தை பிறந்தால் வழி பிறக்கும்! இவற்றை செய்யுங்கள்!

0

‘தை பிறந்தால் வழி பிறக்கும் ‘ என்பது பன்னெடுங்காலமாக நம் நாட்டில் வழக்கத்தில் உள்ள பழமொழியும் பொன்மொழியுமாகும். கிராமத்தில் இன்றளவும் தைக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுப்பார்கள். எதுவாக இருந்தாலும் தை பிறக்கட்டும் பார்த்துக் கொள்ளலாம் என்பார்கள்.

கல்யாணம் பேச தை வரட்டும். ஜாதகம் பார்க்கலாம் என்று சொல்வார்கள். கொடுக்க வேண்டிய காசுக்கும் வரவேண்டிய பணத்துக்கும் தை மாதத்தை எதிர்பார்ப்பார்கள். ஏனென்றால் தையில்தான் அறுவடை முடிந்து கையில் காசு பணம் புரளும்.

தை மாதம் மிகவும் சிறந்தது, கல்யாணம், நிச்சயதார்த்தம், வளைகாப்பு, கிரகப்பிரவேசம் என எல்லா சுப நிகழ்ச்சிகளுக்கும் இந்த மாதத்தில் குறைவிருக்காது.

புத்தாண்டு அல்லது புது வருடம் என்பது புதிய நாட்காட்டி வருடம் தொடங்குவதைக் குறிக்கிறது. பெரும்பான்மையான கலாசாரங்களில் புதுவருடத் தொடக்கம் கொண்டாடப்படுகிறது.

உலகம் முழுவதும் தற்காலத்தில் உபயோகித்து வரும் கிரெகொரியின் நாட்காட்டியின்படி புது வருடமானது ஜனவரி மாதம் முதல் திகதி தொடங்குகிறது.

பொதுவாக ஆங்கில ஆண்டு தொடங்கும் இன்றைய நாள் (01.01.2019) பலராலும் உலகம் பூராக கொண்டாடப்படுகிறது. இந்துக்கள் பௌத்தர்கள் தமது புத்தாண்டு தொடங்குவது சித்திரை மாதத்திலேயே என்பர்.

60 வருடகால ஆண்டு சக்கரம் இதனை இனங்காட்டி நிற்கிறது. இதேவேளை இன்றும் இந்துக்கள் தைபொங்கல் தினத்தில் தைமாதத்தின் முதலாம் திகதி எனவே அன்றுதான் புதுவருடம் ஆரம்பமாவதாக கூறுவர்.

எது எப்படியிருப்பினும் இன்றைய தினத்தை புத்தாண்டு பிறப்பதாக எண்ணி அத்தனை கருமங்களும் நடந்துவருகின்றன. நள்ளிரவில் குறிப்பாக சரியாக 12மணிக்கு பல இனங்களைச் சேர்ந்தோராலும் வானவேடிக்கைகளை நடாத்துவதும் பட்டாசுகளை வெடிக்கவைப்பதும் வழமை.

இன்று காலை வணக்கஸ் தலங்களுக்கு சென்று புத்தாண்டு பூசைகளில் கலந்துகொண்டு முகமன் கூறுவதும், நலம் விசாரிப்பதும் உற்றார் உறவினர் வீடுகளுக்கு சென்று நல்லபட்சணங்களை சமைத்துண்பதும் பண்டுதொட்டு இருந்துவரும் பழக்கமாகும். ஏன் பலர் புத்தாடை அணிவதும் புதுக்கலாசாரமாகி வருகின்றது.

உலகில் கணிசமான தொகையினர் தெரிந்தோ, தெரியாமலோ இன்றைய முதல்நாளை புத்தாண்டுக்குக்கொடுக்கும் முக்கியத்துவத்தை வழங்கி புத்தாண்டாகக் கொண்டாடிவருகிறார்கள் என்பது மட்டும் வெள்ளிடைமலை. நல்லநாளாக இன்றையநாளை கருதி மனங்களில் புதிய புதிய திடசங்கற்பத்தை உறுதியை பூணுவதும் வழக்கமாகிவிட்டது.

