வார ராசி பலன் – ஆகஸ்ட் 19 முதல் 25 வரை!

0

கிரக மாற்றம்
19-08-2018 புதன் வக்ர நிவர்த்தி காலை 09.54 மணிக்கு

இவ்வார சந்திரன் சஞ்சரிக்கும் ராசிகள்
விருச்சிகம் 18-08-2018 காலை 10.57 மணி முதல் 20-08-2018 இரவு 09.37 மணி வரை.
தனுசு 20-08-2018 இரவு 09.37 மணி முதல் 23-08-2018 காலை 10.26 மணி வரை.
மகரம் 23-08-2018 காலை 10.26 மணி முதல் 25-08-2018 இரவு 11.18 மணி வரை.

இவ்வாரம் சுப முகூர்த்த நாட்கள் இல்லை

மேஷம் அசுவனி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம்.
எந்த ஒரு விஷயத்தையும் ஒளிவு மறைவின்றி மனம் திறந்து பேசும் குணம் கொண்ட மேஷ ராசி நேயர்களே, உங்களுக்கு குரு பார்வை ஜென்ம ராசிக்கு இருப்பதாலும் செவ்வாய் 10-ல் இருப்பதாலும் பொருளாதாரா நிலை திருப்திகரமாக இருக்கும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். எதிர்பாராத வகையில் திடீர் தனவரவுகளும் கிடைக்கப் பெறுவதால் வாழ்க்கைத் தரம் உயரும். கணவன்- மனைவி ஒற்றுமை சிறப்பாகவே இருக்கும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்தினால் தேவையற்ற மருத்துவச் செலவுகளைத் தவிர்க்கலாம்.

உங்கள் ராசிக்கு 4-ல் ராகு 5-ல் சூரியன் சஞ்சரிப்பதால் உடனிருப்பவர்களையும், உற்றார் உறவினர்களையும் அனுசரித்து செல்வது நல்லது. தொழில், வியாபாரத்தில் போட்டிகள் அதிகரித்தாலும் எதிர்பார்த்த லாபங்களை பெற்று விட முடியும். கூட்டாளிகள் தேவையற்ற வீண் பிரச்சனைகளை ஏற்படுத்தினாலும் ஓரளவுக்கு ஆதரவாக இருப்பார்கள். தேவையற்ற பயணங்களை தவிர்ப்பதினால் அலைச்சல்களை குறைத்து கொள்ள முடியும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகளை பெற தடைகள் நிலவினாலும் பணியில் நிம்மதியான நிலை இருக்கும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தி லாபம் காண முடியும். மாணவர்கள் நல்ல மதிப்பெண்களை பெற்ற மகிழ்ச்சி அடைவார்கள். சிவ வழிபாடு மற்றும் துர்கையம்மன் வழிபாடு செய்வது நல்லது.

வெற்றி தரும் நாட்கள் – 23, 24, 25.
சந்திராஷ்டமம் – 18-08-2018 காலை 10.57 மணி முதல் 20-08-2018 இரவு 09.37 மணி வரை.

ரிஷபம் கிருத்திகை 2,3,4-ஆம் பாதங்கள் ரோகிணி, மிருகசீரிஷம் 1,2-ஆம் பாதங்கள்.
பிறர் தம் வார்த்தைகளில் குற்றம் குறை கண்டுபிடிக்காதவாறு பேசும் ஆற்றல் கொண்ட ரிஷப ராசி நேயர்களே, உங்கள் ராசியதிபதி சுக்கிரன் பஞ்சம ஸ்தானமான 5-ல் இருப்பதும் 3-ல் ராகு சஞ்சரிப்பதும் எடுக்கும் முயற்சியில் சாதகமான பலன்களை தரக்கூடிய அமைப்பாகும். உங்கள் ராசிக்கு 4-ல் சூரியன் 6-ல் குரு சஞ்சரிப்பதால் தேவையற்ற அலைச்சல் பொருளாதார நெருக்கடிகள் நிலவும். உடல் ஆரோக்கியத்தில் மந்தநிலை, சோர்வு உற்சாகமின்மை உண்டாகும். பண வரவுகளில் சிறுசிறு இடையூறுகள் ஏற்பட்டாலும் எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். குடும்பத்தில் ஒற்றுமையும் மகிழ்ச்சியும் நிறைந்தே இருக்கும். திருமண சுபமுயற்சிகளில் அனுகூலமான பலன் உண்டாகும்.

