குரு பெயர்ச்சி பலன் 2018 – 2019 – மேஷம்

0

மேஷம் அசுவனி, பரணி, கிருத்திகை1-ஆம் பாதம்
அஞ்சா நெஞ்சம் கொண்டு எதிலும் துணிவுடன் செயல்பட கூடிய ஆற்றல் கொண்ட மேஷ ராசி நேயர்களே, உங்கள் ராசியாதிபதி செவ்வாய்க்கு நட்பு கிரகமான குருபகவான் இதுவரை சமசப்தம ஸ்தானமான 7-ல் சஞ்சரித்ததால் பல நற்பலன்களை வழங்கினார் என்றாலும் வாக்கிய கணிதப்படி வரும்(திருக்கணிப்படி வரும் 11-10-2018 முதல்) 04-10-2018 முதல் ஜென்ம ராசிக்கு அஷ்டம ஸ்தானமான 8-ஆம் வீட்டில் சஞ்சரிக்க உள்ளார். இது சாதகமற்ற அமைப்பு என்பதால் பணவரவில் சிறுசிறு நெருக்கடிகளை சந்திப்பீர்கள். எதிர்பார்க்கும் உதவிகளும் தாமதங்களுக்கு பின்பே கிடைக்கும். ஆடம்பர செலவுகளை குறைத்து கொண்டால் தேவையற்ற வகையில் கடன்கள் ஏற்படுவதை தவிர்க்கலாம். உடல் ஆரோக்கியத்தில் வயிறு சம்மந்தப்பட்ட பாதிப்புகள், அஜீரண கோளாறு போன்றவை உண்டாகி மருத்துவ செலவுகள் அதிகரிக்கும்.

மனைவிக்கும் ஆரோக்கியத்தில் பாதிப்புகள் உண்டாக கூடிய சூழ்நிலை ஏற்படும். குருபகவான் 2, 4, 12-ஆம் வீடுகளை பார்வை செய்வதால் குடும்பத்தில் கணவன்- மனைவியிடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகளில் சில தடைகளுக்கு பிறகு நற்பலன் கிடைக்கும். சுக வாழ்வுக்கு பஞ்சம் ஏற்படாது. சனி பகவான் 9-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் பயணங்களால் அனுகூலமான பலன்களை அடைவீர்கள். வெளியூர், வெளிமாநிலங்களுக்கு செல்ல கூடிய வாய்ப்புகளும் அமையும். தந்தை, தந்தை வழி உறவுகளிடைய சில மனசஞ்சலங்கள் தோன்றி மறையும். 13-2-2019-ல் ஏற்படவிருக்கும் சர்ப கிரக மாற்றத்தால் ராகு 3-ஆம் வீட்டில் சஞ்சரிக்க இருப்பது சாதகமான பலனை உண்டாக்கும்.

எடுக்கும் முயற்சிகளில் எதிர்நீச்சல் போட்டாவது முன்னேறி விடுவீர்கள். பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தும் போது சிந்தித்து செயல்படுவது நல்லது. தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு எதிர்பார்க்கும் லாபங்கள் கிடைக்கும் என்றாலும் புதிய முயற்சிகளை மேற்கொள்ள அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகள் தாமதப்படும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் ஊதிய உயர்வுகள் தாமதப்பட்டாலும் கௌரவமான பதவி உயர்வுகளை பெற முடியும். ஆன்மீக தெய்வீக காரியங்களில் ஈடுபடும் வாய்ப்பும் அதனால் மன நிம்மதியும் உண்டாகும். குரு 8-ல் சஞ்சரித்தாலும் உங்கள் ராசியாதிபதி செவ்வாய்க்கு நட்பு கிரகம் என்பதால் பெரிய பாதிப்புகள் ஏற்படாமல் எதையும் சமாளித்து விட முடியும்.

