மகரம்! ‘விளம்பி’ தமிழ்ப் புத்தாண்டு பலன்கள்! – எளிய பரிகாரங்களுடன்!

0

மகரம்

உத்திராடம் 2,3,4-ம் பாதம் திருவோணம், அவிட்டம் 1,2-ம் பாதம்

உங்கள் ராசிக்கு 3-ம் வீட்டில் இந்த விளம்பி வருடம் பிறப்பதால், போராடி வெற்றி பெறுவீர்கள். கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். விஐ.பி-கள் உதவுவார்கள். தைரியமாக சில முடிவுகள் எடுப்பீர்கள். தள்ளிப்போன திருமணப் பேச்சுவார்த்தை கூடிவரும். வீடுகட்ட திட்ட அனுமதி கிடைக்கும். பழைய கடனில் ஒருபகுதியை பைசல் செய்வீர்கள். பூர்வீகச் சொத்தில் மராமத்து வேலைகள் செய்வீர்கள்.

3.10.2018 வரை குரு 10-ம் வீட்டில் தொடர்வதால், வேலைச்சுமையால் பதற்றம் அதிகரிக்கும். தங்க ஆபரணங்களை யாருக்கும் இரவல் தரவோ, வாங்கவோ வேண்டாம். உங்களிடம் உள்ள திறமையை நீங்களே குறைத்து மதிப்பிடாதீர்கள். உங்கள் மீது சிலர் வீண் பழி சுமத்துவார்கள். ஆனால், அவை பலனளிக்காது.

4.10.18 முதல் 12.3.19 வரை குரு உங்கள் ராசிக்கு லாப வீட்டில் அமர்வதால் திடீர் யோகம் உண்டாகும். தினந்தோறும் எதிர்பார்த்து ஏமாந்த தொகை கைக்கு வரும். சில நல்ல மனிதர்களின் நட்பால் புதிய பாதையில் பயணிப்பீர்கள்.
13.3.2019 முதல் வருடம் முடியும் வரை குரு அதிசார வக்ரமாகி 12-ல் மறைவதால் செலவுகள் அதிகமாகும். நல்ல விஷயத்துக் காக வெளியே கடன்வாங்க நேரிடும். பூர்வீகச் சொத்தில் பாகப்பிரிவினை நல்ல விதத்தில் முடியும். சிலருக்கு அயல்நாட்டுப் பயணம் அமையும்.

14.4.18 முதல் 12.2.19 வரை ராசிக்குள் கேது நிற்பதால் டென்ஷன், ரத்த அழுத்தத்தால் மயக்கம், பயம், எதிலும் சந்தேகம் வந்து நீங்கும். ராகு 7-ல் நிற்பதால் கணவன் மனைவிக்குள் கசப்பு உணர்வு ஏற்படும். 13.2.2019 முதல் ராகு 6-லும் கேது ராசியை விட்டு விலகி 12-ல் அமர்வதால், ஆரோக்கியம் மேம்படும். மகளுக்குத் திருமணம் கூடிவரும்.

இந்தாண்டு முழுக்க விரயச் சனி தொடர்வதால், வீண்பழி, பண இழப்பு, ஏமாற்றங்கள் வந்து போகும். தாயாரின் உடல் நலம் பாதிக்கும். இளைய சகோதரர்கள் உங்களைத் தவறாகப் புரிந்துகொள்வார்கள்.

15.5.2018 முதல் 8.6.2018 வரை சுக்கிரன் 6-ல் மறைவதால் சிறுசிறு விபத்துகள், வீண் செலவுகள், சண்டைச் சச்சரவுகள், உங்களைப் பற்றிய வதந்திகள், வந்துபோகும். கணவன் மனைவிக்குள் அவ்வப்போது குழப்பங்களும், பிரச்னைகளும் வரும்.

30.4.2018 முதல் 27.10.2018 வரை ராசிக்குள்ளேயே செவ்வாயும், கேதுவும் சேர்வதால், உடல்நலம் பாதிக்கும். பெரிய நோய் இருப்பதைப் போல நீங்கள் உணருவீர்கள். நல்ல மருத்துவரை ஆலோசித்து மருந்து, மாத்திரை உட்கொள்வது நல்லது. சகோரர்களால் அலைச்சல்களும், செலவினங்களும் உண்டாகும்.

வியாபாரத்தில் ஏற்றஇறக்கங்கள் இருக்கும். போட்டிகள் அதிகரிக்கும். சித்திரை, ஆனி ஆகிய மாதங்களில் லாபம் கூடும். வேலையாட்களைத் தட்டிக் கொடுத்து வேலை வாங்குங்கள். வாடிக்கை யாளர்களிடம் கனிவாகப் பழகுங்கள். பங்கு தாரர்களுடன் அவ்வப்போது சிற்சில சச்சரவுகள் வரக்கூடும். புது ஏஜென்சி எடுக்கும்போது யோசித்துச் செயல்படுங்கள்.

அவ்வப்போது சந்தை நிலவரங்களைத் தெரிந்துகொள்ளுங்கள். கடன் வாங்கி கடையை நவீனமாக்குவீர்கள். ஐப்பசி, கார்த்திகை ஆகிய மாதங்களில் புது ஒப்பந்தம் வரும். பற்று-வரவு உயரும்.

உத்தியோகத்தில் அலட்சியத்துடன் செயல்படவேண்டாம். வேலைப்பளு அதிகரிக்கும். ஒரே நாளில் முக்கியமான நான்கைந்து வேலைகளைப் பார்க்கவேண்டி வரும். எந்த வேலையை முதலில் முடிப்பது என்ற குழப்பமும் டென்ஷனும் அதிகரிக்கும்.

மூத்த அதிகாரிகளிடம் அதிக உரிமை எடுத்துக்கொள்ளாதீர்கள். உங்களின் மேலதிகாரி தவறான வழிகளைக் கையாண்டாலும், நீங்கள் நேர்வழியில் செல்வது நல்லது. சக ஊழியர்களால் உங்கள் பெயர் கெடாமல் பார்த்துக்கொள்ளுங்கள். இழந்த உரிமையைப் பெறுவீர்கள். மார்கழி, தை ஆகிய மாதங்களில் சம்பளம் கூடும். புது பொறுப்புகளும் பெரிய பதவியும் தேடி வரும். சிலருக்குப் புது வேலை அமையவும் வாய்ப்பு உண்டு.

மொத்தத்தில் இந்த விளம்பி வருடம், சங்கடங் களைச் சமாளிக்க வைத்து, சாதனையை நோக்கி உங்களை நகர்த்துவதாக அமையும்.

பரிகாரம்

மதுரை, எழுத்தாணிக்கார தெருவில் அருள்பாலிக்கும் ஸ்ரீகனகவல்லி தாயாரையும், ஸ்ரீவீரராகவ பெருமாளையும் ஏகாதசி நாளில் சென்று வழிபட்டு வாருங்கள்; ஆனந்தம் பெருகும்.

கும்பம் : 2018- விளம்பி தமிழ்ப் புத்தாண்டு பலன்களை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்!

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleகும்பம்! ‘விளம்பி’ தமிழ்ப் புத்தாண்டு பலன்கள்! – எளிய பரிகாரங்களுடன்!
Next articleஉச்சக்கட்ட பரபரப்பில் தமிழகம்: முக்கிய பிரபலங்கள் பலர் கைது!