்களே, உங்கள் ராசியதிபதி புதன் ராகு சேர்க்கைப் பெற்று லாப ஸ்தானத்தில் இருப்பதாலும் வரும் 16-ஆம் தேதி முதல் 11-ல் சூரியன் சஞ்சரிக்க இருப்பதாலும் உங்களுடைய மதிப்பும் மரியாதையும் மேலோங்க கூடிய காலமாகும். பணம் பல வழிகளில் தேடி வந்து பாக்கெட்டை நிரப்பும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலப்பலன் உண்டாகும். கணவன்- மனைவிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். குடும்பத்தில் சுபிட்சமான நிலை இருக்கும். உற்றார் உறவினர்கள் சாதகமாக செயல்படுதால் மகிழ்ச்சி நிலவும்.

உடல் ஆரோக்கியத்தில் சற்றே மந்தநிலை நிலவினாலும் அன்றாட பணிகளில் சுறுசுறுப்புடன் செயல்பட முடியும். கடன்கள் யாவும் படிப்படியாக குறையும். தொழில், வியாபாரம் செய்பவர்கள் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்யும் காரியங்களில் நல்ல அனுகூலங்களை பெறுவார்கள். கூட்டாளிகளின் ஒற்றுமையான செயல்பாடுகளால் புதிய வாய்ப்புகளும் தேடி வரும். பணம் கொடுக்கல்- வாங்கல் சரளமாக நடைபெறும். உத்தியோகஸ்தர்கள் பணியில் திறம்பட செயல்பட்டு உயரதிகாரிகளின் பாராட்டுதல்களை பெறுவார்கள். அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகள் தடையின்றி கிட்டும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்கி நல்ல மதிப்பெண்களைப் பெறுவார்கள். விநாயகர் வழிபாடும் ஹனுமன் வழிபாடும் செய்தால் கஷ்டங்கள் குறையும்.

வெற்றி தரும் நாட்கள் – 15, 18, 19.

துலாம் சித்திரை 3,4-ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம் 1,2,3-ஆம் பாதங்கள்.

வசீகரமான தோற்றமும், உறுதியான பேச்சாற்றலும் கொண்ட துலா ராசி நேயர்களே, உங்கள் ராசியதிபதி சுக்கிரன் லாப ஸ்தானத்தில் வலுவாக சஞ்சரிப்பதும் வரும் 16-ஆம் தேதி முதல் 10-ல் சூரியன் சஞ்சரிக்க இருப்பதும் பலவகையில் முன்னேற்றத்தை தரும் அமைப்பாகும். பொருளாதார ரீதியாக வளமான பலன்களை பெறுவீர்கள். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு போட்டிகள் குறைவதால் லாபங்கள் சிறப்பாக இருக்கும். கிடைக்க வேண்டிய புதிய வாய்ப்புகளும் தடையின்றி கிடைக்கும். உத்தியோகஸ்தர்கள் பணியில் திறம் பட செயல்பட்டு உயரதிகாரிகளின் பாராட்டுதல்களைப் பெற முடியும். சிலருக்கு எதிர்பாராத பதவி உயர்வுகளும் கிடைக்கும்.

உங்களுக்கு இருந்து வந்த மறைமுக எதிர்ப்புகள் மறையும். எடுக்கும் முயற்சிகளில் தடையின்றி வெற்றி கிட்டும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் நிறைந்திருக்கும். பணவரவுகள் சிறப்பாக இருக்கும். உடல் ஆரோக்கியமும் ஓரளவுக்கு சிறப்பாக இருப்பதால் எதிலும் சுறுசுறுப்புடன் செயல்பட முடியும். திருமண சுபகாரியங்களில் முன்னேற்றம் ஏற்படும். உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சி அளிப்பதாக அமையும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தும் போது சற்று கவனம் தேவை. பயணங்களால் அனுகூலப்பலனை அடைவீர்கள். மாணவர்கள் சற்று கடின முயற்சிகளை மேற்கொண்டால் நல்ல மதிப்பெண்களைப் பெற்று பள்ளி கல்லூரிக்கு பெருமை சேர்க்க முடியும். குரு பகவானுக்கு முல்லை மலர்களால் அர்ச்சனை செய்து வழிபடுவது சிறந்தது.

