கருகருவென முடி வளர, குடல் புழுக்கள் அழிக்க, மலச்சிக்கல், வாயுத் தொல்லை தீர்க்கும் தும்மட்டி பழம்!

0

தமிழகத்தின் மணற்பாங்கான ஆற்றங்கரையோரம் அதிகம் விளையும் ஒரு செடி வகை, ஆற்றுத் தும்மட்டி என்று அழைக்கப்படுகிறது. தரையில் வேர்விட்டு, மண்ணிலேயே படரும் கொடியின் இலைகள் பாகல் இலைகளைப் போன்று, நீள்வட்ட வடிவில் காணப்படும். இதன் காய்கள் சிறிய கோலி உருண்டைகள் போல, மேல்புறம் வெண்ணிற பட்டைகள் கொண்டு காணப்படும்.

கிராமங்களில், மணற்பாங்கான நிலங்களில் விளைந்திருக்கும் தும்மட்டி கொடிகளையும் சேர்த்தே, புல்லருப்பவர்கள் வெட்டி வந்து, கால்நடைகளுக்கு தீனியாகக் கொடுப்பார்கள். வயல்வெளிகளில் தானாகவே வளரும் இந்தச் செடிகள், விதைகள் மூலமும், வளர்க்கப்படுகின்றன. இந்தக் கொடி, கொம்மட்டி என்று கிராமங்களில் அழைக்கப்படுகிறது.

தும்மட்டியின் பொதுவான பயன்கள், உடலில் உள்ள புழுக்களை அழிக்கும், உடலில் சேர்ந்த நச்சுக்களை முறித்து, மலச்சிக்கல் போக்கும், சிறுநீர்ப் போக்கை இயல்பாக்கும். புழுவெட்டு போக்கி, முடியை மீண்டும் வளர வைக்கும். இள நரையைப் போக்கும். இதன் இலைகள், காய் மற்றும் வேர் போன்ற பாகங்கள், மருத்துவ பயன்கள் மிக்கவை.

வயிறு வீக்கம் மற்றும் வாயுத் தொல்லைகள் விலகும். பெண்களின் கருப்பை சார்ந்த கோளாறுகள் மற்றும் நீர்க் கட்டிகள் போன்ற பாதிப்பிற்கு, சிறந்த நிவாரணம் அளிப்பவையாக, தும்மட்டி திகழ்கிறது.

உடலில் சேர்ந்த நச்சுக்களை முறிக்க :

தும்மட்டி கொடிகளை காய்களுடன் நன்கு உலர்த்தி, தூளாக்கி, அதில் சிறிது தினமும் இருவேளை, சாப்பிட உடலில் சேர்ந்துள்ள நச்சுக்கள் முறிந்து, உடல் நலமாகும். வயிற்றுப் புழுக்களும் அழிந்துவிடும்.

புழு வெட்டு பாதிப்புகள் தீர:

சிலருக்கு தலையில், உடலில் முடிகள் உதிர்ந்து, அந்த இடங்களில் மீண்டும் முடி முளைக்காமல், தலையில் முடிகளின் அடர்த்தி, இடைவெளியுடன் இருக்கும். இந்த பாதிப்பை, சொட்டை என்பார்கள். இதுபோல, உடலில், முகத்திலும் காணப்படும். இந்த பாதிப்பு மனநிலையில் அழுத்தத்தை ஏற்படுத்தி, பலவித இன்னல்களை ஏற்படுத்தி விடும்.

