குரு பெயர்ச்சி பலன் 2018 – 2019 ரிஷபம்!

0

ரிஷபம் கிருத்திகை 2,3,4-ஆம் பாதங்கள் ரோகிணி, மிருகசீரிஷம் 1,2-ஆம் பாதங்கள்
ஆடம்பர வாழ்க்கை வாழ்வதிலும், அழகாக தன்னை அலங்கரித்து கொள்வதிலும், அதிக ஆர்வம் கொண்ட ரிஷப ராசி நேயர்களே, பொன்னவன் என போற்றக்கூடிய குருபகவான் வாக்கிய கணிதப்படி வரும் 04-10-2018 முதல் (திருக்கணிப்படி வரும் 11-10-2018 முதல்) உங்கள் ஜென்ம ராசிக்கு சமசப்தம ஸ்தானமான 7-ஆம் வீட்டில் சஞ்சரிக்க இருப்பதால் குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் உண்டாகும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை பலப்படும். இதுவரை தடைபட்டு கொண்டிருந்த திருமணம் போன்ற சுபகாரியங்கள் அனைத்தும் கைகூடி தடபுடலாக நிறைவேறும். சிலருக்கு புத்திர பாக்கியம் அமையும்.

பொருளாதார நிலை சிறப்பாக இருப்பதால் குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். குரு பார்வை ஜென்ம ராசிக்கும், 3, 11-ஆம் வீடுகளுக்கும் இருப்பதால் உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றினாலும் அன்றாட பணிகளில் திறம்பட செயல்பட முடியும். எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் நினைத்தபடி நிறைவேறும். சிலருக்கு வீடு மனை வாங்க கூடிய வாய்ப்பும் அமையும். கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் சரளமான நிலை இருக்கும் என்றாலும் பெரிய தொகைகளை பிறருக்கு கடனாக கொடுப்பதை தவிர்ப்பது நல்லது. 13-2-2019-ல் ஏற்படவிருக்கும் ராகு- கேது மாற்றத்தால் ராகு 2-ஆம் வீட்டிலும் கேது 8-ஆம் வீட்டிலும் சஞ்சரிக்க இருப்பது சாதகமற்ற அமைப்பாகும். இதனால் உற்றார் உறவினர்களிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு ஒற்றுமை குறைவுகள் உண்டாகும்.

உங்களுக்கு அஷ்டம சனி தொடருவதால் எதிலும் ஒரு முறைக்கு பலமுறை சிந்தித்து செயல்படுவது நல்லது. முன்கோபத்தை குறைத்து பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது உத்தமம் என்றாலும் குருவின் சாதகமான சஞ்சாரத்தால் எல்லா வகையிலும் அனுகூலமான பலன்களை பெற முடியும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் எதிர்நீச்சல் போட்டாவது அடைய வேண்டிய லாபத்தை அடைந்து விடுவார்கள். புதிய முயற்சிகளில் ஈடுபடும் போது சிந்தித்து செயல்படுவது கூட்டாளிகளை அனுசரித்து செல்வது மூலம் நற்பலன்கள் கிட்டும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைபளு அதிகரித்தாலும் எதிர்பார்க்கும் உயர்வுகள் தடையின்றி கிடைக்கும். தேவையற்ற பயணங்களை தவிர்ப்பதால் அலைச்சல்கள் குறையும்.

உடல் ஆரோக்கியம்
உடல் ஆரோக்கியம் ஓரளவுக்கு சிறப்பாக இருக்கும். அவ்வபோது சிறுசிறு பாதிப்புகள் தோன்றினாலும் சிறிது மருத்துவ செலவுகளுக்கு பின் குணமாகிவிடும். குடும்பத்தில் உள்ளவர்களாலும் வயதில் மூத்தவர்களாலும் மருத்துவ செலவுகளை சந்திக்க நேரிடலாம். தூரத்து உறவினர்கள் அல்லது வயதானவர்கள் மூலம் மன கவலை ஏற்படும் சூழ்நிலை உண்டாகும். உணவு விஷயத்தில் கட்டுப்பாட்டுடன் இருப்பது நல்லது. பயணங்களால் அலைச்சல்கள் அதிகரிக்கும்.

