ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2019-2020 கன்னி!

0

அழகிய உடல்வாகும், நீல விழியும், சிறந்த ஒழுக்கமும் கொண்ட கன்னி ராசி நேயர்களே! உங்கள் ராசிக்கு இது நாள் வரை நிழல் கிரகமான ராகு 11லும், கேது 5லும் சஞ்சாரம் செய்தனர். வாக்கிய பஞ்சாங்கப்படி வரும் 13-02-2019 முதல் 01-09-2020 வரை சர்ப கிரகங்களான ராகு ஜென்ம ராசிக்கு 10-ஆம் வீட்டிலும், கேது 4-ஆம் வீட்டிலும் சஞ்சாரம் செய்ய உள்ளது அவ்வளவு சாதகமான அமைப்பு என்று கூறிவிட முடியாது இதனால் தேவையற்ற மறைமுக எதிர்ப்புகள் அலைச்சல் டென்ஷன்கள் உண்டாகும்.

வீண் வம்பு வழக்குகளை சந்திக்க நேரிடும். சனி ஜென்ம ராசிக்கு 4-ல் சஞ்சரிப்பதாலும், அர்த்தாஷ்டம சனி நடைபெறுவதாலும், குரு 3-ல் சஞ்சரிப்பதாலும் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது. எடுக்கும் முயற்சிகளில் எதிர்நீச்சல் போட்டால் மட்டுமே முன்னேற்றப் பலனை அடைய முடியும். குரு 29-10-2019 முதல் சுக ஸ்தானமான 4 -ஆம் வீட்டில் சஞ்சரிக்க இருப்பதும் சாதகமான அமைப்பு என்று கூற முடியாது இதனால் பொருளாதாரநிலை ஏற்ற இறக்கமாக தான் இருக்கும். எதிர்பாராத வகையில் உதவிகள் கிடைக்க பெற்று குடும்ப தேவைகள் பூர்த்தியாகும்.

குடும்பத்தில் சுப விரயங்கள் ஏற்படும் என்பதால் கடன் வாங்க வேண்டிய சூழ்நிலைகள் உண்டாகும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தடைகளுக்குப் பின் வெற்றி கிட்டும். கணவன் -மனைவியிடையே அடிக்கடி கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும். உற்றார் உறவினர்களை அனுசரித்து நடந்து கொள்வது நல்லது. அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் விஷயங்களில் சிந்தித்து செயல்படுவது நல்லது. கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் முடிந்த வரை பெரிய தொகைகளை ஈடுபடுத்தாது இருப்பது நல்லது.

கொடுத்த கடன்களை திரும்ப பெறுவதில் சிக்கல்கள் ஏற்படும். உங்களுக்குள்ள வம்பு வழக்குகளில் இழுபறி நிலையே நீடிக்கும் என்பதால் தேவையற்ற பிரச்சினைகளில் தலையிடாமல் இருப்பது உத்தமம். செய்யும் தொழில் வியாபாரத்தில் சுமாரான லாபமே அமையும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களை அனுசரித்து செல்வது நல்லது. தேவையற்ற பயணங்களை குறைப்பது நல்லது. வெளிவட்டார பழக்க வழக்கங்கள் விரிவடையும். உத்தியோகஸ்தர்கள் பணியில் எதிர்பார்க்கும் பதவி உயர்வுகள் சில தடைகளுக்குப் பின் கிடைக்கும். பணிபுரியுமிடத்தில் பிறர் விஷயங்களில் தலையிடாதிருப்பது நல்லது. வேலைபளு அதிகமாக இருக்கும். தேவையற்ற இடமாற்றங்களால் அலைச்சல்கள் ஏற்படும்.

உடல் ஆரோக்கியம்

உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி ஏதாவது பாதிப்புகள் தோன்றியபடியே இருக்கும் என்பதால் உடற்பயிற்சி செய்வது, உணவு விஷயத்தில் கட்டுபாட்டுடன் இருப்பது உத்தமம். தேவையற்ற மனக்குழப்பங்களால் நிம்மதி குறைவு உண்டாகும். குடும்பத்தில் உள்ளவர்களாலும் மருத்துவ செலவுகள் ஏற்படும். அலைச்சல் டென்ஷன் அதிகரிக்கும். தெய்வ வழிபாடுகளில் மனதை செலுத்துவது உத்தமம்.

