தமிழ்நாட்டில் இளம் பெண்ணை கொன்று நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை பொலிசார் தேடி வருகின்றனர்.
புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தை சேர்ந்த நேரு – லாவண்யா (23) தம்பதிக்கு ஒரு குழந்தை உள்ளது.
நேரு சிங்கப்பூரில் வேலை பார்த்து வருகிறார். லாவண்யா உள்ளூரில் உள்ள வயல்பகுதியில் உள்ள வீட்டில் தனியாக வசித்து வந்தார். இந்தநிலையில் நேற்று காலை நீண்ட நேரம் ஆகியும் வீட்டில் இருந்து லாவண்யா வெளியே வரவில்லை.
இதையடுத்து சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் லாவண்யா வீட்டுக்குள் சென்று பார்த்த போது அவர் ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்தார்.
இது குறித்து பொலிசாருக்கு தகவல் தரப்பட்ட நிலையில் சம்பவ இடத்துக்கு வந்தனர்.
அப்போது வீட்டிற்குள் பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த பொருட்கள் மற்றும் துணிமணிகள் சிதறி கிடந்தன. மேலும் அதில் இருந்த பணமும், லாவண்யா அணிந்திருந்த நகைகளும் மாயமானது தெரியவந்தது.
பொலிசார் கூறுகையில், லாவண்யா நகைகளை கொடுக்க மறுத்து போராடவே ஆத்திரத்தில் மர்மநபர்கள் அவரை அடித்து கொன்று விட்டு, அவர் அணிந்திருந்த நகைகளை கொள்ளையடித்து சென்றிருக்கலாம்.
லாவண்யா கொலை செய்யப்பட்டது குறித்து வெளிநாட்டில் உள்ள அவரது கணவர் நேருவுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அவர் வெளிநாட்டில் இருந்து விமானம் மூலம் நேற்று மாலை வந்து விட்டார்.
கொலையாளிகளை தேடும் முயற்சியில் முழு மூச்சாக இறங்கியுள்ளோம் என கூறியுள்ளனர்.