குடும்பம் பொருளாதார நிலை
குடும்பத்தில் பொருளாதார நிலையானது சிறப்பாக இருக்கும். தடைப்பட்ட சுபகாரியங்களுக்கான முயற்சிகளை மேற்கொண்டால் தடபுடலாக நிறைவேறி மகிழ்ச்சியை உண்டாகும். புத்திர வழியில் பூரிப்பு, சுப நிகழ்ச்சி போன்றவை நடைபெறும். கடந்த கால கடன்களும் படிப்படியாக குறையும். பொன் பொருள் ஆடை ஆபரணம் சேரும். கணவன்- மனைவியிடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. நெருங்கியவர்களிடம் பேச்சில் நிதானத்தை கடைபிடித்தால் அவர்களால் அனுகூலங்களை பெற முடியும். வீடு மனை வண்டி வாகனங்கள் வாங்கும் முயற்சிகளில் நற்பலன் கிடைக்கும்.

கமிஷன்- ஏஜென்சி
கமிஷன் ஏஜென்சி காண்டிராக்ட் போன்ற துறைகளில் இருப்பவர்களுக்கு நல்ல லாபம் கிட்டும். கூட்டாளிகளாலும் சாதகமான பலன்கள் உண்டாகும். பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றிலும் சரளமான நிலை இருக்கும். கொடுத்த கடன்களை வசூலிப்பதில் சில தடைகள் ஏற்பட்டாலும் தாமதங்களுக்கு பிறகு வசூலித்து விட முடியும். வம்பு வழக்குகளில் தேவையற்ற பிரச்சினைகள் ஏற்பட்டாலும் சமாளித்து விடுவீர்கள்.

தொழில் வியாபாரம்
தொழிலில் நிறைய போட்டிகளை சந்தித்தாலும் கடின உழைப்பாலும் விடா முயற்சியாலும் எதிர்நீச்சல் போட்டாவது வெற்றியினை பெறுவீர்கள். தொழிலை விரிவு செய்வதற்காக எடுக்கும் முயற்சிகளில் அனுகூலங்கள் உண்டாகும். வெளியூர் வெளிநாட்டு தொடர்புடையவைகளால் சற்று அலைச்சல் டென்ஷன்கள் அதிகரித்தாலும் வர வேண்டிய வாய்ப்புகள் தடையின்றி வந்த சேரும். தொழில் வியாபாரத்தில் கூட்டாளிகளை அனுசரித்து நடந்து கொண்டால் அபிவிருத்தியை பெருக்கி கொள்ள முடியும்.

உத்தியோகம்
பணியில் வேலைபளு அதிகரித்தாலும் உயர்வுகள் தடைப்படாது. உயரதிகாரிகளின் பாராட்டுதல்களும் உடனிருப்பர்களின் ஒத்துழைப்புகளும் மகிழ்ச்சியளிப்பதாகவே இருக்கும். சிலருக்கு எதிர்பாராத இடமாற்றங்களால் அலைச்சல்கள் அதிகரிக்கக்கூடும். பணி நிமித்தமாக இடமாற்றங்களும் உண்டாக கூடும். புதிய வேலை தேடுபவர்களும் தகுந்த வாய்ப்பினை பெறுவார்கள். வெளியூர் வெளிநாடுகளுக்கு சென்று பணிபுரிய விரும்புபவர்கள் சற்று சிந்தித்து செயல்படுவது நல்லது. பணவரவு சிறப்பாக இருக்கும்.

அரசியல்
அரசியல்வாதிகளுக்கு சற்று ஏற்ற இறக்கமான பலன்களே கிட்டும். பதவிக்கோ, மக்களின் ஆதரவுக்கோ குறை இருக்காது என்றாலும் கட்சி பணிகளுக்காக நிறைய செலவு செய்ய நேரிடும். ஆரோக்கிய பாதிப்புகளால் மருத்துவ செலவுகளை செய்ய வேண்டியிருக்கும். பொருளாதாரநிலை சிறப்பாக இருப்பதால் எதையும் சமாளித்து விடுவீர்கள். உடனிருப்பவர்களின் ஒத்துழைப்புகளால் எதையும் திறம்பட செய்து முடிக்க முடியும்.