அசையா சொத்துகளால் சிறுசிறு விரயங்களை சந்திக்க நேரிடும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களிடம் விட்டு கொடுத்து நடப்பது நல்லது. பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்ய நினைக்கும் காரியங்களில் சிந்தித்து செயல்படவும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணியில் நிம்மதியான நிலையிருக்கும். உடன் பணிபுரிபவர்களும் ஒரளவுக்கு சாதகமாகச் செயல்படுவார்கள். பணம் கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை கடனாக கொடுப்பதைத் தவிர்க்கவும். புதிய வேலை தேடுபவர்கள் கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்தி கொள்வது உத்தமம். மாணவர்களுக்கு கல்வியில் மந்தமான நிலை இருந்தாலும் எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்கும். குருப்ரீதியாக தட்சிணாமூர்த்தியை வழிபாடு செய்வது உத்தமம்.

வெற்றி தரும் நாட்கள் – 19, 20.
சந்திராஷ்டமம் – 20-08-2018 இரவு 09.37 மணி முதல் 23-08-2018 காலை 10.26 மணி வரை.

மிதுனம் மிருகசீரிஷம் 3,4-ஆம் பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம் 1,2,3-ஆம் பாதங்கள்.
எந்த வித கடினமான வேலைகளையும் பொறுப்புடன் செய்து முடிக்கும் ஆற்றல் கொண்ட மிதுன ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு முயற்சி ஸ்தானமான 3-ல் சூரியன் சஞ்சரிப்பதும் 4-ல் சுக்கிரன், 5-ல் குரு சஞ்சரிப்பதும் அற்புதமான அமைப்பு என்பதால் நீங்கள் நினைத்ததெல்லாம் நிறைவேறக்கூடிய சிறப்பான வாரமாக வரும் நாட்கள் இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் நிறைந்திருக்கும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் தாமதப் பலன் உண்டாகும். சிலருக்கு வீடு மனை வாங்க கூடிய வாய்ப்பு அமையும். உடல் ஆரோக்கியத்தில் சற்று மந்தநிலை ஏற்பட்டாலும் அன்றாட பணிகளில் சுறுசுறுப்புடன் செயல்பட முடியும்.

உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியளிப்பதாக இருக்கும். பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது நற்பலனை தரும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தி லாபம் காண முடியும். கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றி நற்பெயரை எடுப்பீர்கள். தொழில், வியாபாரத்திலிருந்த மறைமுக எதிர்ப்புகள் யாவும் குறைவதால் லாபங்கள் சிறப்பாக இருக்கும். கிடைக்க வேண்டிய வாய்ப்புகளும் தடையின்றி கிடைக்கும். உத்தியோகஸ்தர்கள் பணியில் திறம்பட செயல்பட முடியும். எதிர்பார்க்கும் உயர்வுகள் கிடைப்பதற்கான சந்தர்ப்பங்கள் அமையும். பயணங்களால் அனுகூலப்பலனை அடைவீர்கள். மாணவர்களுக்கு எதிர்பார்க்கும் உதவிகள் கிடைக்கும். கல்வி தரமும் உயரும். முருக வழிபாடும் அம்மன் வழிபாடும் செய்தால் சிறப்பான பலன்கள் உண்டாகும்.

வெற்றி தரும் நாட்கள் – 19, 20, 21, 22.
சந்திராஷ்டமம் – 23-08-2018 காலை 10.26 மணி முதல் 25-08-2018 இரவு 11.18 மணி வரை.

