நாடாளுமன்றில் அமைச்சர் ஒருவர் தெரிவித்த தகவல் குறித்து பல்வேறு ஊடகங்களும் முன்னிலைப்படுத்தி செய்தி வெளியிட்டுள்ளன.
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக ஏற்பட்ட வாகன நெரிசலினால் நாடாளுமன்றத்திற்கு மோட்டார் சைக்கிளில் வந்ததாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
நேற்று முன்தினம் இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வின் போது மழையில் நனைந்தபடி நாடாளுமன்றம் வந்ததாக கல்வியமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.
அடைமழையில் நனைந்தபடி ராஜகிரியவில் இருந்து நாடாளுமன்றத்திற்கு வந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற வீதியில் ஏற்பட்ட வாகன போக்குவரத்து நெரிசல் காரணமாக இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாடாளுமன்ற அமர்வின் போது முக்கியமான மூன்று விடயங்களுக்கு பதிலளிக்க வேண்டிய தேவை இருந்தது. அதன்காரணமாக விரைவில் நாடாளுமன்றம் செல்ல நேரிட்டது.
எனினும் ராஜகிரியவுக்கு அருகில் ஒரு மணி நேரத்திற்கு அதிகமான நேரம் வீதியில் நிற்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இதனால் காரிலிருந்து இறங்கி நாடாளுமன்றத்தை நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிளில் ஏறி நாடாளுமன்றத்திற்கு வந்தேன்.
போக்குவரத்து நெரிசல் காரணமாக தாமதமின்றி நாடாளுமன்றத்திற்கு வர முடியவில்லை. நாடாளுமன்ற நாட்களில் போக்குவரத்து நெரிசல் தொடர்பில் கவனம் செல்லுமாறு கேட்டுகொள்கிறேன் என கல்வியமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.