விவசாயிகள்
விளைச்சல் சிறப்பாக இருக்கும் என்பதால் லாபமும் சிறப்பாகவே அமையும். பொருளாதார மிகுதியால் பூமி, மனை, வாங்குவது, புதிய நவீன கருவிகள் வாங்குவது போன்றவற்றில் அனுகூலப் பலன் உண்டாகும். பங்காளிகளிடையே இருந்த பிரச்சினைகள் யாவும் விலகி ஒற்றுமை பலப்படும். கடன்கள் குறையும்.

கலைஞர்கள்
புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடக் கூடிய வாய்ப்புகள் அமையும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். சில நேரங்களில் போட்டிகளும், பணவரவுகளில் நெருக்கடிகளும் நிலவினாலும் எதையும் சமாளித்து ஏற்றம் பெறுவீர்கள். பயணங்களாலும் சிறுசிறு அலைச்சல்கள் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் எடுத்து கொள்வது, உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது உத்தமம். வீடு, கார் போன்றவற்றை வாங்கும் யோகம் உண்டாகும்.

பெண்கள்
உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் எடுத்துக் கொண்டால் அன்றாடப் பணிகளில் சுறுசுறுப்புடன் செயல்பட முடியும். பண வரவுகள் சிறப்பாக இருக்கும். செலவுகளும் கட்டுக்குள் இருப்பதால் சேமிப்புகள் பெருகும். உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சி அளிக்கும். முடிந்த வரை பிறர் விஷயங்களில் தலையீடு செய்யாமலிருப்பது நல்லது. அசையும் அசையா சொத்துகள் வாங்கும் முயற்சிகளில் அனுகூலப்பலன் உண்டாகும்.

மாணவ மாணவியர்
மாணவர்கள் கல்வியில் நல்ல மேன்மையினை அடைய முடியும். அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவித் தொகைகள் கிடைக்கும். பெற்றோர் ஆசிரியர்களின் ஆதரவு உங்களுக்கு மகிழ்ச்சியினை ஏற்படுத்தும். கடந்த காலங்களில் இருந்த மந்த நிலை, தேவையற்ற நண்பர்களின் சேர்க்கை போன்ற யாவும் விலகும். விளையாட்டு போட்டிகளில் மாநில அளவில் சாதனைகளை செய்வீர்கள்.

குரு பகவான் விசாக நட்சத்திரத்தில் 04.10.2018 முதல் 21.10.2018 வரை
ஜென்ம ராசிக்கு சமசப்தம ஸ்தானமான 7-ஆம் வீட்டில் குரு தனது சொந்த நட்சத்திரத்தில் சஞ்சாரம் செய்வது நல்ல அமைப்பு என்பதால் எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் லாபமும் வெற்றியும் கிட்டும். நினைத்ததை நிறைவேற்ற கூடிய ஆற்றலைப் பெறுவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றி மறையும். பொருளாதார நிலை சிறப்பாக இருப்பதால் குடும்பத் தேவைகளைப் பூர்த்தி செய்து விட முடியும். எதிர்பாராத உதவிகளும் கிடைப்பதால் கடன்களும் சற்று குறையும். 8-ஆம் வீட்டில் சனி சஞ்சரிப்பதால் கணவன்- மனைவியிடையே அடிக்கடி வாக்கு வாதங்கள் ஏற்பட்டாலும் ஒற்றுமை குறையாது.

தொழில் வியாபாரம் செய்பவர்கள் கூட்டாளிகளை அனுசரித்து நடந்து கொண்டால் அபிவிருத்தியை பெருக்கி கொள்ள முடியும். உற்றார் உறவினர்கள் ஒரளவுக்கு அனுகூலமாக இருப்பார்கள். அசையும் அசையா சொத்துகள் வாங்கும் விஷயங்களில் சிந்தித்து செயல்படுவது நல்லது. பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் எதிர்பார்த்த லாபத்தை பெற முடியும் என்றாலும் பெரிய தொகைகளை கடனாக கொடுப்பதை தவிர்க்கவும். மாணவர்கள் கல்வியில் நல்ல மதிப்பெண்களை பெற சற்று கடின முயற்சிகளை மேற்கொள்ள வேண்டியிருக்கும். சனிக்குரிய பரிகாரங்களை செய்வதால் எல்லா வகையிலும் நன்மைகள் கிட்டும்.