வெற்றி தரும் நாட்கள் – 15, 16, 17, 20, 21.

விருச்சிகம் விசாகம் 4-ஆம் பாதம், அனுஷம், கேட்டை.

முன்கோபம் உடையவராகவும், எளிதில் உணர்ச்சி வசப்படக்கூடியவராகவும் விளங்கும் விருச்சிக ராசி நேயர்களே, உங்கள் ராசியதிபதி செவ்வாய், கேது சேர்க்கைப் பெற்று 3-ல் இருப்பதும் சுக்கிரன் 10-ல் இருப்பதும் சிறப்பாகும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். 8-ல் சஞ்சரிக்கும் சூரியன் வரும் 16-ஆம் தேதி முதல் 9-ல் சூரியன் சஞ்சரிக்க இருப்பதால் இதுவரை உடல் ஆரோக்கியத்தில் இருந்த பிரச்சனைகள் படிப்படியாக குறைந்து முன்னேற்றம் உண்டாகும். எதிலும் சுறுசுறுப்புடன் செயல்பட முடியும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் கௌரவமான நிலை இருக்கும். திறமைகளுக்கு ஏற்ற பாராட்டுதல்களும் கிடைக்கப் பெறுவதால் மனமகிழ்ச்சி உண்டாகும்.

சிலர் எதிர்பார்த்த இடமாற்றங்களையும் பெற முடியும். தொழில், வியாபாரம் செய்வர்கள் மறைமுக எதிர்ப்புகள், போட்டிகள் போன்றவற்றை சந்திக்க நேர்ந்தாலும் கிடைக்க வேண்டிய லாபம் கிடைக்கும். குடும்பத்தில் உள்ளவர்களிடம் பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடித்தால் மகிழ்ச்சி, நிம்மதி போன்ற யாவும் சிறப்பாக அமையும். பணவரவுகளில் ஏற்ற இறக்கமான நிலையிருந்தாலும் தேவைகளை பூர்த்தி செய்து விட முடியும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் சாதகமான பலன் உண்டாகும். பணம் கொடுக்கல்- வாங்கலில் சரளமான நிலை இருக்கும். மாணவர்களுக்கு பெற்றோர், ஆசிரியர்களின் ஆதரவு மகிழ்ச்சி அளிப்பதாக அமையும். சனி பகவானுக்கு சங்கு மலர்களால் அர்ச்சனை செய்து எள் தீபம் ஏற்றி வழிபடுவது நல்லது.

வெற்றி தரும் நாட்கள் – 16, 17, 18, 19.

தனுசு மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம்.

பல சாதனைகளைப் படைக்கும் வல்லமையும், தற்பெருமையும் அதிகம் கொண்ட தனுசு ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 2-ல் செவ்வாய், கேது வரும் 16-ஆம் தேதி முதல் 8-ல் சூரியன் சஞ்சரிக்க இருப்பதால் குடும்பத்தில் ஒற்றுமை குறைவு, நெருங்கியவர்களுடன் கருத்து வேறுபாடு ஏற்படும். கணவன் – மனைவி விட்டு கொடுத்து நடந்து கொள்வது நல்லது. சுக்கிரன் 9-ல் சஞ்சரிப்பதாலும் குரு லாப ஸ்தானத்தில் இருப்பதாலும் தொழில் வியாபார ரீதியாக பொருளாதார நிலை திருப்திகரமாக இருக்கும். கூட்டாளிகளின் ஒத்துழைப்புடன் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். பணவரகள் சிறப்பாக இருப்பதால் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும்.

உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் எடுத்து கொள்வது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் கௌரவமான பதவி மற்றும் ஊதிய உயர்வுகள் கிடைக்கும். திறமைகளுக்கு ஏற்ற பாராட்டுதல்களும் கிடைக்கப் பெறுவதால் மனமகிழ்ச்சி உண்டாகும். சிலர் எதிர்பார்த்த இடமாற்றங்களையும் பெற முடியும். தொழில் வியாபாரமும் சிறந்த முறையில் நடைபெற்று லாபத்தை உண்டாக்கும். கொடுக்கல்- வாங்கலில் ஏற்ற இறக்கமான நிலையிருந்தாலும் கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றி விட முடியும். மாணவர்கள் கல்வியில் சற்று அதிக ஈடுபாட்டுடன் செயல்படுவது நல்லது. தினமும் சூரிய நமஸ்காரம் செய்வதும், சிவ வழிபாடு மேற்கொள்வதும் சிறந்தது.

