உணவு வகைகளிலேயே சைவம், அசைவம் என்று உள்ளது போல் காய்கறிகளில் கூட அசைவம், சைவம் என்று முன்னோர்கள் பிரித்து வைத்துள்ளனர்.
அந்த வகையில் தேன், ரத்தத்திற்கு இணையானது என அதர்வண வேதத்தில் கூறப்பட்டு உள்ளது. ரத்தத்தை வழங்க முடியாதவர்கள் தேனை வழங்கி அதற்குண்டான பலனைப் பெற முடியும். ஹோம குண்டங்களில் தேன் வார்ப்பது தற்போதும் நடைமுறையில் உள்ளது. அதேபோல் பேரிச்சம்பழம், மாமிசத்திற்கு சமம் என்றும் பழங்கால நூல்களில் கூறப்பட்டுள்ளது.
பச்சரிசி மிகவும் சக்தி வாய்ந்தது. திருமணத்தின் போது முனை முறையாத பச்சரிசியைத்தான் அட்சதைக்காக பயன்படுத்த வேண்டும். இதனைக் கைக்குத்தல் அரிசி என்றும் கூறுவர். எனவே கடைகளில் பச்சரிசி வாங்கி வந்து அட்சதை தயார் செய்வது கூடாது. மாறாக விவசாயிகளிடம் சென்று அறுவடையின் போது சேகரித்து வைத்த முனை முறியாத பச்சரிசியை வாங்கி வந்து அட்சதை தயாரிப்பதுதான் சரியான முறையாகும்.
கைக்குத்தல் அரிசியைத்தான் தானமாக வழங்கவும் பயன்படுத்த வேண்டும். ஞானத்தில், ஒழுக்கத்தில் உயர்ந்தவர்களுக்கு பச்சரிசியை தானமாக வழங்கினால் சிறந்த பலன் கிடைக்கும். இதற்கு காரணம் பச்சரிசிக்கு என்று தனி மகத்துவம் உள்ளது. புழுங்கல் அரிசி போல் அதை அவிப்பதில்லை.
எனவே, முனை முறியாத பச்சரிசியை உயர்ந்தவர்களுக்கு தானமாக வழங்கினால் அதைக் கொடுப்பவருடைய தோஷங்கள் அனைத்தும் கழிந்துவிடும் என்று பழங்கால நூல்களில் கூறப்பட்டுள்ளது.
இதேபோல் பூஜைகளுக்கு வாழைப்பழம் (கதளி) பயன்படுத்த வேண்டும். கேரளாவில் பகவதி அம்மன் கோயில்களில் கதளி இல்லாமல் பூஜைகள் நடத்தப்படாது. பச்சை வாழை, கற்பூர வாழை என பல்வேறு வகையான வாழைகளை பூஜைகளுக்கு பயன்படுத்துகின்றனர். ஒவ்வொன்றுக்கும் தனித்தனி குணங்களும், பலன்களும் உள்ளது.