குரு பகவான் அனுச நட்சத்திரத்தில் 22.10.2018 முதல் 20.12.2018 வரை
ஜென்ம ராசிக்கு 7-ல் குருபகவான் உங்கள் ராசிக்கு தர்மகர்மாதிபதியான சனியின் நட்சத்திரத்தில் சஞ்சாரம் செய்வது அற்புதமான அமைப்பு என்பதால் திருமணம் போன்ற சுப காரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலம் உண்டாகும். பண வரவுகள் சிறப்பாக இருக்கும். புதிய நவீனகரமான பொருட்களை வாங்கும் வாய்ப்பு அமையும். குடும்பத்தில் கணவன்- மனைவியிடையே சிறுசிறு ஒற்றுமைக் குறைவுகள் உண்டாகும் என்றாலும் பெரிய பிரச்சினைகள் ஏற்படாது. பணம் கொடுக்கல்- வாங்கல் சரளமாக நடைபெறும். கொடுத்த கடன்களையும் தடையின்றி வசூலிக்க முடியும்.

சனி 8-ல் சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் எடுத்து கொள்வது நல்லது. தொழில், வியாபாரம் செய்பவர்கள் பேச்சில் நிதானத்தை கடைப்பிடித்து கூட்டாளிகளையும் தொழிலாளர்களையும் அனுசரித்து நடந்து கொண்டால் அபிவிருத்தியை பெருக்கிக் கொள்ள முடியும். புதிய வாய்ப்புகள் கிடைப்பதால் லாபம் அதிகரிக்கும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் திறம்பட செயல்பட்டு அனைவரின் பாராட்டுதல்களை பெறுவார்கள். புதிய வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை வாய்ப்பு அமையும். மாணவர்கள் நல்ல மதிப்பெண்களை பெற்று பள்ளி கல்லூரிக்கு பெருமை சேர்ப்பார்கள். சனிக்குரிய பரிகாரங்களை செய்வது ஆஞ்சநேயரை வழிபடுவது நல்லது.

குரு பகவான் கேட்டை நட்சத்திரத்தில் 21.12.2018 முதல் 12.03.2019 வரை
இக்காலங்களில் ஜென்ம ராசிக்கு 7-ல் குருபகவான் தன, பஞ்சம ஸ்தானாதிபதியான புதனின் நட்சத்திரத்தில் சஞ்சரிப்பது நல்ல அமைப்பு என்பதால் உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியினை உண்டாக்கும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தடையின்றி அனுகூலம் உண்டாகும். தாராள தனவரவுகளால் குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். கடன்கள் யாவும் குறையும். பணிபுரிபவர்களுக்கு பணியில் எதிர்பார்க்கும் உயர்வுகளை பெறுவதில் இருந்த தடை யாவும் விலகும். புதிய வேலை தேடுபவர்களுக்கும் தகுதிக்கேற்ற வேலை வாய்ப்பு கிட்டும். வெளியூர் வெளிநாடுகளுக்குச் சென்று பணிபுரிய விரும்புவர்களின் விருப்பமும் நிறைவேற கூடிய சந்தர்ப்பங்கள் அமையும். எதிர்பார்த்த இடமாற்றங்களும் கிடைக்கப் பெற்று மனநிம்மதி உண்டாகும்.

