ருஹுணு பல்கலைக்கழகத்தில் முதலாம் ஆண்டில் கல்வி கற்கும் பிக்கு மாணவன் ஒருவரை அப்பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் சிரேஸ்ட மாணவர்கள் நிர்வாணமாக்கி சித்திரவதை செய்த சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் 26 வயதுடைய பிக்கு மாணவன் ஒருவரை அங்கு பயிலும் இரண்டாம் வருட பிக்கு மாணவர்கள் ஐந்து பேர் பல்கலைக்கழக விடுதியில் அமைந்துள்ள கழிப்பறைக்குள் சித்திரவதை செய்ததாக பொலிஸாரின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
குறித்த ஐந்து பிக்கு மாணவர்களும் கைது செய்யப்பட்டு நேற்று மாத்தறை நீதிமன்றில் பொலிஸாரால் முன்னிலைப்படுத்தப்பட்டபோது, எதிர்வரும் 30ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
இதேவேளை, பாதிக்கப்பட்ட பிக்கு மாணவனை வைத்திய பரிசோதனைக்கு உட்படுத்துமாறு பொலிஸாருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
எனினும் குறித்த மாணவன், வைத்திய பரிசோனையும் வேண்டாம், பல்கலைக்கழகமும் வேண்டாமென தான் தங்கியிருந்த விஹாரைக்கு திரும்பிச் சென்றுவிட்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.