சென்னையில் சிகிச்சைக்கு வந்த பெண்களிடம் அத்துமீறி நடந்து பாலியல் தொல்லை செய்ததோடு, அந்தக் காட்சிகளை செல்போனில் படம்பிடித்து வைத்திருந்த மருத்துவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர், சென்னை மயிலாப்பூரில் உள்ள தனது தாய் வீட்டுக்கு வந்துள்ளார்.
அப்போது நெஞ்சுவலி ஏற்பட்டதால், சிகிச்சைக்காக நாட்டுசுப்பராயன் வீதியில் உள்ள ஆர்.எம்.கிளினிக்குக்கு கணவருடன் சென்றுள்ளார்.
கணவரை வெளியே அனுப்பிய மருத்துவர் சிவகுருநாதன், பெண்ணிடம் பரிசோதனை என்று கூறி அத்துமீறியுள்ளார். மேலும் பெண்ணின் ஆடைகளை களையச் செய்து, தனது செல்போனில் மருத்துவர் சிவகுருநாதன் படம்பிடித்ததாகவும் சொல்லப்படுகிறது.
பரிசோதனையின்போது ஏற்பட்ட பாலியல் தொல்லை மற்றும் ஆடைகள் களைந்த நிலையில் மருத்துவர் வீடியோ எடுத்ததால் ஏற்பட்ட மிரட்சியுடன் வெளியே வந்த அந்தப் பெண்ணிடம், கணவர், என்ன நடந்தது என்று கேட்டுள்ளார்.
அப்போது மருத்துவர் சிவகுருநாதன், பரிசோதனை என்ற பெயரில் தனக்கு பாலியல் தொல்லை அளித்ததாக கூறியுள்ளார்.
உடனடியாக உள்ளே சென்ற அவர், மருத்துவரின் செல்போனை பறித்து பார்த்தபோது, அதில் பாலியல் தொல்லை அளித்த காட்சிகள் இருந்ததாக பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர் குற்றம்சாட்டியுள்ளார்.
தான் படம் பிடித்த காட்சிகளை வேறு யாருக்கோ மருத்துவர் அனுப்பியிருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
பாலியல் தொல்லைக்கு ஆளான பெண்ணின் கணவர் அளித்த புகாரின்பேரில், மயிலாப்பூர் போலீசார் மருத்துவர் சிவகுருநாதனை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரித்தனர்.
அவரிடம் இருந்த செல்போன்களை ஆய்வு செய்தபோது, அதில் சிகிச்சைக்கு வந்த பெண்கள் சிலரின் ஆடைகளை களைந்து பரிசோதிக்கும் காட்சிகள் ஏராளமாக இருந்துள்ளன.
இவற்றின்பேரில், மருத்துவர் சிவகுருநாதன் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், அவரை கைது செய்தனர். பெண்களிடம் அத்துமீறியது குறித்து அவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.