பயணங்களால் தேவையற்ற அலைச்சல்களை சந்திக்க நேர்ந்தாலும் அதன் மூலம் அனுகூலப் பலனை அடைய முடியும். தொழில் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். அஷ்டமசனி நடைபெறுவதும் வரும் 13.2.2019-ல் ஏற்படவுள்ள சர்பகிரக மாற்றத்தால் ராகு 2-ஆம் வீட்டிலும், கேது 8-ஆம் வீட்டிலும் சஞ்சாரம் செய்ய இருப்பதும் சாதகமற்ற அமைப்பு என்பதால் உடல் ஆரோக்கியத்தில் சற்றே மந்த நிலை, கை, கால் அசதி, சோர்வு போன்றவை ஏற்படும் என்றாலும் அன்றாட பணிகளை செய்து முடிப்பதில் எந்த சிக்கலும் ஏற்படாது. கொடுக்கல்- வாங்கலில் சிந்தித்து செயல்படுவது நல்லது. மாணவர்களுக்கு கல்வியில் நல்ல ஈடுபாடு உண்டாகும். ஆஞ்சநேயரை வழிபாடு செய்வது நல்லது.

குரு பகவான் மூல நட்சத்திரத்தில் தனுசு ராசியில் 13.03.2019 முதல் 09.04.2019 வரை
இக்காலங்களில் குருபகவான் தன் சொந்த வீடான தனுசு ராசியில் கேதுவின் நட்சத்திரமான மூலத்தில் சஞ்சரிப்பது நல்ல அமைப்பு என்றாலும் அதிசாரமாக ஜென்ம ராசிக்கு 8-ல் சஞ்சாரம் செய்வதாலும், அஷ்டமசனி நடைபெறுவதாலும் உடல் நிலையில் உஷ்ண சம்மந்தப்பட் பாதிப்புகள் உண்டாகும். ஆரோக்கியத்தில் கவனமுடன் செயல்பட்டால் எதையும் சமாளித்து ஏற்றம் பெறுவீர்கள். பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது, முன்கோபத்தைக் குறைத்துக் கொள்வது நல்லது. பணவரவுகளில் ஏற்ற இறக்கமான நிலை இருக்கும் என்பதால் வீண் செலவுகளை தவிர்க்கவும்.

கணவன்- மனைவியிடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டாலும் ஒற்றுமை குறையாது. உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வது நல்லது. பணம் கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை பிறருக்கு கடனாக கொடுப்பதை தவிர்க்கவும். தொழில், வியாபார ரீதியாக எடுக்கும் புதிய முயற்சிகளில் சிந்தித்து செயல்படுவது மூலம் வீண் விரயங்களை குறைத்து கொள்ள முடியும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களிடம் விட்டு கொடுத்து நடந்து கொண்டால் அவர்களின் ஆதரவுகள் சிறப்பாக அமையும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் சிறுசிறு நெருக்கடிகள் தோன்ற கூடும். மாணவர்கள் தேவையற்ற நட்புகளால் வீண் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். குரு ப்ரீதியாக தட்சிணா மூர்த்தியை வழிபாடு செய்வது நல்லது.

குரு பகவான் வக்ர கதியில் 10.04.2019 முதல் 06.08.2019 வரை
குருபகவான் வக்ரகதியில் சஞ்சாரம் செய்வதும், அஷ்டமசனி நடைபெறுவதும், சர்பகிரகங்கள் சாதகமன்றி சஞசரிப்பதும் அனுகூலமற்ற அமைப்பு என்பதால் தேவையற்ற அலைச்சல் டென்ஷன்கள் அதிகரிக்கும். உடல் நிலையில் அடிக்கடி பாதிப்புகள் ஏற்படும். கணவன்- மனைவியிடையே வீண் வாக்கு வாதங்கள் ஏற்பட்டு குடும்பத்தில் நிம்மதி குறைவு உண்டாகும். பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. எடுக்கும் முயற்சிகளில் எதிர்நீச்சல் போட வேண்டி வரும். பணவரவுகள் தேவைக்கேற்றபடி இருந்தாலும் எதிர்பாராத வகையில் தேவையற்ற வீண் விரயங்கள் ஏற்படும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தடைகள் உண்டாகும்.

