மாவிலை நீரை குடிப்பதால் என்னென்னெ வியாதிகள் நீங்கும் என தெரியுமா?

0

முக்கனிகளில் ஒன்றாக, சித்தர்கள் முதல் தமிழ் அறிஞர்கள் வரை யாவரும் புகழ்வது, மாங்கனி. அன்னை காரைக்கால் அம்மையாருக்கு, தன்னை மகனாக எண்ணிக்கொண்ட சிவபெருமான் அளித்தது, இந்த மாங்கனியே!, கோவில்களில் தல விருட்சமாக, பூஜைகளில் கலசங்களின் காப்பாக, தமிழர் பண்டிகைகளில் தோரணங்களாக, இதுபோல ஏராளம் தொன்மை சிறப்புமிக்க மாவிலைகள், ஆன்மீகத்திலும், சித்த மருத்துவத்திலும் சிறப்பு மிக்கது.

மா மரத்தின் இலை, மலர்கள், காய், கனி, வேர்ப் பட்டை மற்றும் பிசின் உள்ளிட்ட அத்தனை பாகங்களும், மனிதர்களின் உடல் நலனுக்கு அரிய தீர்வாகிறது. பயன் தரும் மா மரத்தின் முக்கியமான ஒரு அங்கமாக விளங்கும் மாவிலைகளின் அளப்பரிய ஆற்றலை, பார்ப்போம்!

இந்து சமய திருவிழாக்கள், இல்லங்களில் நடக்கும் திருமணம், பிறந்த நாள் போன்ற பெருமளவில் மக்கள் கூடும் சிறப்பு நாட்களில், கோவில்கள், கோவிலைச் சுற்றியுள்ள வீதிகள், மற்றும் வீடுகளில் மாவிலைத் தோரணம் கட்டி மகிழ்வர்.

விழாக்களின் உற்சாகத்தின் ஒரு பகுதியாக இந்தத் தோரணங்கள் கட்டப்படுவதாகத் தோன்றினாலும், அதன் மெய் நோக்கம், இந்தக் கொண்டாட்டங்களில் யாராவது ஒருவருக்கு ஏற்படும் சுவாச பாதிப்புகள், மற்றவர்களுக்கு பரவாமல் தடுக்கவே, அதிகம் மக்கள் கூடும் அவ்விடங்களில் மாவிலை தோரணங்கள் கட்டி வைத்தனர்.

மாவிலைகள் சிறந்த கிருமி நாசினியாகவும், வியாதி எதிர்ப்பு சக்தி மிக்க மூலிகையாகவும் பயன் தருகின்றன. மாவிலை தோரணங்கள் போல, கோமியம் எனும் பசுமாட்டின் சிறுநீர் கலந்த கலவை, மாவிலையைக் கொண்டு வீடுகளில் தெளிக்கப் படும்போது, கிருமிகளை அகற்றப் பயன் தருகிறது..

மாவிலையின் மருத்துவ குணங்கள்: மாவிலைகள் பொதுவாக, சிறுநீரை அதிக அளவில் வெளியேற்றக் கூடியது, வீக்கங்கள் கட்டிகள் போன்றவற்றை கரைக்க வல்லது, வாய்ப்புண், வயிற்றுப்புண் இவற்றை போக்க வல்லது. மாவிலைகளில் புரதம், தாதுக்கள் மற்றும் வைட்டமின் A, B மற்றும் C நிரம்பியிருக்கிறது. சிறந்த கிருமி நாசினி மற்றும் வியாதி எதிர்ப்பு சக்தி மிக்கது.

இரத்த அழுத்த பாதிப்புகளை சரிசெய்யும் : மாவிலைகளை தண்ணீரில் கொதிக்க வைத்து, அத்துடன் சிறிது தேன் கலந்து பருகி வர, இரத்தக் குழாய் அடைப்புகளால் உண்டாகும் வெரிகோஸ் வெயின் எனும் நரம்பு சுருட்டல் வியாதிகளை போக்கி, இரத்த அழுத்த குறைபாடுகளை சரி செய்யக் கூடியது. இரத்த அணுக்களை வலுவூட்டி, இரத்த ஓட்டத்தை சீராக்கும் வல்லமை மிக்கது இந்த மாவிலைத் தேநீர்.

நச்சுக்கள் வெளியேற : மேலும், உடலில் தேங்கியிருக்கும் நச்சுப் பொருட்களை வெளியேற்றி, மனிதர்களின் பரம்பரைத் தன்மையை, செயல்திறனை பாதுகாக்கும் உடலின் முக்கிய அணுக்களான DNA தொகுப்பை, இந்த மாவிலைத் தேநீர், பாதிப்புகளில் இருந்து காக்கும் திறன் மிக்கது. இரத்த அழுத்த பாதிப்புகள் இல்லா விட்டாலும், மாவிலைத் தேநீர் அவ்வப்போது பருகி வர, உடலின் நச்சுக்கள் வெளியேறி, உடல் நலமாகும்.