வெற்றி தரும் நாட்கள் – 17, 18, 19, 20, 21.
சந்திராஷ்டமம் – 13-07-2018 மதியம் 01.43 மணி முதல் 15-07-2018 மதியம் 01.30 மணி வரை.

மகரம் உத்திராடம் 2,3,4-ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1,2-ஆம் பாதங்கள்.

மனதில் எவ்வளவு துயரங்கள் இருந்தாலும் அதை வெளிக்காட்டாமல் அனைவரிடமும் சகஜமாக பழகும் குணம் கொண்ட மகர ராசி நேயர்களே, ஜென்ம ராசியில் செவ்வாய், கேது, 7-ல் சூரியன், ராகு இவ்வாரம் சஞ்சரிப்பதால் தேவையற்ற நெருக்கடிகள் ஏற்படும். எந்த செயல் செய்வதென்றாலும் சிந்தித்து செயல்படுவது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றி பெரிய மருத்துவ செலவுகளை ஏற்படுத்தும். எந்தவொரு காரியத்திலும் ஒரு முறைக்கு பல முறை சிந்தித்துச் செயல்படுவது நற்பலனை தரும். குடும்பத்தில் உள்ளவர்களிடமும், உற்றார் உறவினர்களிடமும் சிறுசிறு வாக்குவாதங்கள் உண்டாகும்.

திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகள் மேற்கொள்வதை தள்ளி வைப்பது நல்லது. கொடுக்கல் – வாங்கல் போன்றவற்றில் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்துவதன் மூலம் வீண் விரயங்களை சந்திப்பீர்கள். தொழில், வியாபாரம் போன்றவற்றில் எதிர்பார்த்த லாபத்தை அடைய சற்று எதிர்நீச்சல் போட வேண்டியிருக்கும். கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்தி கொள்வது, தேவையற்ற பயணங்களைத் தவிர்த்து விடுவது உத்தமம். உத்தியோகஸ்தர்களின் உயர்வுகள் தாமதப்பட்டாலும் பணியில் கௌரவமான நிலையே இருக்கும். சிலருக்கு எதிர்பாராத இடமாற்றங்களும் உண்டாகும். மாணவர்கள் கல்வியில் சற்று கவனமுடன் செயல்பட்டால் எதிர் பார்த்த மதிப்பெண்ணை பெற முடியும். அம்மன் வழிபாடும், முருக வழிபாடும் மேற்கொண்டால் நற்பலன்கள் உண்டாகும்.

வெற்றி தரும் நாட்கள் – 20, 21.
சந்திராஷ்டமம் -15-07-2018 மதியம் 01.30 மணி முதல் 17-07-2018 மதியம் 03.09 மணி வரை.

கும்பம் அவிட்டம் 3,4-ஆம் பாதங்கள் சதயம், பூரட்டாதி 1,2,3-ஆம் பாதங்கள்.

உண்மை பேசுவதையே குறிக்கோளாக கொண்டிருக்கும் கும்ப ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு பாக்கிய ஸ்தானத்தில் குரு பகவான் சஞ்சரிப்பதாலும் வரும் 16-ஆம் தேதி முதல் 6-ல் சூரியன் சஞ்சரிக்க இருப்பதாலும் எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் அனுகூலமான பலன்களே உண்டாகும். தாராள தனவரவுகளால் அனைத்து தேவைகளும் பூர்த்தியாகும். குடும்பத்தில் சுப காரியங்கள் கைகூடி மகிழ்ச்சி அளிக்கும். கணவன்- மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். கடன்கள் படிப்படியாக குறையும். கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் சரளமான நிலையிருக்கும் என்றாலும் சிந்தித்து செயல்படுவது நல்லது.

