பிணவறையிலிருந்து பெண்ணின் பிணத்தை திருடிய கொள்ளையர்கள் அதனை திரும்ப கொடுக்க வேண்டுமானால் ரூ.10 இலட்சம் கொடுக்க வேண்டும் என நிபந்தனை விதித்துள்ள சம்பவம் நைஜீரியாவில் இடம்பெற்றுள்ளது.
நைஜீரியா நாட்டின் பிரைட் வான்ஸி நகரில் அமைந்துள்ள ஒரு பிணவறையில் இருந்து ஒரு பெண்ணின் பிணம் திடீரென மாயமாகி விட்டது. அதை யாரோ கடத்தி விட்டனர். இதனால் பிணவறை ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து பொலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். அப்போது பிணவறையின் மேலாளருக்கு ஒரு மர்ம தொலைபேசி அழைப்பு வந்தது.
அதில் பேசியவர்கள் பிணம் திரும்ப கிடைக்க வேண்டுமானால் தங்களுக்கு ரூபா 10 இலட்சம் (5மில்லியன் நைரா) பிணைத் தொகையாக வழங்க வேண்டும் என பேரம் பேசினார்.
இதற்கிடையே பிணத்தை கடத்தியதாக சுக்வுடி சுக்வு (38). இபே பெதால் லஷாரஸ் (28). ஆகிய 2 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் 2 பேரும் முன்னாள் குற்றவாளிகள் ஆவர்.
அவர்களில் சுக்வு 6 ஆண்டுகளும், லஷாரஸ் 14 ஆண்டுகளும் சிறை தண்டனை அனுபவித்து சமீபத்தில்தான் வெளியே வந்தனர். இவர்களில் ஒருவர் தன்னிடம் வேலை செய்தவர் என பிணவறை மேலாளர் தெரிவித்தார்.




