திருமணம் முடிந்த ஒரு வருடத்தில் டெல்லியை சேர்ந்த பெண் மருத்துவர், மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லியில் செயல்பட்டு வரும் மகாராஜா அகரசன் மருத்துவமனையில் 28 வயது பெண் மருத்துவர், இறந்த நிலையில் கிடப்பதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்தது.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார், கதவை உடைத்துக்கொண்டு உள்ளே சென்ற போது, நரம்பியல் துறையில் பணியாற்றிய அஸ்த் முஞ்சால் என்கிற பெண் மருத்துவர் இறந்து கிடப்பது தெரியவந்தது.

அங்கு சோதனை மேற்கொண்டபோது அவருடைய கைக்கு அருகில் ஒரு ஊசி மற்றும் 20 வினாடிகளுக்கு மயக்கத்தை ஏற்படுத்தும் மருந்து பாட்டில் கிடந்துள்ளது. அதற்கு அருகில் கிடந்த செல்போன் மற்றும் பை ஆகியவற்றை பொலிஸார் கைப்பற்றி எடுத்து சென்றனர்.
பின்னர் இதுகுறித்து பொலிஸார் விசாரணை மேற்கொண்டதில், கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு தான் முஞ்சால், மருத்துவராக பணிபுரிந்து வரும் உதித் துங்ரா என்பவரை திருமணம் செய்துகொண்டது தெரியவந்தது.

அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது, அதிகாலை 12.15 மணி வரை வேலை செய்துகொண்டிருந்த முஞ்சால் 12.18 மணிக்கு தன்னுடைய அறைக்கு சென்றுள்ளார்.
4.30 மணியளவில் யாரோ ஒருவர் கேபினட் கதவை தட்டுகிறார். 5.15 மணியளவில் பொலிஸார் கதவை உடைத்துக்கொண்டு உள்ளே செல்வதை போல பதிவாகியிருந்தது.
இந்த சம்பவம் குறித்து இதுவரை வழக்கு பதிவு செய்யாத பொலிஸார், கொலையா? அல்லது தற்கொலையா என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.