இதுபோன்ற பாதிப்புகளை சரி செய்ய, தும்மட்டி காய் பேருதவி செய்யும். புழு வெட்டு எனும், முடி உதிர்ந்த இடங்களில், தும்மட்டிக் காயை எலுமிச்சை போல, இரண்டாக வெட்டி, அதனைக் கொண்டு, முடி இல்லாத இடங்களில் தினமும் நன்கு தடவி வர, பாதிப்புகள் மறைந்து, விரைவில் முடி வளர ஆரம்பிக்கு

வயிற்று பாதிப்புகள் மற்றும் வாயுத்தொல்லைகள் நீங்க :

தும்மட்டிக் காய், எலுமிச்சை, வெங்காயம், இஞ்சி மற்றும் நொச்சி இவற்றை தனித்தனியே சாறெடுத்து, அதை ஒன்றாகக் கலந்து, காய்ச்சி, சாறு கால் பாகமாக சுண்டி வந்ததும், ஆற வைக்க வேண்டும்.

இத்துடன் ஓமம், பெருங்காயம், மிளகு, வெந்தயம் மற்றும் கடுகு மஞ்சள் இந்துப்பு சேர்த்து, காய்ச்சிய சாற்றில் இட்டு நன்கு அரைத்து, அந்த விழுதை, தினமும் சாப்பிட்டு வர, வயிற்று பாதிப்புகள் யாவும் தீர்ந்து, செரிமான ஆற்றல் சீராகும்.

இளநரை போக்கி, தலை முடியைக் கருமையாக்கும் தும்மட்டி :

சிலருக்கு மிகவும் இளைய வயதிலேயே, இள நரை ஏற்பட்டு, வயது முதிர்ந்தது போன்ற தோற்றம் ஏற்பட்டு, மன வேதனையை உண்டாக்கி விடும். சிலர் உடல் பாதிப்புகள் தீர எடுத்துக்கொண்ட மருந்துகளின் ஒவ்வாமையால் முடி வெளுத்து, நரைத்த முடியுடன் காணப்படுவார்கள்.

இன்னும் சிலரோ, ஆர்வக் கோளாறில் முடியின் வண்ணத்தை, சிவப்பு, பச்சை வண்ணமாக்கி தற்கால நாகரிக விருப்பத்தில் செய்யும் செயற்கை பூச்சுக்கள், தலை முடிகளின் இயல்பான கருப்பு வண்ணத்தை அழித்து, முடியை வெளுக்க வைத்து விடுகின்றன.

இது போன்ற பாதிப்புகளில் இருந்து தலைமுடியை காத்து, பழையபடி கருப்பு வண்ணத்தை அடைய வைக்கவும், முடிகள் உதிர்வைக் கட்டுப்படுத்தவும், தும்மட்டிக் காய்கள் உதவுகின்றன.

எண்ணெய் தயாரிக்கும் முறை :

தும்மட்டி பழங்கள், நெல்லிக் காய்கள், கரிசலாங் கண்ணி இலைகள் இவற்றை சேகரித்து வைத்துக்கொண்டு, தும்மட்டிப் பழங்களின் விதை நீக்கிய சதைகளையும், நெல்லிக்காயின் கொட்டை நீக்கிய சதைப்பகுதிகளையும், அரைத்து விழுதாக்கிய கரிசலாங்கண்ணி இலைகளுடன் சேர்த்து, அரை லிட்டர் தேங்காய் எண்ணையில் ஊற வைத்து, பாத்திரத்தின் வாய்ப் பகுதியை வெண்ணிற துணி கொண்டு மூடி, சூரிய ஒளி படுமாறு வைக்க வேண்டும்.

முடி வளர்ச்சி அதிகரிக்கும்:

இது போல, ஒரு வாரம் வைத்து எடுக்க, எண்ணையில் கரிசலாங்கண்ணி இலை விழுது, தும்மட்டி மற்றும் நெல்லி விழுதுகள் நன்கு கலந்து கரைந்திருக்கும்.

இந்த எண்ணையை வடிகட்டி ஒரு பாட்டிலில் வைத்துக் கொண்டு, அதை தினமும் தலையில் முடி உதிர்ந்த இடங்களில் மற்றும் உடலில் புழு வெட்டு பாதிப்பு ஏற்பட்ட மற்ற இடங்களில் நன்கு தடவி வர, சில தினங்களில் பாதிப்புகள் விலகி, மீண்டும் முடி வளர ஆரம்பிக்கும்.