உடல் ஆரோக்கியம்
உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டிய காலமாகும். வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சினைகள், ஜீரணமின்மை, உடல் சோர்வு, மந்தமான நிலை போன்றவற்றால் அன்றாட பணிகளில் சுறுசுறுப்பாக ஈடுபட முடியாத நிலை உண்டாகும். குடும்பத்தில் உள்ளவர்களாலும் அடிக்கடி மருத்துவ செலவுகள் உண்டாவதால் மன நிம்மதியற்ற நிலையே நீடிக்கும். பயணங்கள் மேற்கொள்ள வேண்டிய சூழ்நிலைகள் ஏற்பட்டாலும் தேவையற்ற பயணங்களை தவிர்ப்பதால் வீண் அலைச்சல்களை குறைத்து கொள்ள முடியும்.

குடும்பம் பொருளாதார நிலை
குடும்பத்தில் தேவையற்ற வாக்கு வாதங்கள் ஏற்பட்டாலும் ஒற்றுமை குறைவு உண்டாகாது. தந்தை, மற்றும் தந்தை வழி உறவினர்களை அனுசரித்து நடந்து கொண்டால் தேவையற்ற பிரச்சினைகளை தவிர்க்கலாம். பணவரவுகள் தாராளமாக இருந்தாலும் எதிர்பாராத செலவுகளால் கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். திருமணம் போன்ற சுப காரியங்களுக்கான முயற்சிகளில் தடைகளுக்கு பின் அனுகூலம் உண்டாகும். எடுக்கும் எந்தவொரு முயற்சியிலும் எதிர் நீச்சல் போட்டாவது வெற்றியினை பெறுவீர்கள்.

கமிஷன்- ஏஜென்சி
கமிஷன் ஏஜென்சி காண்டிராக்ட் போன்ற துறைகளில் இருப்போர் மிகவும் கவனமுடன் செயல்பட வேண்டிய காலமிது. பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றிலும் பெரிய தொகைகளை ஈடுபடுத்துவதை தவிர்ப்பது நல்லது. கொடுத்த கடன்களை வசூலிப்பதிலேயே வீண் பிரச்சினைகளை எதிர்கொள்வீர்கள். கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்ற முடியாத சூழ்நிலை ஏற்படும். உங்களுக்குள்ள வம்பு வழக்குகளில் இழுபறி நிலையே நீடிக்கும். மறைமுக எதிர்ப்புகள் அதிகரிக்கும்.

தொழில், வியாபாரம்
எடுக்கும் எந்தவொரு புதிய முயற்சிகளிலும் எதிர்நீச்சல் போட வேண்டியிருக்கும். அதிகமான உழைப்பினை மேற்கொண்டால் மட்டுமே லாபத்தை அடைய முடியும். போட்டி பொறாமை அதிகரிக்க கூடிய காலம் என்பதால் கையில் இருக்கும் வாய்ப்புகளை நழுவ விடாமல் பார்த்து கொள்வது நல்லது. வேலையாட்களும் தேவையற்ற பிரச்சினைகளை உண்டாக்குவார்கள். வெளியூர் வெளிநாடு தொடர்புடையவைகளால் ஓரளவுக்கு அனுகூலங்களை பெற முடியும். பெரிய தொகைகளை ஈடுபடுத்தி தொழிலை விரிவு செய்யும் நோக்கங்களை சில காலம் தள்ளி வைப்பது நல்லது. எதிர்பார்க்கும் உதவிகள் தாமதப்படும்.

உத்தியோகம்
உத்தியோகஸ்தர்களுக்கு உடன் பணிபுரிபவர்கள் தேவையற்ற நெருக்கடிகளை ஏற்படுத்தினாலும் உயரதிகாரிகளின் ஆதரவுகள் மகிழ்ச்சியை ஏற்படுத்தும். வேலைபளு அதிகரிப்பதால் உடல் நிலையில் சோர்வு உண்டாகி அடிக்கடி விடுப்பு எடுக்க வேண்டிய சூழ்நிலைகள் உண்டாகும். புதிய வேலை தேடுபவர்களுக்கும் தகுதிக்கு ஏற்ற வேலை சற்று தாமதமாக கிடைக்கும். வெளியூர் வெளிநாடுகளில் பணிபுரிய விரும்புபவர்களின் விருப்பம் நிறைவேறும். சிலருக்கு எதிர்பாராத இடமாற்றங்களால் குடும்பத்தை பிரிய நேரிடும். உங்களுக்கு கிடைக்க வேண்டிய பதவி உயர்வுகள் சற்று தாமதப்படும்.

