கிளிநொச்சியில் சடலமாக மீட்கப்பட்ட யுவதி அடையாளம் காணப்பட்டுள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
முல்லைத்தீவு – முறுகண்டி பகுதியை சேர்ந்த ஒரு பிள்ளையின் தாயான 32 வயதுடைய கறுப்பையா நித்தியகலா என்பவரே பன்னங்கண்டி பகுதியிலிருந்து இன்று காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சடலம் கண்டுப்பிடிக்கப்பட்ட பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது, சடலத்தின் அருகிலிருந்து சிவில் பாதுகாப்பு படையாளிகள் அணியும் இடுப்புப்பட்டி மற்றும் பேனை என்பன கண்டெடுக்கப்பட்டுள்ளன.
பாதுகாப்பு உத்தியோகத்தரின் இடுப்புப் பட்டி என்பதால் பாதுகாப்பு உத்தியோகத்தர் என சந்தேகம் கொண்ட எமது பிராந்திய செய்தியாளர் மற்றும் கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபை உறுப்பினர் ஒருவரும் சேர்ந்து கிளிநொச்சியில் உள்ள அனைத்து பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் தொடர்பான தகவல்களையும் திரட்டியுள்ளனர்.
நிறுவனங்களுக்கு சென்று இன்று வருகைத்தராத பெண் பாதுகாப்பு உத்தியோகத்தர் யார் என்றும் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
இந்நிலையில், அறிவியல் நகரில் உள்ள ஆடைத் தொழிற்சாலையில் வேலை பார்க்கும் பெண் உத்தியோகத்தர் வரவில்லை என்ற தகவல் கிடைக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, ஆடைத் தொழிற்சாலை உத்தியோகத்தர்களுடன் அவரது வீட்டுக்கு சென்று அவர்களிடம் விசாரித்ததன் பின்னர் அவர்களை வைத்தியசாலைக்கு அழைத்து சென்று சடலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
மேலும், குறித்த சம்பவம் தொடர்பில் ஊடகவியலாளரினால் கிளிநொச்சி பிரதிப் பொலிஸ்மா அதிபருக்கும் தகவல் வழங்கப்பட்டு மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அங்கிருக்கும் எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.