குடும்பத்தில் உள்ளவர்களிடம் சற்று விட்டு கொடுத்து நடந்து கொள்வது, அசையும் அசையா சொத்துகள் வாங்கும் முயற்சிகளில் சிந்தித்து செயல்படுவது நல்லது. கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை கடனாக கொடுப்பதை தவிர்க்கவும். செய்யும் தொழில் வியாபாரத்தில் சற்று மந்த நிலையை சந்திக்க நேர்ந்தாலும் ஓரளவுக்கு லாபம் கிடைக்கும். எதிர்பார்க்கும் கடன் உதவிகள் தாமதப்படும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும். மாணவர்களுக்கு கல்வியில் ஈடுபாடு குறைவாகவே இருக்கும். தேவையற்ற பொழுது போக்குகளை தவிர்த்து கல்வியில் கவனம் செலுத்துவது உத்தமம். தட்சிணாமூர்த்தியை வழிபடுவது நல்லது.

குரு பகவான் கேட்டை நட்சத்திரத்தில் 07.08.2019 முதல் 28.10.2019
குருபகவான் ஜென்ம ராசிக்கு 7-ல் உங்கள் ராசியாதிபதி சுக்கிரனுக்கு நட்பு கிரகமான புதனின் நட்சத்திரத்தில் சஞ்சாரம் செய்வதால் குடும்பத்தில் சுபிட்சமான நிலை இருக்கும். கணவன்- மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். உற்றார் உறவினர்கள் சாதகமாகச் செயல்படுவார்கள். புத்திர வழியிலும் மகிழ்ச்சி நிலவும். பூர்வீகச் சொத்துக்களால் கிடைக்க வேண்டிய அனுகூலம் கிட்டும். பணவரவுகள் சிறப்பாக இருப்பதோடு எதிர்பாராத தனவரவுகளாலும் பொருளாதார நிலை உயர்வடையும். குடும்ப தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். உங்களுக்குள்ள வம்பு, வழக்குகளில் சாதகப் பலன் கிட்டும்.

பங்காளிகள் ஒற்றுமையுடன் செயல்படுவார்கள். உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் ஏற்பட்டாலும் அன்றாட பணிகளை சுறுசுறுப்பாக செய்ய முடியும். கொடுக்கல்- வாங்கலில் சரளமான நிலையிருக்கும். கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றி விட முடியும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்க்கும் உயர்வுகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உண்டாகும். வெளியூர் வெளிநாடுகளுக்குச் சென்று பணிபுரிய விரும்புவோரின் விருப்பங்களும் நிறைவேறும். புதிய வேலை தேடுபவர்களுக்கு தகுதிக்கேற்ற வேலை கிட்டும். அடிக்கடி பயணங்கள் மேற்கொள்ளக் கூடிய வாய்ப்பும் உண்டாகும். மாணவர்கள் கல்வியில் உயர்வடைவார்கள். ராகு கேதுவுக்கு பரிகாரம் செய்வது நல்லது.

பரிகாரம்
ரிஷப ராசியில் பிறந்துள்ள உங்களுக்கு சனி பகவான் அஷ்டம ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் சனிக்கிழமை தோறும் அனுமனையும் விநாயகரையும் வழிபடுவது, நல்லெண்ணெய் தீபமேற்றுவது நல்லது. சனிக்கிழமைகளில் திருப்பதி ஏழுமலையில் வீற்றிருக்கும் ஸ்ரீபாலாஜி வெங்கடாசலபதியை வழிபட்டாலும் சனியால் ஏற்படக்கூடிய கெடுதிகள் குறையும். 13-02-2019 முதல் சர்பகிரகங்கள் சாதமின்றி சஞ்சரிக்க இருப்பதால் ராகு காலத்தில் துர்க்கை அம்மனுக்கு எலுமிச்சம் பழத்தில் விளக்கேற்றி கஸ்தூரி மலர்களால் அர்ச்சனை செய்வது. தினமும் விநாயகரை வழிபடுவது உத்தமம்.

அதிர்ஷ்டம் அளிப்பவை
எண் – 5,6,8 நிறம் – வெண்மை, நீலம், கிழமை – வெள்ளி, சனி
கல் – வைரம் திசை – தென்கிழக்கு, தெய்வம் – விஷ்ணு, லக்ஷ்மி

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஇருமலை குணப்படுத்த வைத்திய குறிப்புகள்!
Next articleஇலங்கை வந்த வெளிநாட்டு தம்பதியருக்கு ஏற்பட்ட பரிதாபம்!