சர்வதேசம் தலையிடாமைக்கு இதுவே காரணம்! வீ.ஆனந்தசங்கரி

0

வீ.ஆனந்தசங்கரி,வீ.ஆனந்தசங்கரி சர்வதேசம் தலையிடாமைக்கு இதுவே காரணம்! வீ.ஆனந்தசங்கரி

2004ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனது தேர்தல் நியமனப் பத்திரத்தைக் கையளிக்கும் போது விடுதலைப் புலிகளின் சார்பிலேயே கையளிக்கின்றோம் என சம்பந்தன் திருவாய் மலர்ந்தருளினார்.

அதன் மூலம் விடுதலைப் புலிகள் ஜனநாயக அமைப்புக்குள் வந்தார்களா? அல்லது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விடுதலைப் புலிகளின் அமைப்புக்குள் உள்வாங்கப்பட்டதா? என்பது இலங்கை அரசாங்கத்திற்கும் சர்வதேச சமூகத்திற்கும் ஒரு குழப்பமான நிலையை உருவாக்கிவிட்டது என தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்.

அவர் இன்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

குறித்த அறிக்கையில்,

நடந்துமுடிந்த ஜனாதிபதித்தேர்தல் தமிழ் மக்களுக்கு ஒரு படிப்பினையைத் தந்துள்ளது. 30 வருடகால யுத்தம் ஏற்படுத்திய வடுக்கள், இறுதி யுத்தம் நடந்த நேரத்தில் நடந்தேறிய அவலங்கள், தொடர்ந்து யுத்தம் நடந்து முடிந்து 10 வருடங்ளுக்கு மேலாகியும் எமது மக்களின் அபிலாசைகள், எதிர்பார்ப்புகள் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான வாழ்வாதார உதவிகள் போன்றவற்றில் நாம் கண்ட பலாபலன்கள் என்ன? ஏன் எதுவும் முறைப்படி நடக்கவில்லை! இனியாவது சிந்திப்போமா?

எமது மக்களின் நியாயமான கோரிக்கைகள் கூட மாறிமாறி வந்த அரசுகளால் தட்டிக் கழிக்கப்பட்டன. சர்வதேச சமூகம் கண்டுகொள்ளவேயில்லை. ஏன்? இவைகளை முறைப்படி தட்டிக்கேட்பதற்கு மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஒரு ஜனநாயக அமைப்பு கிடையாது என்பதே முக்கியமான காரணமாகும்.

2004 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனது தேர்தல் நியமனப் பத்திரத்தைக் கையளிக்கும்போது விடுதலைப் புலிகளின் சார்பிலேயே கையளிக்கின்றோம் என சம்பந்தன் திருவாய் மலர்ந்தருளினார்.

அதன்மூலம் விடுதலைப் புலிகள் ஜனநாயக அமைப்புக்குள் வந்தார்களா? அல்லது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விடுதலைப் புலிகளின் அமைப்புக்குள் உள்வாங்கப்பட்டதா? என்பது இலங்கை அரசாங்கத்திற்கும் சர்வதேச சமூகத்திற்கும் ஒரு குழப்பமான நிலையை உருவாக்கிவிட்டது.

2004 – 2009 வரை இறுதியுத்தம் ஆரம்பமாவதற்கு முன்னர் நடந்த படுகொலைகள், ஆட்கடத்தல்கள், சிறுவர்களை யுத்தத்தில் இணைத்தல் போன்றவற்றில் கூட்டமைப்பு பாராமுகமாய் இருந்தது. அதுமட்டுமல்ல அதில் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் 40,000 சவப்பெட்டிகளை வடக்கிலிருந்து அனுப்புவோம் எனக் கூறியிருந்தார்.

இவைகளை கூட்டிக்கழித்து கணக்குப் போட்ட சர்வதேச சமூகமும், இலங்கை அரசும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விடுதலைப் புலிகளால் உள்வாங்கப்பட்டு அவர்களின் கொள்கைகளுக்கு ஏதுவாக செயற்படுகிறார்கள் என்ற முடிவுக்கு வந்தன.

அதனால்தான் பல்லாயிரக்கணக்கான மக்கள் முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்டபோது கூட்டமைப்பின் குரல்கள் விடுதலைப் புலிகளின் குரல்களாகவே சர்வதேச சமூகத்தாலும் இலங்கை அரசாலும் பார்க்கப்பட்டன.

