நடிகை துர்கா கவுடே என்பவர் நடுச்சாலையில் ஒரு நபர் தன்னை தரக்குறைவாக பேசியதோடு முரட்டுத் தனமாக தாக்கிய வீடியோவை இணைய தளத்தில் வெளியிட்டுள்ளார்.
மும்பையைச் சேர்ந்த நடிகை துர்கா தன்னிடம் தொலைபேசியில் தொடர்புகொண்டு அவ்வப்போது பேசிய பிரையன் ஃப்ராங்கோ என்ற நபர் குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்ததாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அந்த நபர் கோவா சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்த துர்காவை தனது இருசக்கர வாகனத்தால் மறித்துள்ளார்.
மேலும் துர்காவின் வாகன சாவியை எடுத்து தூர வீசிய அவன், அவரது வாகனத்தைத் தாக்கத் தொடங்கினான். அப்போது அவனது கண்களை சிறிதும் அச்சமின்றி நேருக்கு நேர் பார்த்ததாகக் கூறுகிறார் துர்கா. இந்நிலையில் அந்த நபர் துர்காவை பாலியல் ரீதியாக அத்துமீறித் தொட்டதோடு சரமாரியாகத் தாக்கத் தொடங்கியதாக கூறப்படுகிறது.
இது தொடர்பான துர்காவின் புகாரின் பேரில் அந்த நபரை போலீசார் கைது செய்தனர். இந்நிலையில் இரண்டு நாட்களுக்குப் பிறகு அவன் ஜாமீன் கோரியபோது அதனை காவல்துறை எதிர்த்ததால் அவனுக்கு ஜாமீன் மறுக்கப்பட்டது. எனினும் அடுத்த இரண்டு நாட்களுக்குப் பிறகு அவன் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
பிரையன் ஃபிராங்கோ விடுவிக்கப்பட்டது குறித்து வேதனை தெரிவித்துள்ள துர்கா அவன் கைது செய்யப்பட குரல் கொடுத்து சமூக வலைதளங்களில் அனைவரும் பதிவிட வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.