அரசியல்
அரசியல்வாதிகள் தங்கள் பதவிகளை காப்பாற்றிக் கொள்ள மக்களின் தேவைகளை பூர்த்தி செய்வது நல்லது. மக்களின் ஆதரவுகள் ஒரளவுக்கு திருப்தியாக இருப்பதால் எந்த பிரச்சினைகளையும் எதிர்கொள்ள கூடிய ஆற்றல் உண்டாகும். கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற அதிக முயற்சிகளை எதிர்கொள்ள நேரிடும். பத்திரிக்கை செய்திகளாலும் தேவையற்ற வதந்திகளாலும் மன நிம்மதி குறையும். அடிக்கடி பயணங்கள் மேற்கொள்ளும் சூழ்நிலை ஏற்படும்.

விவசாயிகள்
பயிர் விளைச்சல் சுமாராக இருப்பதால் உழைப்பிற்கேற்ற பலனை பெறமுடியாமல் போகும். பூமி, மனை போன்றவற்றால் வீண் விரயங்கள் அதிகரிக்கும். வாய்க்கால், வரப்பு பிரச்சினைகளால் வம்பு வழக்குகள் ஏற்படும். விளை பொளுக்கேற்ற விலை கிடைக்காது. பொருளாதார நிலை சுமாராக தான் இருக்கும். பயிர்களை இன்சூரன்ஸ் செய்வது நல்லது. அரசு வழியில் எதிர்பார்க்கும் மானியங்கள் தடைக்குப் பின் கிடைக்கும்.

கலைஞர்கள்
எதிர்பார்த்து காத்திருந்த பட வாய்ப்புகள் ஓரளவுக்கு கிடைக்கும். பொருளாதார நெருக்கடிகளால் சுகவாழ்வு சொகுசு வாழ்வு பாதிப்படையும். வரவேண்டிய பணத் தொகைகளும் சற்று தாமதப்படுவதால் சில நேரங்களில் கடன் வாங்க நேரிடும். உடனிருப்பவர்களிடம் பழகும் போதும், பத்திரிக்கைகளுக்கு பேட்டி கொடுக்கும் போதும் பேச்சில் நிதானத்தை கடைப்பிடிப்பது நல்லது. தேவையற்ற கிசு கிசுக்களால் சற்று மன நிம்மதி குறையும். அடிக்கடி பயணங்களை மேற்கொள்வீர்கள்.

பெண்கள்
உடல் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்து கொள்வது நல்லது. திருமண வயதை அடைந்தவர்களுக்கு சுப காரியங்கள் சில தடைகளுக்கு பின் நிறைவேறும். பணவரவில் நெருக்கடிகள் நிலவுவதால் குடும்பத் தேவைகளை பூர்த்தி செய்வதற்கே கடன் வாங்க வேண்டிய நிலை உருவாகும். பிள்ளைகளால் மன சஞ்சலங்களையும் எதிர்கொள்வீர்கள். தங்களுடைய மனக்குறைகளை கூட தகுதியானவர்களிடம் மட்டும் பகிர்ந்து கொள்வது நல்லது. பணிபுரியும் பெண்களுக்கு வேலைபளு அதிகரிக்கும். வீடு, மனை வாங்கும் முயற்சிகளில் ஒரு முறைக்கு பல முறை சிந்தித்து செயல்படுவது நல்லது.

