அரசாங்கத்திற்கு எதிரான ஜனபலய எனப்படும் பேரணி இன்றைய தினம் கொழும்பில் மேற்கொள்ளப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் கொழும்பின் பல பகுதிகளில் இருந்தும் சிறிய பேரணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் அவை அனைத்தும் ஒரு இடத்தில் சங்கமிக்கவுள்ளன.
இதேவேளை கொழும்பின், நகர மண்டபம் பகுதியில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறித்த எதிர்ப்பு பேரணி காரணமாகவே வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதுடன், பேரணியில் கலந்து கொள்ளாத மக்கள் அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
கூட்டு எதிர்க்கட்சியினர் கொழும்பில் நடத்தி வரும் ஆர்ப்பாட்ட பேரணிக்கு வரும் மக்களின் எண்ணிக்கையை குறைக்க அரசாங்கம் பல நடவடிக்கைகளை எடுத்தும், எதிர்பாராத அளவில் கொழும்பு நகருக்கு மக்கள் கூட்டம் வந்துள்ளமையானது அரசாங்கத்தின் இரண்டு அரசியல் தலைமைகளான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.