குடும்பம் பொருளாதாரநிலை

கணவன்- மனைவி இடையே ஒற்றுமை சுமாராகத் தான் இருக்கும் விட்டுக் கொடுத்து செல்வது, பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. உற்றார் உறவினர்கள் ஓரளவுக்கு அனுகூலமாக இருப்பார்கள். அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் விஷயங்களில் சிந்தித்து செயல்படுவது நல்லது. பணவரவுகள் ஏற்ற இறக்கமாக இருந்தாலும் எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். ஆடம்பர செலவுகளை குறைப்பது உத்தமம். குடும்ப விஷயங்களை பிறரிடம் பகிர்ந்து கொள்வதை தவிர்க்கவும். சுபகாரிய முயற்சிகளில் தடைகளுக்குப் பின் நற்பலன் கிடைக்கும்.

உத்தியோகம்

உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் ஏற்ற இறக்கமான நிலை இருக்கும். எதிர்பார்க்கும் உயர்வுகள் தடைகளுக்குப் பின் கிடைக்கும். பொருளாதாரநிலை ஏற்ற இறக்கமாக இருக்கும். உடன் பணிபுரிபவர்களை அனுசரித்து நடந்து கொண்டால் வேலைபளுவை குறைத்துக் கொள்ள முடியும். சிலருக்கு எதிர்பாராத இடமாற்றங்கள் ஏற்பட்டு அலைச்சல் அதிகரிக்கும். உயர் அதிகாரிகளிடம் பேசும் போது பேச்சில் நிதானத்துடன் இருப்பது நல்லது. புதிய வேலை தேடுபவர்கள் கிடைப்பதை பயன்படுத்தி கொள்வது உத்தமம்.

தொழில் வியாபாரம்

தொழில் வியாபாரம் சுமாராக நடைபெறும். நல்ல வாய்ப்புகள் தேடி வரும் என்பதால் புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் வாய்ப்பு அமையும். பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்யும் காரியங்களில் மிகவும் கவனம் தேவை. புதிய கூட்டாளிகளால் தேவையற்ற மனசஞ்சலங்கள் உண்டாகும். வெளியூர், வெளிநாட்டு தொடர்புடையவற்றால் எதிர்பார்க்கும் லாபம் ஓரளவுக்கு கிட்டும். பயணங்களால் அனுகூலங்கள் உண்டாகும். அரசு வழியில் உதவிகள் கிடைக்கும்.

கொடுக்கல்- வாங்கல்

பண வரவுகளில் நெருக்கடிகள் உண்டாக கூடிய காலம் என்பதால் கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்துவதை தவிர்ப்பது நல்லது. கொடுத்த கடன்களை வசூலிக்க முடியாமல் போகும். பண விஷயத்தில் பிறருக்கு முன் ஜாமீன் கொடுப்பதால் வீண் பிரச்சினைகளில் சிக்கி கொள்ள நேரிடும். தேவையற்ற வம்பு வழக்குகள் ஏற்படும். எதிலும் சிந்தித்து செயல்பட்டால் மட்டுமே லாபத்தினை அடைய முடியும்.

அரசியல்

மக்களின் ஆதரவுகள் சிறப்பாக இருக்கும் என்றாலும் அவர்களின் தேவைகளை பூர்த்தி செய்வதில் இடையூறுகள் உண்டாவதால் அவர்களின் அதிருப்திக்கு ஆளாவீர்கள். மேடை பேச்சுக்களில் கவனமுடன் இருப்பது, பத்திரிக்கை நண்பர்களை பகைத்து கொள்ளாமல் இருப்பது உத்தமம். கட்சி பணிகளுக்காக நிறைய செலவு செய்ய நேரிடும்-. என்றாலும் பணவரவுகள் சிறப்பாகவே இருக்கும். உடன் பழகுபவர்களுடன் அனுசரித்து செல்வது நல்லது.

விவசாயிகள்

பயிர் விளைச்சல் சிறப்பாக இருந்தாலும் சந்தையில் விலை பொருளுக்கு ஏற்ற விலை கிடைக்க சிரமம் ஏற்படும். காய், கனி, பூ போன்றவற்றாலும் கால் நடைகளாலும் எதிர்பார்க்கும் லாபம் கிட்டும். சில இடங்களில் நீர் வரத்து குறைவதால் தொடர்ந்து பயிரிட முடியாத நிலை ஏற்படும். புதிய பூமி மனை, வாங்கும் முயற்சிகளில் கவனம் தேவை. அரசு வழியில் மானிய உதவிகள் கிடைக்க தாமதம் ஏற்படும். பொருளாதார நிலை ஏற்ற இறக்கமாக இருக்கும்.