சுவாச பாதிப்புகள் தீர: மாங்கொழுந்து இலைகளை சற்று சூட்டில் வதக்கி எடுத்து, தேன் கலந்த தண்ணீரில் ஊற வைத்து, பின்னர் அந்த தேன்மா நீரைப் பருகி வர, சுவாச பாதிப்புகளால் ஏற்பட்ட தொண்டைக் கட்டு, பேச முடியாமல் குரல் கம்முவது போன்ற பாதிப்புகள் விலகும்.

ஆரம்ப நிலை சர்க்கரை பாதிப்புகள் அகல : சர்க்கரை பாதிப்புகளுக்கு எளிய தீர்வாக, எந்தவித பக்க விளைவுகளும் இல்லாத, இயற்கை வைத்திய முறைதான், மாவிலை குடிநீர். மாங்கொழுந்து இலைகளை இரவில் தண்ணீரில் ஊற வைத்து, மறு நாள் காலையில் அந்த இலைகளை நீரிலேயே நன்கு பிழிந்து வடிகட்டிய சாற்றை, காலையில் மற்ற பானங்களுக்கு முன்னர் சில வாரங்கள் தொடர்ந்து பருகி வர, சர்க்கரை பாதிப்புகள் குணமாகும்.

மாங்கொழுந்து இலைகளை நிழலில் உலர்த்தி, பொடியாக்கி வைத்துக் கொண்டு, அந்த பொடியை தினமும் இருவேளை நீரில் கலந்து பருகி வர, சர்க்கரை பாதிப்புகள் குணமாகும்

சிறுநீரக கற்கள் பாதிப்புகள் நீங்க: சிறுநீரக கற்கள் பாதிப்புகளில் இருந்து மீண்டு வர, மாவிலைப் பொடியை இரவில் ஒரு டம்ளர் நீரில் ஊற வைத்து, அதிகாலை பருகி வர, சிறுநீரக கற்கள் உடைந்து வெளியேறி விடும்.

பற்கள் வலிமை பெற : மாவிலைப் பொடியைக் கொண்டு தினமும் பல் துலக்கி வர, ஈறுகள் பலமடைந்து, பற்கள் உறுதியாகும். வாய்ப்புண், வாய் துர்நாற்றம் விலகும். மாவிலையை நெருப்பில் இட்டு அந்த சாம்பலை, வெண்ணையில் குழைத்து தீக்காயங்களின் மேல் தடவி வர, அவை விரைவில் ஆறும்.

இள நரை நீங்க: மாவிலைச் சாற்றுடன், பொன்னாங்கண்ணி சாற்றை சேர்த்து, இவற்றை தேங்காய் எண்ணையில் கலந்து தலைக்கு தடவி வர, தலைமுடி உதிர்தல் போன்ற பாதிப்புகள் விலகி, இள நரை மாறி, தலைமுடி கருகருவென வளரும்.

விக்கல்களை போக்கும் மாவிலை: மாவிலைகளை நெருப்பில் இட்டு அந்தப் புகையை சுவாசித்து வர, விக்கல் பாதிப்புகள் நின்று விடும். மற்ற சுவாச பாதிப்புகளையும் சரி செய்யும்.மாவிலைகளை தண்ணீரில் நன்கு காய்ச்சி, அதை தினமும் பருகி வர, மாலைக் கண் போன்ற கண் பார்வைக் குறைபாடுகள் அகலும்.

சிறிது மாவிலைகளை நீரில் கொதிக்க வைத்து, அந்த சாற்றை வேதனை கொடுக்கும் காது வலி வந்த காதில், சில துளிகள் விட, காது வலிகள் விலகி ஓடி விடும்.

உடல் அசதி, மனப் படபடப்பு நீங்க: மன ரீதியான பாதிப்புகளுக்கு சிறந்த நிவாரணம் அளிக்க வல்லவை, மாவிலைகள். சிறிது மாவிலைகளை குளிக்கும் நீரில் சற்று நேரம் ஊறவைத்தபின் குளித்துவர, உடல் சோர்வு மற்றும் மன வாட்டங்கள் நீங்கி, புத்துணர்வு பெறலாம்.

மாங்கொழுந்து இலைகளுடன் நாவல் மரக் கொழுந்து இலைகளை சேர்த்து, தண்ணீரில் நன்கு கொதிக்க வைத்து, தண்ணீர் சுண்டி வந்த பின், ஆற வைத்து சிறிது தேன் கலந்து, இவ்விலைச் சாற்றை பருகி வர, வாந்தி நிற்கும்.

பாதவெடிப்பிற்கு : மா மரப்பட்டைகளில் வடியும் பிசினை, பாதங்களில் உள்ள பித்த வெடிப்புகளில் தடவி வர, பாத வெடிப்புகள் யாவும் மறைந்து விடும்.

Previous articleபொடுகு அதிகமாக இருக்கா? சீக்கிரம் குணமாக கைவைத்தியம்!
Next articleஉங்க கைகள் பட்டு போல இருக்க இதோ சூப்பரா சின்ன டிப்ஸ்!