நடிகர் அருண் பாண்டியனின் மகள் கீர்த்தி நடிகையாகியுள்ளார். நடிகரும், தயாரிப்பாளருமான அருண் பாண்டியனின் மகள் கீர்த்தியை தேடி நிறைய பட வாய்ப்புகள் வந்தன. மேடை நாடகங்களில் கவனம் செலுத்தி வந்த அவர் தற்போது ஒரு படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார். புதுமுகம் ஹரிஷ் ராம் இயக்கி வரும் படத்தில் நடிக்கிறார் கீர்த்தி. இது குறித்து அவர்ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது,
நாடகம்
கடந்த 5 ஆண்டுகளாக என் தந்தையின் வியாபாரத்தை கவனித்து வந்தேன். சிங்கப்பூரில் உள்ள படங்களை விநியோகிக்கும் நிறுவனத்தை நடத்தி வந்தேன். ஆனால் எனக்கு எப்பொழுதுமே நடிப்பு மீது தான் அதிக ஆர்வம். கடந்த 3 ஆண்டுகளாக மேடை நாடகங்களில் நடித்து வருகிறேன்.
சினிமா
முறையே நடிப்பை கற்ற பிறகே சினிமாவுக்கு வர வேண்டும் என்று நினைத்தேன். எனக்கு நிறைய பட வாய்ப்புகள் வந்தன. ஹீரோயினுக்கு முக்கியத்துவம் இல்லாத கதாபாத்திரங்கள் என்பதால் ஒப்புக் கொள்ளவில்லை. அதில் சில படங்கள் ரிலீஸாகி பெரிய அளவில் வெற்றி பெற்றுள்ளன.
ஹீரோயின்
என் நடிப்புத் திறமைக்காக நான் அறியப்பட வேண்டுமே தவிர ஒரு ஹீரோயினாக மட்டும் அல்ல. நான் தற்போது ஒப்புக் கொண்டுள்ள படம் குடும்பத்துடன் பார்க்கும் படம். படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிந்துவிட்டது.
படங்களில் நடித்தாலும் மேடை நாடகங்களிலும் தொடர்ந்து நடிப்பேன். மேடை நாடகங்களில் நடிப்பதை என்னால் நிறுத்த முடியாது என்கிறார் கீர்த்தி. நடிக்க வந்துள்ளபோதே கீர்த்தி தெளிவாக இருக்கிறார். இதே தெளிவுடன் அவர் திரையுலக பயணத்தை தொடர பலரும் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.