தேசிய சுற்றாடல் தின நிகழ்வு இம்முறை மன்னார் மாவட்டத்தில் இடம் பெறவுள்ள நிலையில் குறித்த நிகழ்வில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரதம விருந்தினராக கலந்து கொள்ளவுள்ளார்.
இந்த நிலையில் குறித்த நிகழ்வக்கான சகல ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் சி.ஏ.மோகன்றாஸ் தெரிவித்துள்ளார்.
மன்னார் மாவட்டச் செயலகத்தில் இன்றைய தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இங்கு அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,
தேசிய சுற்றாடல் தின நிகழ்வு எதிர்வரும் 5 ஆம் திகதி வெள்ளிக்கிழமை தேசிய ரீதியில் மன்னாரில் இடம் பெறவுள்ளது.குறித்த நிகழ்வில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரதம விருந்தினராக கலந்து கொள்ளவுள்ளார்.
ஜனாதிபதியின் வருகையை முன்னிட்டு மன்னார் மாவட்டச் செயலகமும்,ஜனாதிபதி செயலகமும் இணைந்து ஆயத்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றோம்.
எதிர்வரும் 5 ஆம் திகதி மன்னாரிற்கு வருகை தரும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் மன்னார் மதவாச்சி பிரதான வீதி தம்பனைக்குளம் பகுதியில் முதலில் மரம் நாட்டும் நிகழ்வில் ஈடுபடுவார்.
அதனைத் தொடர்ந்து தேசிய சுற்றாடல் தின நிகழ்வு இடம் பெறும் மன்னார் நகரசபை மைதானத்திற்கு வருகை தருவார்.அந்த வகையில் குறித்த நிகழ்வகளுக்கான அனைத்து விதமான ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.என அவர் மேலும் தெரிவித்தார்.