கலைஞர்கள்

நல்ல வாய்ப்புகள் தேடி வரும் என்றாலும் புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் போது சற்று சிந்தித்துச் செயல்படுவது நல்லது. வரவேண்டிய பணத் தொகைகளில் இழுபறியான நிலை இருக்கும். தேவையற்ற பயணங்களால் அலைச்சல், டென்ஷன்கள் உண்டாகும். சுகபோக வாழ்வை அனுபவிக்க இடையூறு ஏற்படும். இசைத் துறைகளில் உள்ளவர்களுக்கு எதிர்பாராத முன்னேற்றங்கள் உண்டாகும்.

பெண்கள்

உடல் நிலையில் அடிக்கடி பாதிப்புகள் ஏற்பட்டாலும் அன்றாட பணிகளில் சுறுசுறுப்பாக செயல்பட முடியும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் சில தடைகளுக்குப் பின் கிடைக்கும். கணவன்- மனைவியிடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் தோன்றினாலும் ஓற்றுமை குறையாது. புத்திர வழியில் சில மன சஞ்சலங்கள் தோன்றி மறையும். பணவரவுகள் தேவைக்கு ஏற்றபடி இருந்தாலும் எதிர்பாராத வீண் செலவுகளும் ஏற்படும். உறவினர்களை அனுசரித்து செல்வதன் மூலம் ஓரளவுக்கு ஆதாயப்பலனை அடைய முடியும்.

மாணவ மாணவியர்

கல்வியில் சற்றே மந்த நிலை உண்டாகும். முழு ஈடுபாட்டுடன் செயல்பட்டால் மட்டுமே நற்பலனை அடையலாம். தேவையற்ற நட்புக்களால் வீண் பிரச்சினைகளுக்கு ஆளாக நேரிடும் என்பதால் நல்ல நண்பர்களை தோந்தெடுத்து பழகுவது உத்தமம். கல்வி ரீதியாக மேற்கொள்ளும் எந்தவொரு காரியத்திலும் இடையூறுகள் ஏற்படும். வண்டி வாகனங்களில் பயணம் செய்யும் போது கவனம் தேவை.

ராகு புனர்பூச நட்சத்திரத்தில், கேது உத்திராட நட்சத்திரத்தில் 13-02-2019 முதல் 16-04-2019 வரை

ராகு ஜென்ம ராசிக்கு 10-ல் புனர்பூச நட்சத்திரத்திலும், கேது 4-ல் உத்திராட நட்சத்திரத்திலும் சஞ்சரிப்பது சுமாரான அமைப்பு என்பதால் எந்தவொரு காரியத்திலும் ஒரு முறைக்கு பல முறை சிந்தித்துச் செயல்படுவது நற்பலனை தரும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றி மருத்துவ செலவுகளை ஏற்படுத்தும். பணவரவுகள் தேவைக்கு ஏற்றபடியிருக்கும் என்றாலும் ஆடம்பரச் செலவுகளைக் குறைத்துக் கொள்வது நல்லது. உற்றார் உறவினர்களிடையே வீண் வாக்கு வாதங்கள் உண்டாகும். பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது முன்கோபத்தை குறைப்பது உத்தமம். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தடைகளுக்குப் பின் அனுகூலம் ஏற்படும்.

பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தாது இருப்பது மூலம் வீண் பிரச்சினைகள் ஏற்படுவதை தவிர்க்க முடியும். தொழில், வியாபாரம் போன்றவற்றில் எதிர்பார்த்த லாபத்தை அடைய சற்று எதிர்நீச்சல் போட வேண்டியிருக்கும். மறைமுக எதிர்ப்புகளும் போட்டிகளும் அதிகரிக்க கூடும். தேவையற்ற பயணங்களைத் தவிர்த்து விடுவது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உயர்வுகள் தாமதப்பட்டாலும் பணியில் கௌரவமான நிலையே இருக்கும். சிலருக்கு எதிர்பாராத இடமாற்றங்களும் உண்டாகும். மாணவர்கள் தேவையற்ற பொழுது போக்குகளில் ஈடுபடுவதை தவிர்த்து கல்வியில் அதிக கவனத்தை செலுத்துவது நல்லது. சர்ப சாந்தி செய்வது நல்லது.