கடகம் புனர்பூசம் 4-ஆம் பாதம், பூசம், ஆயில்யம்.
கற்பனை திறனும் நல்ல ஞாபக சக்தியும் கொண்ட கடக ராசி நேயர்களே உங்களுக்கு ஜென்ம ராசியில் ராகு 2-ல் சூரியன் 7-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் எதிலும் நிதானமாக செயல்பட வேண்டிய வாரமாகும். எந்தவொரு காரியத்திலும் ஒரு முறைக்கு பல முறை சிந்தித்துச் செயல்படுவது நற்பலனை தரும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றி மருத்துவ செலவுகளை ஏற்படுத்தும். பணவரவுகள் தேவைக்கு ஏற்றபடியிருக்கும் என்றாலும் குரு 4-ல் சஞ்சரிப்பதால் ஆடம்பரச் செலவுகளைக் குறைத்துக் கொள்வது நல்லது. குடும்பத்தில் உள்ளவர்களிடமும் உற்றார் உறவினர்களிடமும் வீண் வாக்கு வாதங்கள் உண்டாகும். பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது முன்கோபத்தை குறைப்பது உத்தமம்.

திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தடைகளுக்குப்பின் அனுகூலம் ஏற்படும். பணம் கொடுக்கல்- வாங்கலில் சற்று கவனம் தேவை. கொடுத்த கடனை வசூலிப்பதில் சிறு சிறு பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். தொழில், வியாபாரம் போன்றவற்றில் எதிர்பார்த்த லாபத்தை அடைய சற்று எதிர்நீச்சல் போட வேண்டியிருக்கும். மறைமுக எதிர்ப்புகளும் போட்டிகளும் அதிகரிக்க கூடும். தேவையற்ற பயணங்களைத் தவிர்த்து விடுவது நல்லது. உத்தியோகத்தில் வேலைபளு சற்று அதிகரிக்கும். சிலருக்கு எதிர்பாராத இடமாற்றங்களும் உண்டாகும். மாணவர்கள் தேவையற்ற பொழுது போக்குகளில் ஈடுபடுவதை தவிர்த்து கல்வியில் அதிக கவனத்தை செலுத்துவது நல்லது. திங்கட்கிழமை விரதமிருந்து சிவ பெருமானையும் பார்வதி தேவியையும் வழிபாடு செய்வது சிறந்தது.

வெற்றி தரும் நாட்கள் – 21, 22, 23, 24, 25.

சிம்மம் மகம், பூரம். உத்திரம் 1-ஆம் பாதம்.
தனக்கு நிகரில்லாதவர்களிடம் பழகுவதை தவிர்த்து விடும் குணம் கொண்ட சிம்ம ராசி நேயர்களே, ஜென்ம ராசியில் சூரியன் 3-ல் குரு சஞ்சரிப்பதால் உணர்ச்சி வசப்படாமல் நிதானமாக செயல்படுவது நல்லது. எதிலும் சிக்கனமாக இருப்பதன் மூலம் இருக்கும் பிரச்சினைகளை சமாளிக்க முடியும். சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலப்பலன் உண்டாகும். கணவன்- மனைவி இடையே தேவையற்ற வாக்கு வாதங்கள் ஏற்பட்டாலும் ஒற்றுமை சிறப்பாகவே இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றி மருத்துவ செலவுகளை ஏற்படுத்தும். உற்றார் உறவினர்களை அனுசரித்து நடந்து கொண்டால் சற்றே ஆதரவாக செயல்படுவார்கள்.

பணவரவுகள் சற்று ஏற்ற இறக்கமாக இருந்தாலும் உங்கள் ராசிக்கு 2-ல் சுக்கிரன் 6-ல் செவ்வாய், கேது சஞ்சரிப்பதால் நெருங்கியவர்களின் உதவியால் உங்கள் தேவைகள் பூர்த்தியாகும் என்றாலும் தேவையற்ற செலவுகளைக் குறைப்பது நல்லது. கொடுக்கல்- வாங்கலில் சரளமான நிலை இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்க்கும் உயர்வுகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் அமையும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு பயணங்களால் அலைச்சல்கள் அதிகரிக்கும் என்றாலும் அதன் மூலம் அனுகூலப்பலன்களும் உண்டாகும். புதிய கூட்டாளிகளின் சேர்க்கையால் லாபங்களும் அபிவிருத்தியும் பெருகும். மாணவர்கள் உடல் நல பாதிப்புகளால் படிப்பில் கவனம் தெலுத்த முடியாத சூழ்நிலை ஏற்படும். அம்மன் வழிபாடு செய்வது உத்தமம்.
வெற்றி தரும் நாட்கள் – 23, 24, 25.

