இலங்கையர்கள் 62 ஆயிரத்து 338 பேர் நாட்டை விட்டு வெளியேற தடை விதிக்கப்பட்டுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இவர்களில் பாதுகாப்பு பிரிவுகளின் கீழ் மட்டத்தில் இருந்து உயர் மட்டம் வரை பல்வேறு பிரிவுகளை சேர்ந்த 30 ஆயிரம் பேர் உள்ளதாக குறிப்பிடப்படுகிறது.
நீதிமன்றம் மற்றும் இராணுவத்தினால் வழங்கப்பட்ட உத்தரவிற்கமைய இந்த நபர்களின் பெயர்கள் கறுப்பு பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது.
இராணுவ பிரிவுகளை தவிர, அரசியல்வாதிகள், போதைப்பொருள் வர்த்தகத்துடன் தொடர்புடையவர்கள், மதவாதிகள் உட்பட பலர் இந்த பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடையவர்கள் என கண்டறியப்பட்டுள்ளது.
குறித்த நபர்களுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
கறுப்பு பட்டியலில் இணைக்கப்பட்டவர்கள் நாட்டை விட்டு வெளியேறுவதனை தடுப்பதற்காக அரசாங்க புலனாய்வு பிரிவு குழுக்கள், விமான நிலைய சிவில் விமான சேவை அதிகாரிகள், குடிவரவு குடியகல்வு அதிகாரிகள் இணைந்து செயற்பட்டு வருகின்றனர்.
இவர்களை விமான நிலையத்தில் கண்காணிக்க நவீன உபகரணங்கள் பயன்படுத்தப்பட்டு வருவதாக குடியகல்வு திணைக்கள தகவல்கள் தெரிவிக்கின்றன