சனிப்பெயர்ச்சி பலன்கள் 2020-23: ரிஷபத்திற்கு பாக்ய சனி- நல்லகாலம் பிறந்தாச்சு !

0

மதுரை: விகாரி வருடம் தை மாதம் 10ஆம் தேதி ஜனவரி 24, 2020ஆம் ஆண்டு சனி பகவான் தனுசு ராசியில் இருந்து மகரம் ராசிக்கு நகர்கிறார். சனி பெயர்ச்சி அடைய இன்னும் 6 மாதங்கள் இருந்தாலும் அவரது சஞ்சார பலன், பார்வை பலன் ஆறு மாதத்திற்கு முன்பு இருந்தே தொடங்கி விடும் என்பதால் இந்த பலன்கள், பரிகாரங்கள் எழுதுகிறோம்.

இந்த சனிப்பெயர்ச்சியால் தனுசு மகரம் கும்பம் ராசிக்காரர்களுக்கு ஏழரை சனி காலமாகும். விருச்சிக ராசிக்காரர்கள் ஏழரை சனியில் இருந்து விடுபடுகிறீர்கள். ரிஷப ராசிக்காரர்களுக்கு அஷ்டமத்து சனியில் இருந்து விடுதலை கிடைக்கிறது. 12 ராசிக்காரர்களுக்கும் பலன்கள் பரிகாரங்களையும் தனித்தனியாக பார்க்கலாம்.

ரிஷப ராசிக்காரர்களே உங்களுக்கு நல்ல காலம் பிறக்கப்போகிறது. சனி பகவான் உங்கள் ராசிக்கு ஒன்பது, பத்தாம் அதிபதி. தர்ம கர்மாதிபதி சனி பகவான், இந்த முறை மகரம் ராசியில் உங்களின் தர்ம ஸ்தானத்தில் ஆட்சி பெற்று அமரப்போகிறார். கடந்த 5 ஆண்டுகாலமாக அதாவது கண்டச்சனி, அஷ்டமத்து சனியால் அவதிப்பட்ட நீங்கள், நிம்மதி பெறுமூச்சு விடும் நேரம் வந்து விட்டது.

சனிபகவான் மகரத்தில் அமரும் 30 மாத காலம் உங்களின் மகிழ்ச்சி அதிகரிக்கப் போகிறது. உங்களின் பிரச்சினைகள் தீரப்போகின்றன. உடல் நலப்பிரச்சினைகளுக்கு முடிவு ஏற்படப்போகிறது.

ஆட்டி வைத்த சனிபகவான்
எட்டில் அமர்ந்த சனியால் கடந்த 2017ஆம் ஆண்டு முதலே அவதிக்கு ஆளாகி வந்தீர்கள். உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் பிரச்சினைக்கு மேல் பிரச்சினை இருந்தது. எப்படா நமக்கு விடிவுகாலம் பிறக்கும் என்று ஏங்கியிருப்பீர்கள். அதற்கான பொன்னான நேரம் தை மாதம் முதல் வரப்போகிறது. அஷ்டமத்து சனியின் பிடியில் இருந்து விடுபடப்போகிறது.

வருமானம் எப்படி
இந்த சனிப்பெயர்ச்சியால் உங்களுக்கு பணவருவாய் அதிகமாக இருந்தாலும் உங்களின் நிதியை நிர்வாகம் செய்வதில் கரெக்டாக இருங்கள். வரவுக்கு ஏற்ப செலவும் வரிசைகட்டி நிற்கும். புதிய முதலீடுகளை 2020 முடிய தவிர்த்து விடுங்கள். பங்கு சந்தையில் தேவையில்லாமல் முதலீடு செய்யக் கூடாது. தேவையில்லாமல் பிறருக்கு கடன் கொடுத்தல் கூடாது. காரணம் குருபகவான் உங்க அஷ்டம ஸ்தானத்திற்கு வந்து கேது உடன் அமர்கிறார். 2021ஆம் ஆண்டில் இருந்து உங்களுக்கு வருமானம் கூரையை பிய்த்துக்கொண்டு கொண்டும். குருவும் சனியோடு இணைந்து 9ஆம் வீட்டில் சஞ்சரிப்பார்.

சம்பள உயர்வுடன் புது வேலை
இந்த சனிப்பெயர்ச்சி காலத்தில் உங்களுக்கு புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும். மொத்தம் 30 மாதங்கள் சனி பகவான் மகரம் ராசியில் சஞ்சரிக்கும் காலத்தில் வேலை செய்யும் இடத்தில் சம்பள உயர்வுடன் கூடிய புரமோசன் கிடைக்கும். தொழிலில் நல்ல வருமானம் கிடைக்கும். தர்ம சனியால் நிறைய வருமானம் கிடைக்கும் ஆலயங்களுக்கு சென்று இறைவனை தரிசனம் செய்வதோடு நிறைய தர்மகாரியங்களுக்கும் செலவு செய்வீர்கள்.

