யாழ்ப்பாணத்தில் வினோதமான முறையில் கில்லாடித் தனங்களைக் காட்டிவந்த பெண் ஒருவரைப் பொலிஸார் கைது செய்துள்ளனர். யாழ்ப்பாணம் கஸ்தூரியார் வீதியில் வைத்தே இந்தப் பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த பெண், பல்வேறு கொள்ளைச்சம்பவங்களுடன் தொடர்புடையவர் என கூறப்பட்டுள்ளதுடன் இவர் நேற்று மாலை கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த பெண், நகைக்கடைகளுக்குச் சென்று ஆபரணங்களை வாங்குவது போன்று அவற்றைப் பார்வையிட்டு மர்மமான முறையில் கொள்ளையில் ஈடுபட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இது தொடர்பாக நகைக்கடை வர்த்தகர்களுக்கும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்ததாக பொலிஸார் கூறுகின்றனர்.
இந்த நிலையில் குறித்த பெண், நேற்றைய தினம் யாழ்ப்பாணம் கஸ்தூரியார் வீதியில் அமைந்துள்ள நகையகம் ஒன்றிற்கு வருகை தந்ததோடு தங்க ஆபரணங்களைக் கொள்ளையிடும் முயற்சியிலும் ஈடுப்பட்டதாகவும் அந்த நேரம் கடை உரிமையாளர் வர்த்தக நிலையத்தின் அனைத்துக் கதவுகளையும் பூட்டிவிட்டு பொலிஸாருக்கு அறிவித்ததாகவும் கூறப்பட்டுள்ளது.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பெண் பொலிஸ் அதிகாரிகள் குறித்த பெண்ணை கைது செய்து யாழ்ப்பாணப் பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
இதேவேளை, சம்பவத்துடன் தொடர்புடையவர் கண்டி மாவட்டத்தைச் சேர்ந்த 40 வயதானவர் என பொலிஸார் கூறியுள்ளதுடன் அவரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த தாம் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.