இராணுவத்தின் மனித நேய வேலை திட்டங்களுக்கான நாடளாவிய இணைப்பாளர் ஏ.செல்வாவின் யாழ். நெல்லியடி அலுவலகத்திற்கு தினமும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வருகை தந்த வண்ணம் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இராணுவத்தின் யாழ். மாவட்ட கட்டளை தலைமையகத்தால் வறுமை கோட்டிற்கு உட்பட்ட குடும்பங்களுக்கான வாழ்வாதார, பொருளாதார, கல்வி மற்றும் தொழில் துறை மேம்பாட்டு வேலைத்திட்டங்கள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் அந்த வேலைத்திட்டங்களில் பயனாளிகளாக இணைவதற்கு விபரங்களை பதிவு செய்வதற்காகவே யாழ்ப்பாணம், கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களின் பல இடங்களில் இருந்தும் பொதுமக்கள் வருகை தருகின்றார்கள்.
இராணுவத்தின் யாழ். மாவட்ட கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சியின் எண்ணக்கருவுக்கு அமைய மாணவர்களுக்கு கல்வி சகாய நிதி, சைக்கிள்கள் ஆகியன வழங்கப்படுகின்றன.
இதேவேளை, பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கு தையல் இயந்திரங்கள் வழங்கப்படுவதுடன், வறிய குடும்பங்களுக்கு வீடுகள் அமைத்தும், திருத்தியும் கொடுக்கப்படுகின்றன.
மேலும் வருமானம் குறைந்த சிறிய ஆலயங்களுக்கு சீமெந்து, மணல் என்பன வழங்கப்படுவதுடன் இராணுவத்தில் உள்ள சிவில் வேலைகளுக்கு கணிசமான அளவில் தமிழ் இளையோர்கள் ஆட்சேர்ப்பு செய்யப்படுகின்றனர்.
இவை போன்ற வேலை திட்டங்களில் பயனாளிகளாக இணைவதற்கு விபரங்களை பதிவு செய்ய வருகின்ற பொதுமக்களுடன் செல்வாவின் நெல்லியடி அலுவலக ஊழியர்கள் பொறுமையாகவும், கண்ணியமாகவும் நடந்து கொள்கின்றதாக தெரிவிக்கப்படுகின்றது.