வேலூர் மாவட்டத்தில் வீட்டு வாடகைக்காக 8 வயது சிறுவன் கொலை செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கூலித்தொழிலாளி சங்கர்- வினோதினி. இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளன. முதல் குழந்தையான கிஷோர்குமார் (8) உமர்ரோட்டில் உள்ள நகராட்சி துவக்கப்பள்ளியில் 4-ஆம் வகுப்பு படித்து வந்தான்.
கடந்த 5 ஆம் திகதி இச்சிறுவன் மர்மமான முறையில் காணாமல் போயுள்ளான், எங்கு தேடியும் கிடைக்காத நிலையில் கிஷோரின் தந்தை சங்கர், நகர காவல் நிலையத்தில் தனது மகனை காணவில்லை என்று புகார் கொடுத்தார்.
இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை வேலூரில் உள்ள பெங்களூர்- சென்னை செல்லும் தேசிய நெடுஞ்சாலையோரம் உள்ள பாழடைந்த கிணற்றில் இருந்து தூர்நாற்றம் வீசியிருக்கிறது.
இதனை அப்பகுதி மக்கள் எட்டிப்பார்த்தபோது, கிணற்றில் சிறுவன் ஒருவனின் சடலம் மிதந்து தெரியவந்தது.
தகவலின் பேரில் அங்கு வந்த தீயணைப்பு வீரர்கள் சடலத்தை மீட்டனர். அந்த சடலம், காணாமல் போன சிறுவன் கிஷோர்குமார் என்பது விசாரணையில் தெரியவந்தது.
அதே பகுதியை சேர்ந்த விக்னேஷ் என்ற இளைஞருக்கு கடந்த ஆண்டுதான் திருமணம் நடைபெற்றது
வாடகை வீட்டில் வசித்து வந்த விக்னேஷ், மாத வாடகையை குறிப்பிட்ட நாளில் கட்ட பணம் இல்லாமல் என்ன செய்வது என்று தவித்திருக்கிறார்.
அந்த நேரத்தில் சிறுவன் கிஷோர் கையில் செல்போனுடன் விளையாடிக் கொண்டிருந்ததை பார்த்து, அவன் கையில் வைத்திருந்த செல்போனை பிடுங்கியிருக்கிறார். இது வெளியில் தெரியாமல் இருக்க சிறுவனை அருகில் இருந்த கிணற்றில் தள்ளிவிட்டு அங்கிருந்து சென்றிருக்கிறார்.
பின்னர், அந்த செல்போனை நண்பனின் உதவியுடன் விற்பனை செய்து, கிடைத்த பணத்தை வைத்து வாடகையை கட்டியுள்ளார்.
சிறுவன் கையில் வைத்திருந்த செல்போன் போன் மூலமே அவர் கொலை செய்யப்பட்டதற்கான தடயம் பொலிசாருக்கு தெரியவந்துள்ளது.
சிறுவனின் சடலம் கண்டுபிடிக்கப்பட்ட 24 மணிநேரத்தில் விக்னேஷ் கைது செய்யப்பட்ட சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
வாடகை பணத்திற்காக இப்படி சிறுவனை கொலை செய்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.