யாழ் குடாநாடு முழுவதும் வெள்ளத்தினால் மூழ்கிப் போகும் அபாயம் உள்ளதாக சிரேஷ்ட பொறியாளர் ம.இராமதாசன் எச்சரித்துள்ளார்.
சட்டவிரோத கட்டட நிர்மாணங்களால் ஆபத்தான நிலை ஏற்பட்டுள்ளதுடன், நிலத்தடி நீரும் இல்லாமல் போகும் அபாயமுள்ளதாக தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் பொறியிலாளர் கருத்து வெளியிட்டார்.
கடந்த காலங்களில் யாழ்ப்பாண நகரத்தில், மாநகர சபையின் அனுமதியில்லாது பல்வேறு கட்டடங்கள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக வெள்ள நீர் ஓடுவதற்காக நிர்மாணிக்கப்பட்ட கால்வாய்கள் மூடப்பட்டுள்ளன.
இன்றும் யாழில்அனுமதியற்ற கட்டட நிர்மாணங்கள் பல முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இதனால், மழை காலத்தில் வெள்ளம் கடலுக்குச் செல்ல முடியாத போது, ஒட்டுமொத்த வெள்ள நீரும் பொம்மைவௌிப் பிரதேசத்திலேயே தேங்கும்.
இது தெரியாமல், அரசியல்வாதிகள் அங்கு குடியேற்றங்களை மேற்கொண்டுள்ளதால், இன்று அப்பகுதி மேடாக்கப்பட்டு குடியேற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இதன் காரணமாக யாழ்ப்பாணத்தில் பெரும் மழை பெய்யும் பட்சத்தில் அப்பகுதி மக்கள் மாத்திரமன்றி, ஒட்டுமொத்த யாழ்ப்பாணமும் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.