பல பெரிய மனிதர்களின் தொடர்புகளால் பெயர், புகழ் உயரும். கொடுத்த கடன்களும் தடையின்றி வசூலாகும். ஆடை, ஆபரணம் போன்றவற்றை வாங்குவீர்கள். புத்திரர்களால் அனுகூலம் ஏற்படும். செய்யும் தொழில், வியாபாரத்திலும் போட்ட முதலீட்டை விட இரு மடங்கு லாபம் கிட்டும். கூட்டாளிகளிமும், தொழிலாளர்களிடமும் விட்டு கொடுத்து சென்றால் மேலும் தொழிலை விரிவுபடுத்த முடியும். உற்றார், உறவிர்கள் வழியிலும் அனுகூலங்கள் உண்டாகும். உடல் ஆரோக்கிய விஷயத்தில் கவனம் செலுத்துவது உத்தமம். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்த்த உயர்வுகள் கிடைக்கும். மாணவர்கள் எதிர்பார்த்த மதிப்பெண்ணை பெற்று மகிழ்ச்சி அடைவார்கள். அரசு வழியிலும் ஆதாயங்கள் கிட்டும். தினமும் விநாயகர் வழிபாடு மேற்கொள்வது உத்தமம்.

வெற்றி தரும் நாட்கள் – 15, 16.
சந்திராஷ்டமம் -17-07-2018 மதியம் 03.09 மணி முதல் 19-07-2018 இரவு 07.56 மணி வரை.

மீனம் பூரட்டாதி 4-ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி .

மற்றவர்களின் சுக துக்கங்களையும் தன்னுடைய சுக துக்கங்களாக நினைக்கும் பண்பு கொண்ட மீன ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 5-ல் புதன் 11-ல் செவ்வாய், கேது சஞ்சரிப்பதால் எதிர்பாராத உதவிகள் சில கிடைத்து ஏற்றங்களை அடைவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் உஷ்ண சம்மந்தப்பட்ட பாதிப்புகள் உண்டாகி மருத்துவ செலவுகளை ஏற்படுத்தும். கணவன்- மனைவியிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் மறைந்து ஒற்றுமை நிலவும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் சில தடைகளுக்குப்பின் அனுகூலம் உண்டாகும். பணவரவுகள் ஏற்ற இறக்கமாக இருக்கும். தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும்.

முடிந்தவரை தேவையற்ற செலவுகளை குறைத்து கொள்வது உத்தமம். குரு பகவான் சாதகமற்று இருப்பதால் கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் கவனமாக இருப்பது நல்லது. தொழில், வியாபாரத்தில் சற்று மந்தமான நிலையே காணப்படும் என்றாலும் லாபங்கள் தடைப்படாது. அடிக்கடி பயணங்கள் மேற்கொள்ளும் வாய்ப்பும் உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு உடன் பணிபுரிபவர்களின் ஆதரவுகள் ஓரளவுக்கு மகிழ்ச்சியளிக்கும். முன்கோபத்தை குறைப்பது, பேச்சில் நிதானத்தைக் கடைபிடிப்பது, உற்றார் உறவினர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. மாணவர்களுக்கு தேவையற்றப் பொழுது போக்குகளால் கல்வியில் நாட்டம் குறையும். பெற்றோர், ஆசிரியர்களின் ஆதரவு மகிழ்ச்சி அளிப்பதாக அமையும். தட்சிணாமூர்த்தியை வழிபட்டால் நன்மைகள் உண்டாகும்.

வெற்றி தரும் நாட்கள் – 16, 17, 18, 19.
சந்திராஷ்டமம் – 19-07-2018 இரவு 07.56 மணி முதல் 22-07-2018 அதிகாலை 04.14 மணி வரை.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleகடக ராசிக்காரர்களே உங்கள் வாழ்க்கை அமைப்பும் எப்படி இருக்கும் என்று தெரிந்துகொள்ளுங்கள்! நீங்க இப்படித்தான்!
Next articleஇந்த அறிகுறிகளை அலட்சியப்படுத்த வேண்டாம்? இதனால் யாருக்கெல்லாம் ஆபத்து வரும் தெரியுமா?