மசாஜ் சென்டர் என்ற பெயரில் இளம்பெண்களை வைத்து பாலியல் தொழில் செய்து வந்த நான்கு பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
மதுரை தபால் தந்திநகர், திருவள்ளுவர் காலனி பகுதியில் மசாஜ் சென்டர் என்ற பெயரில் இளம்பெண்களை வைத்து பாலியல் தொழில் செய்வதாக மதுரை மாநகர போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன்பேரில் தல்லாகுளம் இன்ஸ்பெக்டர் பெத்துராஜ் தலைமையில் போலீஸார், அந்த மசாஜ் சென்டரில் இன்று திடீரென அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, அங்கு இளம்பெண்களை வைத்து பாலியல் தொழில் செய்து வந்தது உறுதியானது. இதனை அடுத்து புரோக்கர்களான திண்டுக்கல்லை சேர்ந்த அசாருதீன் (23), மதுரையை சேர்ந்த சகாதீன் (27), விருதுநகரை சேர்ந்த முகமது அஸ்லாம் (26), வேலூரை சேர்ந்த முதர்சீர் (32) ஆகிய நான்கு பேரை கைது செய்துள்ளனர்.
மேலும், செல்போன்கள், லேப்டாப், ஸ்வைப்பிங் மிஷின், இருசக்கர வாகனங்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்துள்ளனர். விசாரணையில், தமிழ்நாடு மற்றும் வெளி மாநில பெண்களிடம் அதிக பணம் கொடுப்பதாக ஆசை வார்த்தைகள் கூறி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி வந்ததை ஒப்புக்கொண்டனர்.
மேலும், பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்ட தமிழ்நாடு மற்றும் பெங்களூரை சேர்ந்த மூன்று பெண்களையும் மீட்டனர். இவர்களை நீதிபதியின் உத்தரவின் கீழ் பெற்றோர்களிடம் ஒப்படைத்தனர். புரோக்கர்களான நான்கு பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, மதுரை மத்திய சிறையில் அடைத்துள்ளனர்.