மாணவ- மாணவியர்
கல்வியில் சற்று அதிக கவனம் எடுக்க வேண்டிய காலமாகும். மந்த நிலை, ஞாபக மறதி போன்றவற்றால் மதிப்பெண்கள் குறையும். அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகள் தாமதப்படும். தேவையற்ற நண்பர்களின் சேர்க்கையால் மனது அலைபாய கூடிய சூழ்நிலை உண்டாகும் என்பதால் எதிலும் சிந்தித்து செயல்படுவது, பெற்றோர் சொல்படி நடப்பது நல்லது. விளையாட்டில் கவனம் தேவை.

குரு பகவான் விசாக நட்சத்திரத்தில் 04.10.2018 முதல் 21.10.2018 வரை

உங்கள் ராசியாதிபதி செவ்வாய்க்கு நட்பு கிரகமான குருபகவான் தன் சொந்த நட்சத்திரத்தில் சஞ்சரிப்பது நல்ல அமைப்பு என்றாலும் ஜென்ம ராசிக்கு 8-ல் சஞ்சாரம் செய்வதால் அவ்வளவாக சாதக பலன்களை பெற முடியாது. பணவரவுகளில் ஏற்ற இறக்கமான நிலை காணப்பட்டாலும் எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். கணவன்- மனைவியிடையே தேவையற்ற கருத்துவேறுபாடுகள் உண்டாகும் என்பதால் பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது, குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்து நடப்பது நல்லது. எடுக்கும் காரியங்களில் சிறுசிறு தடைகளுக்குப் பின் வெற்றி கிட்டும். சனி 9-ல் சஞ்சரிப்பதால் அசையும் அசையா சொத்துக்களால் சிறுசிறு பிரச்சினைகளை சந்திக்க நேர்ந்தாலும் ஓரளவுக்கு லாபம் கிடைக்கும்.

குடும்பத்தில் சுபச் செலவுகள் அதிகரிக்கும். தொழில் வியாபார ரீதியாக ஓரளவுக்கு முன்னேற்றங்கள் உண்டாகும். எதிர்பார்க்கும் லாபங்களும் கிடைக்கும். தேவையற்ற பயணங்களை தவிர்ப்பதால் அலைச்சல்களை குறைத்து கொள்ள முடியும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் ஏற்பட்டாலும் மருத்துவச் செலவுகள் உண்டாகாது. பணம் கொடுக்கல்- வாங்கலில் பிறரை நம்பி பெரிய தொகைகளை கடனாக கொடுப்பதை தவிர்க்கவும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. மாணவர்களின் கல்வி திறன் சிறப்பாகவே இருக்கும். தேவையற்ற நண்பர்களின் சகவாசத்தை தவிர்ப்பது நல்லது. தட்சிணாமூர்த்தியை வழிபாடு செய்வது நல்லது.

குரு பகவான் அனுச நட்சத்திரத்தில் 22.10.2018 முதல் 20.12.2018 வரை

குருபகவான் உங்கள் ஜென்ம ராசிக்கு 10,11-க்கு அதிபதியான சனியின் நட்சத்திரத்தில் 8-ல் சஞ்சரிப்பதும், 9-ல் சனி சஞ்சாரம் செய்வதும் சுமாரான அமைப்பு என்பதால் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்ய நினைக்கும் காரியங்களில் சற்று சிந்தித்து செயல்படுவது உத்தமம். செய்யும் தொழில், வியாபாரத்தில் இதுவரை இருந்த போட்டிகள், மறைமுக எதிர்ப்புகள் யாவும் சற்று குறையும். கூட்டாளிகளிடையே அடிக்கடி கருத்து வேறுபாடுகள் உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் தடைப்பட்டுக் கொண்டிருந்த உயர்வுகள் கிடைப்பதற்கான சந்தர்ப்பங்கள் அமையும். சிலருக்கு எதிர்பாராத இடமாற்றங்களால் அலைச்சல் அதிகரிக்கும்.

