தமிழ் மக்களின் இருப்பை கேள்விக்குறியாக்கும் நோக்கிலேயே யாழ்ப்பாணத்தில் சிறிலங்கா அரசு திட்டமிட்டு வாள்வெட்டுக் கும்பல்களை இயக்கி வருவதாக வட மாகாண சபை உறுப்பினர் விந்தன் கனகரத்னம் குற்றம்சாட்டியுள்ளார்.
உலகிலேயே பலம் வாய்ந்த அமைப்பாக கருதப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகளை அழித்து விட்டதாக மார்தட்டும் சிறிலங்கா அரசினால் யாழ்ப்பணாத்திலுள்ள வாள்வெட்டுக் கும்பலை கட்டுப்படுத்தாது இருப்பதன் மூலம், இந்தக் கும்பல்களை சிறிலங்கா அரசே திட்டமிட்டு வழி நடத்துகின்றது என்பது நிரூபணமாகி வருவதாகவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளில் ஒன்றான ரெலோ அமைப்பின் முக்கியஸ்தரும் வடக்கு மாகாண சபையின் உறுப்பினருமான விந்தன் கனகரத்தினம் தெரிவிக்கின்றார்.
யாழ் ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே விந்தன் கனகரட்னம் இந்த குற்றச்சாட்டுக்களை முன்வைத்திருக்கின்றார்.
இந்நிலையில் சிறிலங்கா அரசினால் இயக்கப்படும் வாள்வெட்டு கும்பல்களின் அடுத்த இலக்கு இதற்கு எதிராக குரல்கொடுக்கும் ஊடகவியலாளர்கள், அரசியல்வாதிகள் மற்றும் பொது அமைப்புக்களின் பிரதிநிகளாக இருப்பார்கள் என்றும் வட மாகாண சபை உறுப்பினர் விந்தன் கனகரத்தினம் எச்சரித்திருக்கின்றார்.