ராகு புனர்பூச நட்சத்திரத்தில், கேது பூராட நட்சத்திரத்தில் 17-04-2019 முதல் 20-08-2019 வரை

ராகு ஜென்ம ராசிக்கு 10-ல் புனர்பூச நட்சத்திரத்திலும், கேது 4-ல் பூராட நட்சத்திரத்தில் சஞ்சரிப்பதாலும், 3-ல் குரு, 4-ல் சனி சஞ்சாரம் செய்வதாலும் உடல் ஆரோக்கியத்தில் உஷ்ண சம்மந்தப்பட்ட பாதிப்புகள், அஜீரண கோளாறு போன்றவை உண்டாகும். உணவு விஷயத்தில் கட்டுபாட்டுடன் இருப்பது நல்லது. கணவன்- மனைவி இடையே தேவையற்ற வாக்குவாதங்கள் ஏற்படும் என்பதால் விட்டு கொடுத்து நடந்து கொள்வது உத்தமம். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் சில தடைகளுக்குப் பின் அனுகூலம் உண்டாகும். உற்றார் உறவினர்களின் வருகை மகிழ்ச்சி அளிக்கும் என்றாலும் சில பிரச்சினைகளையும் சந்திக்க வேண்டி இருக்கும். பணம் கொடுக்கல்- வாங்கலில் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தாமல் கவனமுடன் செயல்பட்டால் லாபத்தை அடைய முடியும்.

தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களை அனுசரித்து நடந்து கொண்டால் அபிவிருத்தியை பெருக்கி கொள்ள முடியும். அடிக்கடி பயணங்கள் மேற்கொள்ளும் வாய்ப்பும் உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு உடன் பணிபுரிபவர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சி அளிக்கும். உயர் அதிகாரிகளிடம் பேசும் போது பேச்சில் நிதானத்தைக் கடைபிடிப்பது உத்தமம். மாணவர்கள் கல்வியில் சற்று அதிக அக்கறை எடுத்து கொள்வது நல்லது. துர்கையம்மனை வழிபடுவது உத்தமம்-.

ராகு திருவாதிரை நட்சத்திரத்தில், கேது பூராட நட்சத்திரத்தில் 21-08-2019 முதல் 24-12-2019 வரை

ராகு ஜென்ம ராசிக்கு 10-ல் திருவாதிரை நட்சத்திரத்திலும், கேது 4-ல் பூராட நட்சத்திரத்தில் சஞ்சரிப்பதாலும், 3-ல் குரு, 4-ல் சனி சஞ்சாரம் செய்வதாலும் ஏற்ற இறக்கமானப் பலன்களையே பெறுவீர்கள். பண வரவுகளில் சிறுசிறு நெருக்கடிகள் ஏற்பட்டாலும் எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் மந்தநிலை, சோர்வு உற்சாகமின்மை உண்டாகும். குடும்பத்தில் உள்ளவர்களிடம் விட்டு கொடுத்து நடந்து கொண்டால் ஒற்றுமையும் மகிழ்ச்சியும் நிறைந்தே இருக்கும். அசையா சொத்துகளால் சிறுசிறு விரயங்களை சந்திக்க நேரிடும். எடுக்கும் முயற்சிகளில் எதிர் நீச்சல் போட வேண்டி வரும்.

தொழில் வியாபாரம் செய்பவர்கள் கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களிடம் விட்டு கொடுத்து நடப்பது நல்லது. பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்ய நினைக்கும் காரியங்களில் சிந்தித்து செயல்படவும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணியில் நிம்மதியான நிலையிருக்கும். உடன் பணிபுரிபவர்களும் ஒரளவுக்கு சாதகமாகச் செயல்படுவார்கள். 29-10-2019 முதல் குரு 4-ல் சஞ்சரிக்க உள்ளதால் பணம் கொடுக்கல்- வாங்கலில் ஒரளவுக்கு நற்பலனை அடைய முடியும். பிறரை நம்பி பெரிய தொகைகளை கடனாக கொடுப்பதைத் தவிர்க்கவும். புதிய வேலை தேடுபவர்கள் கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்தி கொள்வது உத்தமம். மாணவர்களுக்கு கல்வியில் மந்தமான நிலை இருந்தாலும் எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்கும். தட்சிணாமூர்த்தியை வழிபாடு செய்வது நல்லது.

