திருநெல்வேலி மாவட்டத்தில் கணவர் இரண்டாவது திருமணம் செய்து கொண்டதால், வேதனை அடைந்த மனைவி வைரமுத்து தனது தாயுடன் சேர்ந்து விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மாயராமன் – வைரமுத்து தம்பதிக்கு 14 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. ஆனால், குழந்தை இல்லாததை காரணம் காட்டி, மாயராமன், தனது மனைவி வைரமுத்துவின் சொத்துக்களை எழுதிவாங்கியுள்ளார்.
கடந்த வாரம் மாயராமன் வேறொரு பெண்ணைத் திருமணம் செய்த விவரம், அவர் முகநூலில் பதிவிட்டதைப் பார்த்தே வைரமுத்துக்குத் தெரிய வந்துள்ளது.
இது வைரமுத்துக்கு மட்டும் அல்லாமல் அவரின் தாயார் பொன்னம்மாளுக்கும் மன வேதனையை ஏற்படுத்தி இருக்கிறது.
அதனால் வேதனையடைந்த வைரமுத்துவும் பொன்னம்மாளும் நெல்லை மாவட்டக் காவல்துறை கண்காணிப்பாளர் அருண் சக்திகுமாரைச் சந்தித்து மனுக் கொடுத்தனர். ஆனால், எஸ்.பி அலுவலகத்தில் கொடுக்கப்பட்ட புகாரின் மீதும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இதனால் வைரமுத்து மனவேதனையில் இருந்துள்ளார். ஒரு கட்டத்தில் தனது தாயார் பொன்னம்மாளுடன் சேர்ந்து விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனர்.
தகவலறிந்து வந்த பொலிசார், சடலங்களை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
மனைவி வைரமுத்துவின் இறப்பு குறித்து கணவரிடம் பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.