இல்லாவிடில் 1987ஆம் ஆண்டு வடமாராட்சித் தாக்குதலின்போது பதவிகளைத் துறந்துவிட்டு வெறுமனேயிருந்த அமரர் அமிர்தலிங்கம் அவர்களின் தலைமையிலான தமிழர் விடுதலைக் கூட்டணியின் குரலுக்கு செவிசாய்த்து அன்றைய இந்திய மத்திய மாநில அரசுகள் உடனடியாக விமானத்தில் உணவுப்பொதிகளை வழங்கி தமிழர்களுக்கு நாங்கள் இருக்கின்றோம் என்று உதவிக்கு வந்தன.

ஆனால் இந்திய அரசு முள்ளிவாய்க்கால் படுகொலையின்போது கண்டும் காணாமல் இருந்தது ஏன்? தமிழர் விடுதலைக் கூட்டணியின் குரல் ஒரு ஜனநாயக குரலாக பார்க்கப்பட்டது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் குரல் ஜனநாயகத்திற்கு எதிரான ஒரு அமைப்பின் குரலாகவே பார்க்கப்பட்டது இதுவே யதார்த்தமான உண்மை!

1982ஆம் ஆண்டு அன்றைய ஜெயவர்த்ன அரசு மக்கள் தந்த பாராளுமன்ற ஜனநாயக ஆணையை மீறி தேர்தல் இல்லாமலே மேலும் 6ஆண்டு காலத்தை நீடித்தபோது அரசின் செயல் மக்கள் ஆணையையும், ஜனநாயகப் பண்புகளையும் மீறிய செயலென்று நான் உட்பட தமிழர் விடுதலைக் கூட்டணியின் 16 பாராளுமன்ற உறுப்பினர்களும் பதவிகளைத் துறந்து ஜனநாயகத்திற்கு மதிப்பளித்தோம்.

அது சர்வதேச சமூகத்தால் பெரிதும் பாராட்டப்பட்டது. அதனால்தான் 2004 வரை தமிழர் விடுதலைக் கூட்டணியின் மக்கள் நலன் சார்ந்த கோரிக்கைகள் சர்வதேச சமூகத்தாலும் ஏற்றுக் கொள்ளப்பட்டன. அதன் விளைவே இந்திய இலங்கை ஒப்பந்தம் மூலம் ஏற்படுத்தப்பட்ட மாகாண சபைகளுக்கான அதிகார அமைப்பு!

ஆனால் 2004ஆம் ஆண்டு வடக்கு கிழக்கு மாகாணங்களில் நடந்த தேர்தலில் வாக்களித்த முறை முற்றிலும் ஜனநாயகத்திற்கு விரோதமாக கள்ள வாக்குகள், ஏனையவர்களை வாக்களிக்காது தடுத்துநிறுத்தி அவர்களின் வாக்குகளை பறித்துச் சென்று வாக்களித்தமை, இறந்தவர்கள், வெளிநாட்டில் வசிப்பவர்களது வாக்குகளை அளித்தமை என்பனவற்றைச் சுட்டிக்காட்டி தேர்தல் கண்காணிப்புக் குழுக்கள், மற்றும் சர்வதேச அமைப்புக்கள் அனைத்தும் மறுவாக்குப் பதிவுக்கு கோரிக்கை விடுத்திருந்தன.

சட்டத்தில் இடமில்லை என இலங்கை அரசு அதனை நிராகரித்திருந்தது. ஆனால் தெரிவுசெய்யப்பட்ட கூட்டமைப்பின் 22 நாடாளுமன்ற உறுப்பினர்களும் தேர்தல் கண்காணிப்பு அமைப்புக்களின் கோரிக்கைகளை ஏற்று தமிழர் விடுதலைக் கூட்டணி 1983ல் செயற்பட்டது .

இது ஜனநாயகத்திற்கு விரோதமான தெரிவு என்று தமது பதவிகளைத் துறந்திருந்தால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒரு ஜனநாயகத்திற்கு முன்னுதாரணமான அமைப்பு என்பதை சர்வதேச சமூகம் ஏற்றுக் கொண்டிருக்கும்.