நல்ல நாள் எது?.

ஒவ்வொரு காலகட்டத்திலும் அவரவர் குடும்பங்களில் புதுமனை புகுதல், காதுகுத்துதல், திருமணம் என்று ஏதாவது ஒரு சடங்குகள் நிகழ்ந்து கொண்டேதான் இருக்கும்.

அப்படிப்பட்ட சமயங்களில் அனைவரும் தினசரி நாட்காட்டியோ அல்லது பஞ்சாங்கத்தையோ பார்த்து தான் நாள் குறிப்போம். ஒரு சிலர் ஏதாவது ஒரு ஜோசியர் அல்லது கோயில் குருக்களிடம் கேட்டு நல்ல நாள் குறிப்பார்கள்.

மேல்நோக்கு நாள் அமிர்தயோக நாள், சுபமுகூர்த்த நாள் என பொதுவாகப் பார்த்து நாள் குறிக்காமல் அவரவர் ராசி நட்சத்திரம் பிறந்த திகதி கிழமை இவற்றை அடிப்டையாகக் கொண்டு நாமே நல்ல நாள் பார்க்கலாம்.

நாள் என்ன செய்யும்?

நாள், வாரம், திதி, நட்சத்திரம்யோகம், கர்ணம் என்ற ஐந்தும் சேர்ந்ததே பஞ்சாங்கம். இந்த ஐந்தும் அடங்கிய பஞ்சாங்கத்தில் முதல் அங்கமாக வருவது வாரம் அதாவது கிழமை அல்லது நாட்கள்.

பஞ்சாங்கத்தில் நம் முன்னோர்கள் என்றைக்கு எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும் என்பதற்குக் கூட நாள் குறித்து வைத்திருக்கிறார்கள்.

ஞாயிறு, திங்கள், புதன், வியாழன், வெள்ளி ஆகிய கிழமைகள் திருமணம் ஹோமம் சாந்திகள் போன்ற நற்காரியங்களுக்கு விசேஷமானவை.

செவ்வாய் நெருப்பு கிரகம் என்பதால் செவ்வாய்க் கிழமை அக்னி சம்பந்தமான செயல்களுக்குரியது. சனிக்கிழமை இயந்திர சம்பந்தமான பணிகளுக்கு உரிய நாள்.

ஞாயிற்றுக்கிழமை சூரியன் ஆரோக்கியத்தை அளிப்பவன். அதனால் நீண்டகால பிணிகளுக்கு மருத்துவர் ஆலோசனை பெற்று மருந்து உண்ண ஆரம்பிக்கலாம். வடக்கு திசை நோக்கி பயணம் செய்யலாம்.

அரசுப்பணித் தொடர்பான விஷயங்களுக்காக உரிய அலுவலர்களை நேரில் சந்திக்கலாம். திங்கட்கிழமை தென்திசை நோக்கி பயணம் செய்யலாம். கிரகப் பிரவேசம் நடத்தலாம்.

காதுகுத்துதல், பெண் பார்த்தல், ருது சாந்தி செய்தல் (சாந்தி முகூர்த்தம்) சீமந்தம் விருந்து உண்ணல் போன்ற விசேஷங்களை செய்யலாம். ஆடு, மாடு வாங்குதல், விதையிடுதல், உரமிடல், வியாபாரம் துவங்குதல் ஆகியவையும் செய்யலாம்.

செவ்வாய்க்கிழமை கிழக்கு திசை நோக்கி பயணம் செய்யலாம். வாங்கிய கடனை அடைத்தல் வயலுக்கு உரமிடல் செங்கல் சூளைக்கு நெருப்பிடுதல் ஆகியன செய்ய ஏற்ற நாள் இது.

செவ்வாய்க்கிழமைகளில் பொருள் வாங்கினால் அது வருவாயைப் பெருக்கும். அதனால் வீட்டில் செல்வம் பெருகும்.