கன்னி உத்திரம் 2,3,4-ஆம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1,2-ஆம் பாதங்கள்.
எவ்வளவு அவசரமான காரியமாக இருந்தாலும் மற்றவர்களின் சௌகர்யங்களை ஆராய்ந்தே செயல்படும் பண்பு கொண்ட கன்னி ராசி நேயர்களே உங்கள் ராசியாதிபதி புதன் ராகு சேர்க்கைப் பெற்று லாப ஸ்தானத்தில் இருப்பதும் 2-ஆம் வீட்டில் குரு சஞ்சரிப்பதும் சகல விதத்திலும் ஏற்றத்தை தரக்கூடிய நல்ல அமைப்பாகும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் சாதகமான பலன்களே உண்டாகும். தாராள தனவரவுகளால் அனைத்து தேவைகளும் பூர்த்தியாகும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் நற்பலன் அமையும். கணவன்- மனைவி இடையே அன்யோன்யம் அதிகரிக்கும்.

கடன்களும் குறையும். உற்றார் உறவினர்களை அனுசரித்து நடந்து கொள்வது, உடல் ஆரோக்கிய விஷயத்தில் கவனம் செலுத்துவது உத்தமம். கொடுக்கல்- வாங்கலில் சரளமான நிலையிருக்கும். பல பெரிய மனிதர்களின் தொடர்பு மகிழ்ச்சியினை உண்டாக்கும். கொடுத்த கடன்களும் தடையின்றி வசூலாகும். பொன், பொருள் சேரும் வாய்ப்பு அமையும். செய்யும் தொழில், வியாபாரத்திலும் போட்ட முதலீட்டை விட இரு மடங்கு லாபம் கிட்டும். கூட்டாளிகளின் ஒற்றுமையான செயல்பாடுகளால் மேலும் மேலும் தொழிலை விரிவுபடுத்த முடியும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பணியில் திறம்பட செயல்பட்டு உயரதிகாரிகளின் பாராட்டுதல்களை பெறுவீர்கள். புதிய வேலை தேடுபவர்களுக்கு தகுதிக்கேற்ற வேலை வாய்ப்பு அமையும். மாணவர்கள் கல்வியில் உயர்வடைவார்கள். சிவ பெருமானையும் சனீஸ்வர பகவானையும் வழிபாடு செய்தால் கஷ்டங்கள் குறையும்.

வெற்றி தரும் நாட்கள் 19, 20.

துலாம் சித்திரை 3,4-ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம் 1,2,3-ஆம் பாதங்கள்.
வசீகர தோற்றமும், உறுதியான பேச்சாற்றலும் கொண்ட துலா ராசி நேயர்களே உங்கள் ராசிக்கு 10-ல் புதன் 11-ல் சூரியன் சஞ்சரிப்பதால் மதிப்பும் மரியாதையும் மேலோங்ககூடிய வாரமாக இவ்வாரம் இருக்கும். சனி 3-ல் சஞ்சரிப்பதால் எதிலும் தைரியத்துடன் செயல்படுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியும், சுபிட்சமும் நிறைந்திருக்கும். பணம் பல வழிகளில் தேடி வரும். சிலருக்கு சொந்த வீடு வாகனம் வாங்க வேண்டும் என்ற எண்ணங்கள் நிறைவேறுவதற்கான வாய்ப்புகள் அமையும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றினாலும் அன்றாட பணிகளில் சுறுசுறுப்புடன் செயல்பட முடியும். சுப காரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலப்பலன் கிட்டும்.