அதைச் செய்யத் தவறிய காரணத்தால் இன்றுவரை இலங்கை அரசும்சரி, சர்வதேச சமூகமும்சரி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை ஒரு ஜனநாயக அமைப்பாக பார்க்க விரும்பவில்லை! எனவே தமிழ் மக்கள் சார்பாக அவர்களது நியாயமான கோரிக்கைகளும் இன்றுவரை ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை.

முப்பெருந்தலைவர்களின் ஆசியுடனும், வழிகாட்டுதலிலும் உருவாக்கப்பட்ட தமிழர் விடுதலைக் கூட்டணி மட்டும்தான் இலங்கையில், அதுவும் வடக்கு கிழக்கு தமிழ்மக்களின் ஒரேயொரு ஜனநாயக அமைப்பு என்பதே உலகறிந்த உண்மை!

இதனைப் பலப்படுத்தி இதன்மூலம் முன்வைக்கப்படும் கோரிக்கைகளைதான் சர்வதேச சமூகமும், இலங்கை அரசும் செவிமடுத்து ஏற்றுக் கொள்ளும் என்பதனை இனியாவது தமிழ்மக்கள் உணர்ந்து எம்முடன் ஓரணியாக இணைந்து செயற்பட வருமாறு அன்புடன் அழைக்கின்றோம்.

புலம்பெயர்ந்த தமிழ் அமைப்புக்கள் நீங்கள் எவ்வளவுதான கொட்டிக் கொடுத்தாலும், போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முறைப்படி எதுவும் சென்று சேரவில்லை என்பது உங்களுக்கே நன்கு தெரியும்.

2005ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் 49% சிங்கள மக்கள் அன்றைய ஜனாதிபதி வேட்பாளர் ரணில் விக்கிரமசிங்கவின் சமஷ்டி முறையான அமைப்பை ஏற்று ஆதரவாக வாக்களித்தார்கள்.

அன்று கூட்டமைப்பு தமிழ்மக்களை வாக்களிக்காது தடுத்து, பகிஷ்கரிக்க கோரியது தமிழ் மக்களுக்குச் செய்த மிகப் பெரிய துரோகமும் வரலாற்றுத் தவறுமாகும்.

2010ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் விடுதலைப் புலிகளை பூண்டோடு அழித்து விட்டேன் என்று கொக்கரித்த சரத்பொன்சேகாவுக்கு வாக்களிக்கக்கோரி தமிழ் மக்களுக்கும், தங்களின் தியாகங்கள் மூலம் பதவிகளை பெற்றுக் கொடுத்த விடுதலைப் புலிகளுக்கும் மீண்டும் துரோகம் செய்தார்கள்.

2015ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் நல்லிணக்க அரசில் எதிர்க்கட்சித் தலைவர் பதவியைப் பெற்றுக்கொண்டு அளவுக்கு மிஞ்சிய சலுகைகளை அனுபவித்துவிட்டு, தமிழ் மக்களுக்கு எதுவுமே செய்யாது மைத்திரிபால சிறிசேன எங்களை ஏமாற்றிவிட்டார் என்று சோரம்போனார்கள்!

2019ல் சஜித் பிரேமதாசாவுக்கு வாக்களிக்கக்கோரி, வீர வசனங்கள் பேசி, அன்று சமஷ்டியை ஏற்று வாக்களித்த சிங்கள மக்கள், நாம் இனி எவருக்கும் விட்டுக்கொடுக்கமாட்டோம் என்று ஒரு பக்கம் சார்ந்து வாக்களித்து விட்டார்கள்.

இதன்மூலம் தமிழ்மக்களை மேலும்மேலும் அனாதைகள் ஆக்கி நட்டாற்றில் விட்டுவிட்டார்கள். இதுதான் கூட்டமைப்புச் செய்த இமாலய சாதனை!

இனியாவது சுயநலம் கொண்டு பதவிகளுக்காக சோரம்போகும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வார்த்தை ஜாலங்களுக்கு மயங்காது, அனைவரும் சிந்தித்துச் செயற்பட வேண்டுமெனக் கேட்டுக்கொள்கின்றோம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleபாணந்துறை வீதிகளில் தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு!
Next articleஜனாதிபதி கோட்டாபய முன்னிலையில் புதிய அமைச்சர்கள் சற்று முன்னர் பதவிப் பிரமாணம்