புதன் கிழமை மேற்கு திசை நோக்கி பயணம் செய்யலாம். புதிய ஆராய்ச்சி எழுத்துப் பணிகளைத் துவங்கலாம். வழக்குகள் சம்பந்தமாக வழக்கறிஞரை சந்தித்தல், புதுமனை புகுதல், குளம், ஏரி, கிணறு வெட்டுதல் நிலத்தை உழுதல்விதையிடுதல், அறுவடை செய்தல், காது குத்துதல், சீமந்தம், விருந்து உண்ணல் போன்ற சுபகாரியங்கள் செய்யலாம். கல்வி கலை போன்றவற்றைக் கற்க ஆரம்பித்தல் ஆகியவற்றுக்கு ஏற்ற நாள் இது.

வியாழக்கிழமை மேற்கு திசையில் பயணிக்கலாம். புதிய பணியில் சேரலாம். வங்கிப் பணிகள் கவனித்தல் பெரிய மனிதர்களை சந்தித்தல், சீமந்தம், ருது சாந்தி, காது குத்துதல், கிரகப் பிரவேசம், விவசாயம் சம்பந்தப்பட்ட பணிகள் இவற்றைச் செய்ய ஏற்ற தினம்.

வெள்ளிக்கிழமை வட திசை நோக்கி பயணம் செய்யலாம். பெண் பார்க்கச் செல்லலாம். காது குத்துதல், சாந்தி முகூர்த்தம், புதிய வாகனங்கள் வாங்குதல், நிலத்தினை உழுதல் உரமிடல் இவற்றைச் செய்ய ஏற்ற நாள் இது.

சனிக்கிழமை தென்திசை நோக்கி பயணம் செய்யலாம். பூமி தொடர்பான விஷயங்கள் அதாவது வீடு நிலம் மனை வாங்குதல் விற்றல் போன்ற செயல்களுக்கும் இயந்திரங்கள் வாங்குதல் போன்ற இரும்பு சம்பந்தப்பட்ட விஷயங்களுக்கும் உகந்த நாள்.

திங்கள், புதன், வியாழன், வெள்ளி ஆகிய நாட்களை சுபநாட்கள் எனவும் ஞாயிறு, செவ்வாய், சனி, ஆகிய நாட்களை அசுப நாட்கள் எனவும் சிலர் கூறுவர்.

சுப நாட்களிலும் பிரதமை அஷ்டமி நவமி ஆகிய திதிகள் வரும் நாட்களை தவிர்ப்பது நல்லது. சில கிழமைகளில் வரும் நட்சத்திரங்களைப் பொறுத்தும் அன்று சுபகாரியங்கள் செய்வதை தவிர்க்க வேண்டும்.

ஞாயிறு-பரணி கார்த்திகை, மிருகசீரிஷம், மகம்விசாகம், அனுஷம், கேட்டை, பூரட்டாதி. திங்கள்-சித்திரை கார்த்திகை, மகம், விசாகம், அனுஷம், பூரம், பூரட்டாதி. செவ்வாய்-உத்திராடம் திருவாதிரை, கேட்டை, திருவோணம், அவிட்டம், சதயம்.

புதன்-அவிட்டம் அசுபதி, பரணி, கார்த்திகை, மூலம், திருவோணம், அவிட்டம். வியாழன்-கேட்டை மிருகசீரிஷம், புனர்பூசம், பூசம், பூராடம், ரேவதி. வெள்ளி-பூராடம் ரோகிணி, மிருகசீரிஷம். பூசம், விசாகம், அஸ்தம். அனுஷம், அவிட்டம். சனி-ரேவதி புனர்பூசம், பூசம், உத்திரம், அஸ்தம், ரேவதி, ஆகிய நட்சத்திரங்கள் வரும் கிழமைகள் சுபகாரியம் செய்ய ஏற்றவை அல்ல.