நல்ல வரன்கள் கிடைக்கும். உற்றார் உறவினர்களின் வருகை மகிழ்ச்சியினை ஏற்படுத்தும். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் கௌரவமான நிலை இருக்கும். எதிர்பார்க்கும் உயர்வுகளும் கிடைப்பதற்கான வாய்ப்புகளும் அமையும். திறமைகளுக்கு ஏற்ற பாராட்டுதல்களும் கிடைக்கப் பெறுவதால் மனமகிழ்ச்சி உண்டாகும். சிலர் எதிர்பார்த்த இடமாற்றங்களையும் பெற முடியும். தொழில் வியாபாரமும் சிறந்த முறையில் நடைபெற்று லாபத்தை உண்டாக்கும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களின் ஒத்துழைப்புகள் சிறப்பாக அமையும். பணம் கொடுக்கல்- வாங்கலில் சரளமான நிலையிருக்கும். மாணவர்கள் நல்ல மதிப்பெண்களை பெற முடியும். மஹா லட்சுமி வழிபாடு செய்து வந்தால் மேன்மைகள் உண்டாகும். மேலும் முருக வழிபாடு மேற்கொள்வதும் நல்லது.

வெற்றி தரும் நாட்கள் – 21, 22, 23.

விருச்சிகம் விசாகம் 4-ஆம் பாதம், அனுஷம், கேட்டை.
முன்கோபம் உடையவராகவும், எளிதில் உணர்ச்சி வசப்படக்கூடியவராகவும் விளங்கும் விருச்சிக ராசி நேயர்களே உங்கள் ராசிக்கு 3-ல் செவ்வாய், கேது, 10-ல் சூரியன், 11-ல் சுக்கிரன் சஞ்சரிப்பதால் எல்லா வகையிலும் ஏற்றமிகுந்த பலன்களை அடைவீர்கள். தாராள தனவரவு உண்டாகும். தேவைகள் பூர்த்தியாகும். உடல் ஆரோக்கியமும் ஓரளவு சிறப்பாக அமைந்து அன்றாட பணிகளை தடையின்றி செய்து முடிக்க முடியும். கணவன்- மனைவி இடையே தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்ப்பது உத்தமம். 2-ல் சனி சஞ்சரிப்பதால் பேச்சில் நிதானத்தை கடைபிடித்தால் குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலப் பலன் உண்டாகும்.

உற்றார் உறவினர்களின் வருகை மகிழ்ச்சி அளிக்கும். பணம் கொடுக்கல்- வாங்கலில் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தாமல் கவனமுடன் செயல்பட்டால் லாபத்தை அடைய முடியும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களை அனுசரித்து நடந்து கொண்டால் அபிவிருத்தியை பெருக்கி கொள்ள முடியும். உத்தியோகஸ்தர்களுக்கு உடன் பணிபுரிபவர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியளிக்கும். அரசு வழியில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைப்பதற்கான சந்தர்ப்பங்கள் அமையும். சிலருக்கு கௌரவமான பதவி உயர்வுகளும் கிடைக்கும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். தட்சிணாமூர்த்தி வழிபாடு செய்வது நல்லது. சனிப்ரீதி ஆஞ்சநேயர் வழிபாடும் மேற்கொள்ளலாம்.
வெற்றி தரும் நாட்கள் – 19, 20, 23, 24, 25.

தனுசு மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம்.
பல சாதனைகளைப் படைக்கும் வல்லமையும், தற்பெருமையும் அதிகம் கொண்ட தனுசு ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு அதிபதி குரு லாப ஸ்தானமான 11-ஆம் வீட்டில் பலமாக சஞ்சரிப்பதும் 10-ல் சுக்கிரன் சஞ்சரிப்பதும் நல்ல அமைப்பு என்பதால் தாராள தனவரவுகள், மங்களகரமான சுபகாரியங்கள் கைகூடும் நிலை உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் நிறைந்திருக்கும். கணவன்– மனைவியிடையே ஒற்றுமை நிலவும். உற்றார் உறவினர்களும் ஓரளவுக்கு ஒற்றுமையுடன் செயல்படுவார்கள். சிறப்பான பணவரவுடன் எதிர்பாராத உதவிகளும் கிடைக்கப் பெற்று குடும்பத் தேவைகள் யாவும் பூர்த்தியாகும். கடன்கள் குறையும். பொன் பொருள் சேரும். அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் எண்ணம் நிறைவேறும்.

உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்தினால் வீண் மருத்துவ செலவுகளை தவிர்க்கலாம். பணம் கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை எளிதில் ஈடுபடுத்தி அதிக லாபம் காண முடியும். தொழில் வியாபாரம் செய்வர்களுக்கு நல்ல முன்னேற்றமான நிலை உண்டாகும். புதிய வாய்ப்புகள் தேடி வரும். கூட்டாளிகளாலும் ஒரளவுக்கு அனுகூலம் ஏற்படும். உத்தியோகஸ்தர்கள் பணியில் திறம்பட செயல்பட்டு அனைவரின் பாராட்டுதல்களையும் பெறுவார்கள். பயணங்களால் அனுகூலப் பலன் உண்டாகும். மாணவர்கள் கல்வியில் முழு மூச்சுடன் செயல்பட்டால் மட்டுமே நல்ல மதிப்பெண்களை பெற முடியும். விநாயகப் பெருமானையும் முருக கடவுளையும் வழிபாடு செய்தால் நற்பலன்கள் கிடைக்கும்.

வெற்றி தரும் நாட்கள் – 21, 22, 23.

மகரம் உத்திராடம் 2,3,4-ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1,2-ஆம் பாதங்கள்.
மனதில் எவ்வளவு துயரங்கள் இருந்தாலும் அதை வெளிக்காட்டாமல் அனைவரிடமும் சகஜமாக பழகும் குணம் கொண்ட மகர ராசி நேயர்களே, உங்களுக்கு ஜென்ம ராசியில் செவ்வாய், 8-ல் சூரியன் சஞ்சரிப்பதால் எதிலும் கவனத்துடன் செயல்பட வேண்டிய காலமாகும். பணவரவுகள் தேவைகேற்றபடி இருந்தாலும் வீண் செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. கணவன்- மனைவியிடையே சிறு சிறு ஒற்றுமை குறைவுகள் உண்டாகும். முடிந்தவரை அனைவரிடமும் விட்டு கொடுத்து நடந்து கொண்டால் வீண் பிரச்சினைகளை தவிர்க்கலாம். உடல் ஆரோக்கியத்தில் உண்டாக கூடிய உஷ்ண சம்மந்தப்பட்ட பாதிப்புகளால் மருத்துவ செலவுகள் ஏற்படும்.

பணம் கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை பிறருக்கு கடனாக கொடுக்கும் போது சிந்தித்து செயல்படுவது உத்தமம். எடுக்கும் காரியங்களில் எதிர் நீச்சல் போட்டால் மட்டுமே வெற்றியினைப் பெற முடியும். வியாபாரம் செய்பவர்கள் கூட்டாளிகளை அனுசரித்து நடந்து கொள்வதன் மூலம் அபிவிருத்தியை பெருக்கி கொள்ள முடியும். வெளியூர், வெளிநாட்டு தொடர்புடைய வாய்ப்புகள் தேடி வரும் என்றாலும் தேவையற்ற அலைச்சல்கள் அதிகரிக்கும். கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்ற முடியாத சூழல் ஏற்படும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது நற்பலனை தரும். மாணவர்கள் கல்வியில் அதிக ஈடுபாட்டுடன் செயல்பட்டால் நல்ல மதிப்பெண்களைபப் பெற முடியும். சிவ வழிபாடும் முருக வழிபாடும் செய்வது சிறந்தது.

வெற்றி தரும் நாட்கள் – 19, 20, 23, 24, 25.