உடல் ஆரோக்கியத்தில் சற்று சோர்வு மந்த நிலை தோன்றும் என்றாலும் அன்றாட பணிகளில் சுறுசுறுப்பாகச் செயல்பட முடியும். எடுக்கும் காரியங்களில் எதிர்நீச்சல் போட்டாவது வெற்றியினை பெற்று விட கூடிய ஆற்றல் உண்டாகும். கொடுக்கல்- வாங்கலில் கவனமுடன் செயல்படுவது உத்தமம். குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் நிறைந்திருக்கும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு வரன் தேடும் விஷயங்களை சற்று தள்ளி வைப்பது உத்தமம். சிலருக்கு வீடு, வாகனம் போன்றவற்றை வாங்க வேண்டும் என்ற எண்ணம் நிறைவேறுவதில் தாமத நிலை ஏற்படும். மாணவர்கள் தேவையற்ற நண்பர்களின் சகவாசத்தையும், பொழுது போக்குகளையும் தவிர்த்து விடுவது உத்தமம். ராகு கேதுவுக்கு பரிகாரம் செய்வது நல்லது.

குரு பகவான் கேட்டை நட்சத்திரத்தில் 21.12.2018 முதல் 12.03.2019 வரை

குருபகவான் உங்கள் ஜென்ம ராசிக்கு 3, 6 -க்கு அதிபதியான புதனின் நட்சத்திரத்தில் 8-ல் சஞ்சரிப்பதும், 9-ல் சனி சஞ்சாரம் செய்தும் ஓரளவுக்கு சுமாரான அமைப்பு என்பதால் எந்தவித எதிர்ப்புகளையும் சமாளித்து வெற்றிகளை பெறும் ஆற்றல் உண்டாகும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை குறையக்கூடிய சூழ்நிலைகள், வீண் வாக்குவாதங்கள் உண்டாகும். குடும்பத்திலுள்ள அனைவரையும் அனுசரித்துச் செல்வது பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. பொருளாதார நிலை ஏற்ற இறக்கமாக இருந்தாலும் எதிர்பாராத உதவிகள் சில கிடைக்கப் பெறுவதால் எதையும் சமாளித்துவிட முடியும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் உண்டாகி மருத்துவ செலவுகளை ஏற்படுத்தும்.

தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு உண்டாக கூடிய போட்டி பொறாமைகளால் வரவேண்டிய வாய்ப்புகள் சில தடைகளுக்கு பின் கிட்டும். 13.2.2019-ல் ஏற்படும் சர்பகிரக மாற்றத்தால் ராகு 3-ல் சஞ்சரிக்க இருப்பது நல்ல அமைப்பு என்பதால் எடுக்கும் முயற்சிகளில் அனுகூலமானப் பலன்கள் உண்டாகும். உத்தியோகஸ்தர்கள் உடன் பணிபுரிவர்களின் ஆதரவுடன் அனைத்து பணிகளையும் சிறப்பாக செய்து முடிக்க முடியும். ஆன்மீக தெய்வீக காரியங்களில் ஈடுபடக்கூடிய வாய்ப்புகளும் ஏற்படும். பூமி மனை வாங்கும் விஷயங்களில் சற்று நிதானித்துச் செயல்படுவது நல்லது. மாணவர்கள் முயன்று படித்தால் மட்டுமே நல்ல மதிப்பெண்களை பெற முடியும். தட்சிணா மூர்த்தியை வழிபாடு செய்வது உத்தமம்.

குரு பகவான் மூல நட்சத்திரத்தில் தனுசு ராசியில் 13.03.2019 முதல் 09.04.2019 வரை

இக்காலங்களில் குருபகவான் கேதுவின் நட்சத்திரமான மூலத்தில் தன் சொந்த வீடான தனுசு ராசியில் அதிசாரமாக ஜென்ம ராசிக்கு 9-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்வதால் பண வரவுகள் சிறப்பாக இருக்கும். கடன்கள் சற்றே குறையும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலம் உண்டாகும். எடுக்கும் முயற்சிகளிலும் வெற்றி கிட்டும். குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்து நடந்து கொண்டால் ஒற்றுமையை நிலை நாட்ட முடியும். உடல் ஆரோக்கியத்தில் உஷ்ண சம்மந்தப்பட்ட பாதிப்புகள் உண்டாகும். புத்திர வழியில் மகிழ்ச்சி தரக்கூடிய சம்பவங்கள் நடைபெறும். பொன், பொருள் சேரும்.