பிரச்சினைகள் சரியாகும்
உங்கள் ராசிக்கு அஷ்டமத்தில் சஞ்சாரம் செய்து வந்த சனிபகவானால் சொல்லெனாத் துயரங்களையும் துன்பங்களையும் அளித்ததோடு வீண் வழக்குகள் பிரச்சனைகள், போராட்டங்கள், மனகுழப்பங்கள், அசிங்கம், அவமானங்கள் ஏற்பட வைத்து உங்களை ஒரு வழி பண்ணிவிட்டார். வேலையில் பிரச்சனை, விபத்து, ஆபரேசன் இப்படி பலதரப்பட்ட பிரச்சனைகளால் அல்லல்பட்டு வேதனைப் படவைத்தார். தற்சமயம் சனிபகவான் உங்கள் ராசிக்கு ஒன்பதாம் இடத்தில் மகரம் ராசிக்கு இடம் பெயர்ந்து ஆட்சி பெற்று அமர்ந்து அதிக நன்மைகளை தருவார்.

சுறுசுறுப்பாக இருப்பீர்கள்
இந்த சனிப்பெயர்ச்சியால் இது வரை உங்களுக்கு ஏற்பட்ட தடை நீங்கி எதிலும் சுயமாகவும், விரைவாகவும் செயல்பட ஆரம்பிப்பீர்கள். எப்பொழுதும் சுறுசுறுப்புடனும் ஊக்கத்துடனும் செயல்படுவீர்கள். எதிலும் தலைமை ஏற்று நடத்தும் வண்ணம் உங்கள் செயல்பாடு அதிகரிக்கும். உங்களது மதிப்பும், மரியாதையும் உயரும். உங்களை அறியாமலேயே ஒரு உற்சாகம் தொற்றிக்கொள்ளும். சமூகத்தில் நல்ல பெயருடன் வலம் வருவீர்கள். பேச்சில் சாமர்த்தியம் கூடும்.

பொன் பொருள் சேர்க்கை
பணப்புழக்கம் சற்று தாளாரமாக இருந்து வரும். உங்கள் பேச்சை மற்றவர்கள் மதித்து நடப்பர். புதிய ஆடை ஆபரணங்கள் வந்து சேரும். எதிர்பாராத தனவரவும், பொருள்வரவும் ஏற்படும். வெளியில் இருந்த பத்திரங்கள், நகைகள் கைக்கு வந்து சேரும். பெண்களுக்கு உடல் நலப்பிரச்சினைகளும், மன அழுத்தங்களும் தீரும். வேலை தேடுபவர்களுக்கும், வேலை இல்லாமல் இருப்பவர்களுக்கும் நல்ல வேலை வாய்ப்புகள் அமையும்.

வெளிநாடு வாய்ப்பு வரும்
இதுநாள்வரை தடைபட்டு வந்த திருமணம் கை கூடி வரும். இதுநாள் வரை குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு மழலைச் செல்வம் மடியில் தவழும் காலம் வரப்போகிறது. வீடு கட்டி கிரகப்பிரவேசம் செய்வீர்கள். வண்டி வாகனம் வாங்குவீர்கள். வீட்டிற்குத் தேவையான ஆடம்பர பொருட்களும் வாங்குவீர்கள். ஆன்மீக யாத்திரை செல்வீர்கள். சிலருக்கு வெளிநாடு வாய்ப்புகள் கைகூடி வரும்.

உயர்கல்வி யோகம்
ஒன்பதாம் இடத்தில் சனி அமர்ந்து உங்கள் ராசிக்கு லாப ஸ்தானம், முயற்சி தைரிய ஸ்தானம், ருண ரோக சத்ரு ஸ்தானங்களை சனி பகவான் பார்வையிடுகிறார். இதனால் மாணவர்களுக்கு உயர்கல்வி யோகம் தேடி வருகிறது. வெளிநாட்டில் கல்வி பயில சந்தர்ப்பமும் அமையும். தைரியம் அதிகரிக்கும். முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். புதுப்புது விசயங்களை கற்றுக்கொள்வீர்கள். எதிரிகளின் தொல்லைகள் ஒழியும். நண்பர்களால் நன்மை ஏற்படும்.

திருநள்ளாறு சனிபகவான்
இதுநாள்வரை பட்ட துயரங்கள் தீரப்போகிறது. நன்மைகள் அதிகம் நடைபெறும் காலம் என்பதால் குடும்பத்துடன் திருநள்ளாறு சென்று நளதீர்த்தத்தில் நீராடி சனிபகவானையும், தர்ப்பாரண்யேஸ்வரரையும் வணங்கி வாருங்கள். பிரச்சினைகள் தீரும் இனி வரும் காலமெல்லாம் ரிஷப ராசிக்காரர்களுக்கு வசந்த காலமே.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஇன்றைய ராசிப்பலன் – 21.06.2019 வெள்ளிக்கிழமை !
Next articleசனிப்பெயர்ச்சி பலன்கள் 2020-23: மிதுனம் ராசிக்கு அஷ்டமத்து சனி- கவனமா இருங்க மக்களே !