கும்பம் அவிட்டம் 3,4-ஆம் பாதங்கள் சதயம், பூரட்டாதி 1,2,3-ஆம் பாதங்கள்.
உண்மை பேசுவதையே குறிக்கோளாக கொண்டிருக்கும் கும்ப ராசி நேயர்களே, உங்களுக்கு குரு பார்வை ஜென்ம ராசிக்கு இருப்பதும் 6-ல் ராகு சஞ்சரிப்பதும் சிறப்பு என்பதால் நீங்கள் எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிட்டும். உங்களுக்குள்ள மறைமுக எதிர்ப்புகள் மறைந்து உங்கள் பலமும் வளமும் கூடும். பணவரவில் இருந்த தடைகள் விலகி உங்கள் தேவைகள் யாவும் பூர்த்தியாகும். சூரியன் 7-ல் இருப்பதால் குடும்பத்தில் கணவன்- மனைவியிடையே விட்டு கொடுத்து செல்வது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்துவது உத்தமம்.

தொழில், வியாபாரம், செய்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கப் பெறும் என்றாலும் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தும் போது சிந்தித்துச் செயல்படுவது நல்லது. கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் கவனமுடன் நடந்து கொண்டால் வீண் விரயங்கள் ஏற்படுவதை தவிர்க்க முடியும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் சில தடைகளுக்குப்பின் அனுகூலம் உண்டாகும். உற்றார் உறவினர்களை சற்று அனுசரித்து செல்வதன் மூலம் ஓரளவு சாதகமாக செயல்படுவார்கள். கடன்கள் சற்று குறையும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பணியில் நிம்மதியுடன் செயல்படமுடியும். அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகள் சற்று தாமதப்படும். மாணவர்கள் தேவையற்ற நட்புகளைத் தவிர்ப்பது நல்லது. பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். தொடர்ந்து விநாயகப் பெருமானை வழிபாடு செய்து வந்தால் மேன்மையான பலன்கள் உண்டாகும்.

வெற்றி தரும் நாட்கள் – 19, 20, 21, 22, 23.

மீனம் பூரட்டாதி 4-ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி.
மற்றவர்களின் சுக துக்கங்களை தன்னுடையதாக நினைக்கும் பண்பு கொண்ட மீன ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 6-ல் சூரியன் 7-ல் சுக்கிரன் 11-ல் செவ்வாய், கேது சஞ்சரிப்பதால் உங்களுக்கு தற்போது உள்ள நெருக்கடிகள் குறைந்து ஏற்றமிகுந்த பலன்களை அடைவீர்கள். தொழில், வியாபாரத்தில் இருந்த போட்டிகள் படிப்படியாக விலகும். விரோதிகளும் நண்பர்களாக மாறி நற்பலன்களை செய்வார்கள். புதிய வாய்ப்புகள் தேடி வரும். வெளியூர் வெளிநாட்டு தொடர்புடையவற்றால் நல்ல முன்னேற்றங்கள் ஏற்படும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த பதவி உயர்வு மற்றும் ஊதிய உயர்வுகளுக்கான முயற்சிகளை தற்போது மேற்கொள்ளலாம்.

சிலருக்கு திறமைகளுக்கேற்ற பாராட்டுதல்களும், எதிர்பார்த்த இடமாற்றங்களும் கிடைக்கப் பெற்று மன மகிழ்ச்சி உண்டாகும். குடும்பத்தில் சுபிட்சமும் மகிழ்ச்சியும் நிறைந்திருக்கும். உற்றார் உறவினர்களும் சாதகமாக செயல்படுவார்கள். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் அமைந்து சுப காரியங்கள் கைகூடும் யோகம் உண்டாகும். பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும் என்பதால் குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். பொன் பொருள் சேரும். அசையும் அசையா சொத்துகளால் அனுகூலப் பலன் கிட்டும். கொடுக்கல்- வாங்கல் சரளமாக நடைபெறும். மாணவர்கள் கல்வியில் நல்ல சாதனைகள் செய்து பள்ளி கல்லூரிக்கு பெருமை சேர்க்க முடியும். துர்கையம்மன் வழிபாடு செய்து வந்தால் மங்களங்கள் உண்டாகும்.
வெற்றி தரும் நாட்கள் – 21, 22, 23, 24, 25.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous article19-08-2018 இன்றைய ராசிப்பலன் ஆவணி 03, ஞாயிற்றுக்கிழமை !
Next articleஇனி கொழும்புக்கும் வர வேண்டாம்! யாழ்ப்பாணத்துக்கும் வர வேண்டாம்!