உற்றார் உறவினர்கள் ஓரளவுக்கு சாதகமாக செயல்படுவார்கள். ஆன்மீக தெய்வீகப் பணிகளில் ஈடுபாடு உண்டாகும். பெரிய மனிதர்களின் தொடர்பு கிட்டும். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். தேவையற்ற அலைச்சல் டென்ஷன்கள் ஏற்பட்டாலும் தொழில் வியாபாரம் செய்பவர்கள் எதிர்பார்க்கும் லாபங்களை தடையின்றிப் பெற முடியும். உத்தியோகஸ்தர்களுக்கும் எதிர்பார்க்கும் உயர்வுகளும், இடமாற்றங்களும் கிடைக்கும். கொடுக்கல்- வாங்கலில் சற்று சிந்தித்து செயல்பட்டால் லாபத்தினை பெற முடியும். மாணவர்கள் நல்ல மதிப்பெண்களைப் பெறுவதுடன் விளையாட்டு போட்டிகளிலும் சிறந்து விளங்குவார்கள். ஆஞ்சநேயரை வழிபாடு செய்வது சனிக்குரிய பரிகாரங்களை செய்வது நல்லது.

குரு பகவான் வக்ர கதியில் 10.04.2019 முதல் 06.08.2019 வரை

குரு இக்காலங்களில் வக்ரகதியில் சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் சற்று மந்த நிலை நிலவினாலும் அன்றாட பணிகளில் திறம்பட செயல்பட முடியும். கணவன்- மனைவியிடையே வாக்கு வாதங்கள் தோன்றினாலும் ஒற்றுமை சிறப்பாகவே இருக்கும். ஆடை ஆபரணம் போன்றவற்றை வாங்கும் வாய்ப்பு அமையும். பணவரவுகள் சிறப்பாக அமைவதால் குடும்பத் தேவைகளும் பூர்த்தியாகும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். திருமண சுபகாரிய முயற்சிகளில் அனுகூலப்பலன் உண்டாகும். உற்றார் உறவினர்களின் ஆதரவு மகிழ்ச்சி அளிக்கும் என்றாலும் பேச்சில் சற்று கவனமுடன் செயல்படுவது உத்தமம்.

கொடுக்கல்- வாங்கலில் கடந்த காலங்களிலிருந்த பிரச்சினைகள் விலகும். பெரிய தொகைகளை எளிதில் ஈடுபடுத்தி லாபம் காண முடியும். கொடுத்த கடன்களும் வீடு தேடி வரும். விரோதிகளும் நண்பர்களாவார்கள். தெய்வ தரிசனங்களுக்காக பயணங்களை மேற்கொள்வீர்கள். பணிபுரிபவர்களுக்கு தகுதிக்கேற்ற உயர்வுகள் கிடைக்கும். திறமைகள் பாராட்டப்படும். தொழிலாளர்களும் சாதகமாகச் செயல்படுவதால் அபிவிருத்தியைப் பெருக்க முடியும். மாணவர்களுக்கு அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகள் தாமதப்பட்டாலும் ஆசிரியர்களின் ஊக்குவிப்பால் முன்னேற்றம் அடைவார்கள். தினமும் விநாயகர் வழிபாடு செய்வது நல்லது.