நட்சத்திர பலன்கள்,

பொதுவாக ஒரு குழந்தை பிறந்ததுமே பலரும் பார்ப்பது அன்று என்ன நட்சத்திரம் என்பதைத் தான். காரணம் ஜோதிட ரீதியான 27 நட்சத்திரங்களுள் ஏதாவது ஒன்றுதான் எல்லோருடைய வாழ்க்கையிலுமே ஆதிக்கம் செலுத்தும்.

அது அவரவர் பிறந்த தினத்தில் அமையும் நட்சத்திரமே. தனிப்பட்ட நபருக்கு உரியது என்றில்லாமல் பொதுவாக எல்லோருக்கும் நன்மை அளிப்பன என்றும் ஆகாதவை எனவும் சில நட்சத்திரங்கள் கூறப்பட்டுள்ளன.

திருவாதிரை, பரணி, கார்த்திகை, ஆயில்யம், பூரம், பூராடம், பூரட்டாதி, கேட்டை, விசாகம், சுவாதி, சித்திரை, மகம், ஆகிய பன்னிரண்டு நட்சத்திரங்கள் வரும் நாட்களில் கடன் கொடுப்பதைத் தவிர்ப்பது நல்லது.

அதேநாட்களில் வெளியூர்ப் பிரயாணம் மேற்கொள்வது கூடாது. கடுமையான நோய்வாய்ப்பட்டவர் அன்று சிகிச்சையை ஆரம்பிக்கக் கூடாது.

யோகங்கள்,

பொதுவாக பலருக்கும் தெரிந்தது அமிர்தயோகம், சித்தயோகம், மரணயோகம் எனும் மூன்று யோகங்கள். இந்த யோகங்கள் நட்சத்திரங்களின் அடிப்படையில் கணிக்கப்படுபவை.

பரணி புனர்பூசம் பூரம் சுவாதி பூராடம் உத்திரட்டாதி எல்லா கிழமைகளிலும் நற்பலன்களைத் தரக்கூடியவையாகும்.

அசுவினி-புதன், மிருகசீரிஷம்-வியாழன், பூசம்-வெள்ளிசித்திரை-சனி, அனுஷம்-ஞாயிறு, மூலம்-புதன், உத்திராடம்-திங்கள், திருவோணம்-வெள்ளி, இந்த நட்சத்திரங்கள் இந்தக் கிழமைகளில் வருவதைத் தவிர இதர கிழமைகளில் எல்லாம் நற்பலன்களை கொடுக்கக்கூடியவையாகும்.

2 அமாவாசை 2 பவுர்ணமி,

அமாவாசை ஒரு நல்ல நாள் என்றாலும் திருமணம் போன்ற சுபகாரியங்களுக்கு உகந்ததல்ல. அமாவாசையை விலக்குவதைப் போலவே ஒரே மாதத்தில் இரு அமாவாசை வந்தால் அதனை மல மாதம் என்பார்கள்.

இப்படிப்பட்ட அமைப்பு அநேகமாக 18 வருடங்களுக்கு ஒரு முறையே வரும். மல மாதத்தினை மட்டுமல்லாமல் மல மாதமுள்ள தமிழ் ஆண்டும் திருமணம் போன்ற நற்காரியங்களுக்கு ஏற்றதல்ல என்பது பொதுவிதி.

ஒரே மாதத்தில் இரு பவுர்ணமிகள் வந்தால் அதுவும் மலமாதமே. ஆனால் பவுர்ணமி திதியில் சுபகாரியங்கள் மட்டுமே செய்யப்படுவதால் அந்த மாதத்தினை விலக்குவது இல்லை.

எனவே நல்லநாள் பார்த்து சுபகாரியம் செய்வோர் அல்லது இன்றிலிருந்து செய்வோம் என்று திடசங்கற்பம் பூணுவோர் இவற்றை கடைப்பிடிக்க இவை உபயோகப்படலாம் என்பது சித்தமாகும்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleபுத்தாண்டில் அரசாங்க ஊழியர்களுக்கு கவலையான செய்தி!
Next articleஇன்றைய ராசிப்பலன் – 02.01.2019 புதன்கிழமை!