தூக்கில் தொங்கிய தந்தை! திருமணமான 35 நாட்களில் குழந்தை பெற்ற புதுப்பெண்!

0

தமிழகத்தின் திண்டுக்கல் மாவட்டத்தில் திருமணமான 35 நாட்களில் மகளுக்கு குழந்தை பிறந்ததால், அவமானம் தாங்க முடியாமல் தூக்குப்போட்டு தந்தை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல்லை அடுத்த கன்னிவாடி பகுதியை சேர்ந்தவர் பெரியமுத்து. 28 வயதான இவர், சென்னை கோயம்பேட்டில் உள்ள ஒரு பூக்கடையில் ஊழியராக வேலை செய்து வருகிறார்.

இவருக்கும், ரெட்டியார்சத்திரம் பகுதியில் உள்ள 21 வயது பெண்ணுக்கும் கடந்த மாதம் ஒன்றாம் திகதி திருமணம் நடந்துள்ளது.

திருமணமான 3 நாட்களிலேயே, பெரியமுத்து வேலைக்காக சென்னை சென்று விட்டார். நேற்று முன்தினம் மாலையில் அவர் சொந்த ஊருக்கு திரும்பியுள்ளார்.

இந்த நிலையில், திடீரென அந்த பெண் தனக்கு வயிறு வலிப்பதாக கணவரிடம் கூறியுள்ளார். இதனையடுத்து அவரை சிகிச்சைக்காக, திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு பெரியமுத்து அழைத்து சென்றுள்ளார்.

அங்கு பரிசோதனை மேற்கொண்டபோது, குறித்த பெண் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து பிரசவ வார்டுக்கு அவர் மாற்றப்பட்டார். சிறிதுநேரத்தில் அவருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது.

இதுகுறித்த தகவல், மருத்துவமனை வளாகத்தில் நின்று கொண்டிருந்த பெரியமுத்துவுக்கு தெரிவிக்கப்பட்டது.

திருமணமான 35 நாட்களில் குழந்தை பிறந்ததால் அவர் அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து அந்த பெண்ணின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதைக்கேட்ட அவர்களும் அதிர்ச்சியில் உறைந்தனர்.

திருமணத்துக்கு முன்பே அந்த பெண்ணுக்கு, வேறு ஒரு நபருடன் ஏற்பட்ட தொடர்பில் குழந்தை பிறந்திருப்பது தெரியவந்தது.

இதனால் அந்த பெண்ணுடன், தன்னால் சேர்ந்து வாழ முடியாது என்று தனது மாமனாரிடம் பெரியமுத்து தெரிவித்ததாக தெரிகிறது.

மேலும் திருமணமான 35 நாட்களில் தனது மகளுக்கு குழந்தை பிறந்ததால் அந்த பெண்ணின் தந்தையும் விவசாயியுமான முனியப்பன் (58) அவமானம் அடைந்தார்.

இதனால் மனம் உடைந்த அவர், நேற்று தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்த ரெட்டியார்சத்திரம் பொலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleமனைவி வாய் மற்று கண்களை பசையால் ஒட்டிய குடிகார கணவன்!
Next article5ம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை எழுதிய மாணவி! தந்தையின் சடலம் வீட்டில்!