பிரித்தானியாவில் தங்கியிருக்கும் ரஷ்ய மாணவர்கள் உடனடியாக சொந்த நாடு திரும்ப அந்த நாட்டின் ஜனாதிபதி அதிரடியாக அழைப்பு விடுத்துள்ளது உலக அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிரித்தானியாவில் கல்வி பயின்று வரும் மாணவர்கள் இனி சைபீரியாவில் வேலை பார்க்கவோ கல்வி பயிலவோ செய்யலாம் எனவும் புடின் கூறியுள்ளார்.
ரஷ்ய மாணவர்களுக்கு பிரித்தானியாவில் பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதாக கூறிய புடின், முன்னாள் உளவாளி Skripal-கு ஏற்பட்ட நிலை எஞ்சிய ரஷ்ய மாணவர்களுக்கும் ஏற்பட வாய்ப்பு உள்ளதாகவும்,
இதனால் உடனடியாக ரஷ்ய மாணவர்கள் பிரித்தானியாவை விட்டு வெளியேற வேண்டும் எனவும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.
இளம் வயது ரஷ்யர்களை பிரித்தானியா மற்றும் மேற்கத்திய நாடுகளில் இருந்து உடனடியாக ரஷ்யாவுக்கு அழைத்து வருவதை ரஷ்ய அதிகாரிகள் குழு ஒன்று தீவிரமாக நடைமுறைப்படுத்த துவங்கியுள்ளது.
லண்டனைவிடவும் பாரிய வாய்ப்புகள் சைபீரியாவில் குவிந்து கிடப்பதாக அந்த அரசு சார்பு குழு மாணவர்களுக்கு எடுத்துக் கூறியுள்ளது.
மட்டுமின்றி மேற்கத்திய நாடுகளில் வழங்கப்படும் அதே அளவு ஊதியத்தை வழங்கவும் சைபீரியா தயாராக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமீப காலமாக ரஷ்யாவின் திறமை வாய்ந்த இளைஞர்கள் பலர் பிரித்தானியா மற்றும் மேற்கத்திய நாடுகளில் உள்ள பிரபல நிறுவனங்களில் உயர் பொறுப்பில் அமர்ந்து வருகின்றனர்.
மட்டுமின்றி ரஷ்யர்களை மேற்கத்திய நாடுகள் எதிரிகளாகவே பாவிப்பதாகவும், சமீப கால அரசியல் சூழல்கள் ரஷ்யர்களுக்கு எதிராகவே கட்டமைக்கப்பட்டு வருவதாகவும் ரஷ்ய அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.