குரு பகவான் கேட்டை நட்சத்திரத்தில் 07.08.2019 முதல் 28.10.2019 வரை

ஜென்ம ராசிக்கு 8-ல் குரு சஞ்சரிப்பது சாதகமற்ற அமைப்பு என்றாலும் 3,6-க்கு அதிபதியான புதனின் நட்சத்திரத்தில் சஞ்சரிப்பதாலும், 3-ல் ராகு, 9-ல் சனி சஞ்சாரம் செய்வதாலும் எடுக்கும் முயற்சிகளில் எதிர் நீச்சல் போட்டாவது வெற்றியினைப் பெறுவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் சற்று அதிக அக்கறை எடுக்க வேண்டியிருக்கும். குடும்பத்தில் உள்ளவர்வர்களாலும் சிறுசிறு மருத்துவ செலவுகளை சந்திப்பீர்கள். கணவன்- மனைவியிடையே வீண் வாக்கு வாதங்கள் உண்டாக கூடும் என்பதால் விட்டு கொடுத்து நடந்து கொள்வது நல்லது. உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்ல வேண்டியிருக்கும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தாமத பலன் ஏற்படும்.

பண வரவுகளில் நெருக்கடிகள் நிலவினாலும் எதிர்பாராத உதவிகள் மூலம் குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். அசையும் அசையா சொத்துக்களால் வீண் பிரச்சனைகளை சந்திப்பீர்கள். ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொண்டால் தேவையற்ற வகையில் கடன்கள் ஏற்படுவதை தவிர்க்கலாம். தொழில் வியாபாரத்திலும் போட்டிகள் அதிகரிக்கும் என்பதால் கிடைக்கும் வாய்ப்புகளை நழுவ விடாதிருப்பது உத்தமம். கூட்டாளிகளும், தொழிலாளர்களும் ஒற்றுமையுடன் செயல்பட மாட்டார்கள். கொடுக்கல்- வாங்கலில் வீண் பிரச்சனைகளை சந்திப்பீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைபளு அதிகமாக இருக்கும். மாணவர்கள் கல்வி ரீதியாக மேற்கொள்ளும் பயணங்களால் தேவையற்ற அலைச்சல்களை சந்திக்க வேண்டியிருக்கும். சனிக்கு பரிகாரம் செய்வது நல்லது.

பரிகாரம்
மேஷ ராசியில் பிறந்துள்ள உங்களுக்கு குரு பகவான் அஷ்டம ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் வியாழக்கிழமை தோறும் குரு, தட்சிணாமூர்த்திக்கு கொண்டை கடலையை மாலையாக கோர்த்து அணிவித்து, மஞ்சள் நிற மலர்களால் அலங்கரித்து, நெய் தீபமேற்றி வழிபடுவது நல்லது. தானம் போன்றவற்றை காலைப் பொழுதிலும் (வியாழக் கிழமைகளில்) மந்திர ஜெபங்களை மாலைப் பொழுதிலும் செய்யவும். ராகுவுக்கு பரிகாரமாக ராகு காலத்தில் துர்க்கை அம்மனுக்கு எலுமிச்சம் பழத்தில் விளக்கேற்றி கஸ்தூரி மலர்களால் அர்ச்சனை செய்வது நல்லது. கேதுவுக்கு பரிகாரமாக வியாழக்கிழமைகளில் விரதம் மேற்கொள்வது, சதுர்த்தி விரதங்கள் இருப்பது, தினமும் விநாயகரை வழிபடுவது உத்தமம்.

அதிர்ஷ்டம் அளிப்பவை
எண் – 1,2,3,9, நிறம் – ஆழ்சிவப்பு கிழமை – செவ்வாய்
கல் – பவளம் திசை – தெற்கு தெய்வம் – முருகன்

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஉயிர்தப்பிய சிறுவனின் அதிர்ச்சி வாக்குமூலம்! யாழ். நோக்கி சென்றபோது நேர்ந்த கோர விபத்து!
Next articleகணவர் இறந்துவிட்டதால் பாலியல் தொழிலுக்கு வந்த 2 குழந்தைகளின் தாய்! நடந்த விபரீத சம்பவம்!