மரண தண்டனையை நிறைவேற்றுவதாக இருந்தால் முதலில் புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை வழக்கில் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்டுள்ளவர்களை முதலில் தூக்கிலிடுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணதுங்க இந்த கோரிக்கையினை விடுத்துள்ளார். கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்தும் பேசிய அவர், “மீண்டும் மரண தண்டனையை நடைமுறைப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. தூக்கிலிடுவதாக இருந்தால் முதலில் வித்தியா படுகொலையாளிகளை தூக்கிலிடுங்கள்.
அதைவிடுத்து, போதைப்பொருள் வியாபாரிகளையும், பாதாள உலக குழுவினரையும் இலக்கு வைத்து இந்த நடவடிக்கை மேற்கொள்கின்றமையானது பாரிய சந்தேகத்தை ஏற்படுத்துகின்றது.
தற்போதைய அரசாங்கத்தின் பின்னணியில் பாதாள உலக குழுவினர் இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. இவ்வாறான நிலையில், அவற்றை மூடி மறைக்கவா அரசாங்கம் இந்த நடவடிக்கையினை முன்னெடுத்துள்ளது” என அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.