இந்த எண்ணையை தலை முழுவதும் தடவி வர, முடி உதிர்தல் பாதிப்பு குறைந்து, முடி நன்கு கறுப்பாகும். தினமும் இந்த எண்ணையை தடவி, சற்று நேரம் ஊற வைத்த பின்னர், குளிக்கும்போது, சிகைக்காய்த் தூள் கொண்டு, தலையை நன்கு அலசி குளித்து வர வேண்டும்.

கருப்பை கோளாறுகள் :

பெண்களின் மாதாந்திர பாதிப்புகள் மற்றும் கருப்பை கோளாறுகளை சரி செய்யும் தும்மட்டிக் காய்…

இன்றைய காலத்தில் பெண்களை அதிகம் துன்புறுத்தும் ஒரு உடல் நிகழ்வாக, மாத விலக்கு விளங்குகிறது. அந்த சமயத்தில் ஏற்படும் உடல் வலி மற்றும் மனச்சோர்வுக்கு பெண்களின் உணவுமுறைகள், ஆடை மற்றும் காலணி போன்றவையும் காரணமாக அமைகின்றன என்பதை அவர்கள் நம்பாவிட்டாலும், குதிகால் உயர்ந்த காலணிகள் மற்றும் இறுக்கமான ஜீன்ஸ் போன்ற முரட்டுத்துணிகளால் ஆன ஆடைகள், பெண்களுக்கு உடல் நல பாதிப்புகளைத் தருபவையாகவே அமைகின்றன.

நீர்க்கட்டி :

பெண்களின் கருப்பையில் ஏற்படும் தொற்றுக்கள் மற்றும் பாதிப்புகளால், நீர்க்கட்டிகள் மற்றும் சாக்லேட் சிஸ்ட் எனும் பாதிப்புகள் ஏற்படுகின்றன. இவை காரணமாக, அவர்களுக்கு மாத விலக்கு சமயங்களில் அதிகப்படியான வயிற்று வலி மற்றும் மகப்பேறு அடைய முடியாத நிலை ஏற்பட்டு விடும்.

தும்மட்டி எண்ணெய் :

பெண்களின் இந்த உடல் நல பாதிப்புகளை தும்மட்டிக்காய் சரி செய்யும். விளக்கெண்ணை மற்றும் வேப்பெண்ணை நூறு மில்லி, தும்மட்டிக்காய் சாறு, சிறிய வெங்காயச்சாறு மற்றும் வேப்பிலைச்சாறு இவற்றையும் நூறு மிலி அளவு எடுத்துக்கொண்டு, அனைத்தையும் ஒன்றாக்கி, நன்கு காய்ச்சி, எண்ணை சுண்டி வந்ததும், ஆற வைத்து, பத்திரப்படுத்தி வைத்துக் கொள்ள வேண்டும்.

இந்த எண்ணையை மாத விலக்கு நாட்களில், தினமும் சிறிது பருகி வர, மாத விலக்கு வலிகள் தீரும். கருப்பை வலுவாகி, நீர்க் கட்டிகள் மற்றும் சாக்லேட் சிஸ்ட் பாதிப்புகள் விலகி விடும். சினைப்பை மற்றும் கருப்பை பாதிப்புகள் நீங்கி, பெண்களின் உடல் ஆரோக்கியம் மேம்பட்டு, கருத்தரிக்கும் வாய்ப்புகள் ஏற்படும்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleசுவாச பாதிப்பு, உடைந்த எலும்புகளை விரைவில் சேர வைத்து, எலும்பு முறிவு, கருப்பை பாதிப்பு, ஜுரம், இருமல் போன்ற பாதிப்புகளை குணமாக்கும் ஆற்றல் மிக்க அருவதா மூலிகை!
Next articleநீர்ச்சத்து குறைபாட்டை போக்கும் நீர் முத்திரை எவ்வாறு செய்வது? தெரிந்து கொள்ளுங்கள்!