ராகு திருவாதிரை நட்சத்திரத்தில், கேது மூல நட்சத்திரத்தில் 25-12-2019 முதல் 20-05-2020 வரை

ராகு ஜென்ம ராசிக்கு 10-ல் திருவாதிரை நட்சத்திரத்திலும், கேது 4-ல் மூல நட்சத்திரத்தில் சஞ்சரிப்பதாலும், 4-ல் குரு, சனி சஞ்சாரம் செய்வதும் சாதகமற்ற அமைப்பு என்பதால் குடும்பத்தில் தேவையற்ற வாக்கு வாதங்கள் ஏற்பட்டு கணவன்- மனைவியிடையே ஒற்றுமைக் குறைவு உண்டாகும். உற்றார் உறவினர்களிடையே ஏற்பட கூடிய பிரச்சினைகளால் நடக்க இருந்த சுபகாரிய முயற்சிகளில் தடைகள் ஏற்படும். பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது, முன் கோபத்தை குறைப்பது, முடிந்தவரை பிறர் விஷயங்களில் தலையீடு செய்வதைத் தவிர்ப்பது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் உஷ்ண சம்மந்தப்பட்ட பாதிப்புகள் ஏற்பட்டு சிறுசிறு மருத்துவ செலவுகளை உண்டாக்கும். நேரத்திற்கு உணவு உண்பது, உணவு விஷயத்தில் கவனம் செலுத்துவது உத்தமம். பூர்வீக சொத்துகளாலும் வண்டி வாகனங்களாலும் சற்று விரயங்களை சந்திப்பீர்கள்.

தொழில் வியாபாரத்தில் மந்த நிலை ஏற்பட்டாலும் பொருட் தேக்கம் உண்டாகாது. தொழிலாளர்களும் கூட்டாளிகளும் தேவையற்ற பிரச்சினைகளை ஏற்படுத்தினாலும் எதையும் சமாளிக்கும் ஆற்றலை பெறுவீர்கள். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை கடனாக கொடுப்பதை தவிர்க்கவும். தேவையற்ற பயணங்களை குறைத்து கொள்வதால் அலைச்சலை தவிர்க்கலாம். உத்தியோகஸ்தர்கள் பிறர் செய்யும் தவறுகளுக்கு பொறுப்பேற்க வேண்டிய சூழ்நிலைகள் ஏற்படும் என்றாலும் பணியில் திறம்பட செயல்பட்டு உயர் அதிகாரிகளின் பாராட்டுதல்களை பெறுவீர்கள். மாணவர்கள் கல்வியில் முழு ஈடுபாட்டுடன் செயல்படுவது நல்லது. சனிப்ரீதியாக ஆஞ்சநேயரை வழிபடவும்.

ராகு மிருகசீரிஷ நட்சத்திரத்தில், கேது மூல நட்சத்திரத்தில் 21-05-2020 முதல் 01-09-2020 வரை

ராகு ஜென்ம ராசிக்கு 10-ல் மிருகசீரிஷ நட்சத்திரத்திலும், கேது 4-ல் மூல நட்சத்திரத்தில் சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் ஏற்பட கூடிய பாதிப்புகளால் மருத்துவ செலவுகளை எதிர்கொள்ள நேரிடும். கணவன்- மனைவி இடையே கருத்து வேறுபாடுகள் உண்டாகும். உற்றார் உறவினர்களும் சிறுசிறு பிரச்சினைகளை ஏற்படுத்துவார்கள் என்பதால் அனுசரித்து நடந்து கொள்வது நல்லது. பொருளாதார நிலை ஓரளவுக்கு சிறப்பாக இருக்கும். ஆடம்பர செலவுகளை குறைத்து கொள்வது மூலம் கடன்கள் ஏற்படுவதை தவிர்க்க முடியும்.

திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் தடைகளுக்குப் பின் அனுகூலப்பலன் அமையும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தாது இருப்பது உத்தமம். வீடு, மனை வாங்கும் முயற்சிகள் வெற்றி அடையும் என்றாலும் அதற்காக கடன் வாங்க நேரிடும். தொழில் வியாபார ரீதியாக எடுக்கும் முயற்சிகளில் எதிர் நீச்சல் போட்டாவது வெற்றியினைப் பெற முடியும். தேவையற்ற பயணங்களால் அலைச்சல் அதிகரிப்பதால் சுக வாழ்வு பாதிப்படையும். நேரத்திற்கு உணவு உண்ண முடியாத சூழல் ஏற்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்க்கும் உயர்வுகள் தாமதப்பட்டாலும் உயர் அதிகாரிகளின் பாராட்டுதல்கள் மனதிற்கு நிம்மதி அளிக்கும். மாணவர்கள் கல்வியில் அதிக கவனம் எடுத்து கொள்வது, விடுப்பு எடுப்பதை தவிர்ப்பது உத்தமம். தட்சிணாமூர்த்தியை வழிபடுவது நல்லது.

அதிர்ஷ்டம் அளிப்பவை

எண் – 4,5,6,7,8

நிறம் – பச்சை, நீலம்

கிழமை – புதன், சனி

கல் – மரகத பச்சை

திசை – வடக்கு

தெய்வம்- ஸ்ரீ விஷ்ணு

பரிகாரம்
கன்னி ராசியில் பிறந்துள்ள உங்களுக்கு 4-ல் கேது, 10-ல் ராகு சஞ்சரிப்பதால் ராகு காலத்தில் துர்க்கை அம்மனுக்கு எலுமிச்சம் பழத்தில் விளக்கேற்றி கஸ்தூரி மலர்களால் அர்ச்சனை செய்வது, மந்தாரை மலர்களால் ராகுவுக்கு அர்ச்சனை செய்வது, சனிக்கிழமைகளில் தேங்காய், உளுந்து, நாணயங்கள் போன்றவற்றை தொழு நோயாளிகளுக்கு தானம் கொடுப்பது. அம்மனுக்கு குங்கும அபிஷேகம் செய்வது, கருப்பு ஆடைகள், கைகுட்டை போன்றவற்றை பயன்படுத்துவது நல்லது.

கேதுவுக்கு பரிகாரமாக விநாயகரை வழிபடுவது, ஓம் சரம் ச்ரீம் ச்ரௌம் சஹ கேதவ நமஹ என்ற பிஜ மந்திரத்தை கூறி வருவது, செவ்வல்லி பூக்களால் கேதுவுக்கு அர்ச்சனை செய்வது, சிவ பஞ்சாட்சர ஸ்தோத்திரம் கூறுவது, சதுர்த்தி விரதங்கள் இருப்பது, கருப்பு எள், வண்ண மயமான போர்வை போன்றவற்றை ஏழைகளுக்கு தானம் தருவது நல்லது.

சனி பகவான் 4-ல் சஞ்சரித்து அர்த்தாஷ்டம சனி நடைபெறுவதால் அனுமனையும் விநாயகரையும் வழிபடுவது, சனிக்கு கருப்பு நிற வஸ்திரம் சாற்றி, நீல நிற சங்கு பூக்கள் மற்றும் கருங்குவளை பூக்களால் அர்ச்சனை செய்வது, நல்லெண்ணெய், எள், கடுகு, தோல் பொருட்கள், சமையல் பாத்திரங்கள், அடுப்பு போன்றவற்றையும், குடை, செருப்பு, நீல மலர்கள் ஆகியவற்றையும் ஏழைகளுக்கு தானம் செய்வது நல்லது.

குரு பகவான் சாதகமின்ற சஞ்சரிப்பதால் வியாழக்கிழமைகளில் விரதமிருந்து, குரு தட்சிணாமூர்த்திக்கு கொண்டை கடலையை மாலையாக கோர்த்து அணிவித்து, மஞ்சள் நிற மலர்களால் அலங்கரித்து, நெய் தீபமேற்றி வழிபடவும். 5 முக ருத்ராட்சம் அணியவும் அரசமரக்கன்று, காவி, மஞ்சள், சர்க்கரை, மஞ்சள் நிற மலர்கள், ஆடைகள், புத்தகங்கள், நெய், தேன் போன்றவற்றை ஏழை, எளியவர்களுக்கு தானம் செய்யவும்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleவவுனியா பொலிசார் மீது 4 மாத கற்பிணித்தாய் முறைப்பாடு!
Next articleஇந்த 4 குணங்கள் கொண்ட நண்பர்கள் இருந்தால் உங்கள் வாழ்க்கையில் பேரழிவு ஏற்படுவது உறுதி!