சீனாவில் பஸ் ஒன்று ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 15 பேர் பலியான நிலையில், 6 நாட்களுக்குப் பின்னர் விபத்துக்கான காரணம் வெளியாகியுள்ளது.
சீனாவின் வான்ஜோ பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை பயணிகள் பஸ் ஒன்று பாலத்தை உடைத்துக்கொண்டு யாங்ட்சே ஆற்றில் விழுந்த விபத்தில் பஸ்ஸில் பயணித்த 15 பேரும் உயிரிழந்த நிலையில் விபத்துக்கான காரணம் குறித்து பொலிஸார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஓட்டுனர் போக்குவரத்து விதிகளை மீறி வாகனத்தை ஓட்டிச் சென்றதால் விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடத்தப்பட்ட நிலையில் பின்னர், விபத்துக்குள்ளான பஸ் புறப்பட்டு சென்ற இடத்தில் இருந்து விபத்து ஏற்பட்ட பகுதி வரையிலான கண்காணிப்பு கெமரா பதிவுகள் மற்றும், பஸ் தாறுமாறாக ஓடியபோது அருகில் சென்ற ஒரு வாகனத்தின் முன்பக்க கெமரா பதிவை ஆய்வு செய்தனர். அதில், குறித்த பஸ் தவறான பாதையில் சென்றது மட்டும் தெரியவந்தது. அதற்கான காரணம் தெரியவில்லை.
இந்நிலையில், ஆற்றில் மூழ்கிய பஸ்ஸிலிருந்த கெமரா பதிவு நீர்மூழ்கி வீரர்கள் மூலம் மீட்கப்பட்டது. அதனை ஆய்வு செய்தது விபத்துக்கான உண்மையான காரணம் தெரியவந்தது.
10 வினாடிகள் ஓடும் அந்த வீடியோ பதிவை பொலிஸார் வெளியிட்டுள்ளது. அதில், பஸ் ஓட்டனருடன் சுமார் 48 வயது மதிக்கத்தக்க ஒரு பெண் பயணி கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அவரை தன் தொலைபேசியால் தாக்குவதும், பதிலுக்கு ஓட்டுனர் தனது வலது கையால் தாக்குவதும், பஸ் தாறுமாறாக ஓடுவதைப் பார்த்த பயணிகள் கத்தி கூச்சலிடுவதும் பதிவாகி உள்ளது.
பஸ்ஸில் பயணி ஒருவர் ஓட்டுனரை தாக்கியதால் விபத்துக்குள்ளாகி, 15 உயிர்களை பலி வாங்கியிருக்கிறது.