சென்னையில் கொலை செய்யப்பட்ட பிரபல ரவுடி தாதா மணி என்கவுண்டர் செய்யப்பட்டதற்கான பின்னணி குறித்து வெளியாகி உள்ளது.
சென்னையில் நேற்று இரவு பிரபல ரவுடி தாதா மணி சுட்டு கொல்லப்பட்டார். இவர் பெயர் மணிகண்டன். ரவுடியாக வலம் வந்ததால் தாதாமணி என்று பெயர்மாற்றம் ஏற்பட்டுள்ளது.
புதுச்சேரியை அடுத்த தமிழக எல்லை பகுதியான ஆரோவிலை சேர்ந்தவர் மணிகண்டன். இவர் தொடக்ககால வாழ்க்கையில் இருச்சக்கரவாகனங்கள் மற்றும் ஆட்டோக்கள் திருடி விற்று பணம் சம்பாதிக்க துவங்கினார்.
இதில் தொழில் போட்டி காரணமாக பூபாலன் மற்றும் ராஜ்குமார் ஆகிய இருவர் மணிகண்டனை தொடர்ந்து எதிர்த்து வந்தனர்.
ஒருகட்டத்திற்கு மேல், இந்த தொழில் விஸ்வரூபம் எடுத்து பல முக்கியஸ்தர்களை கொலை செய்யும் அளவிற்கு சென்றுவிட்டது. குறிப்பாக, ஆரோவில் தொழிலதிபர் ஆந்திரேவைப் படுகொலை செய்தது, பொம்மையார்பாளையம் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் அருள் ராஜை வெடிகுண்டு வீசி வெட்டிக் கொலைசெய்தது, குயிலாப்பாளையம் பாபு மற்றும் வெங்கட் இருவரையும் வெட்டிக் கொலைசெய்தது உள்ளிட்டவை அடங்கும்.

ஒருகட்டத்தில், இவரின் தொழில் எதிரியான ரவுடி பூபாலன் போலீஸிடம் மனு கொடுத்து, திருந்தி வாழத் தொடங்கினார். ராஜ்குமார் சிறையில் அடைக்கப்பட்டார். இதனால் எந்த போட்டியும் இல்லாமல் தாதாமணி ஜாலியாக வலம்வந்தார்.
இந்நிலையில் சென்னையில் உள்ள பெண் மருத்துவர் ஒருவருடன் காதல்வயப்பட்டு திருமணம் செய்துகொண்ட மணி, திருவண்ணாமலையில் புதியதாக வீடுகட்டி குடிபுகுந்தார்.
தன் காதல் மனைவியின் அறிவுரையின்படி திருந்தி வாழப் போவதாக காவல்துறையில் மனு கொடுத்தார். அதிலிருந்து சரியாக ஒரே வாரத்தில் இவரின் தம்பி ஆறுமுகத்தை முன்விரோதம் காரணமாக, மயிலத்தில் ஓடஓட விரட்டிக் கொடூரமாகக் கொலை செய்தது ராஜ்குமார் தரப்பு.
இதனால் ஆத்திரம் அடைந்த மணி தன்னுடைய பழைய தொழிலுக்கே திரும்பினார். பின்னர் தொடர்ந்து பல கொலைகளில் செய்யும் பணியிலும் ஈடுபட்டார்.
தொழிலதிபர் ரிலையன்ஸ் பாபு கொலை தொடர்பாக மணிகண்டனைத் தேடும் பணியில் தீவிரமாக இறங்கியது காவல்துறை. இந்நிலையில்தான் நேற்று இரவு சென்னை கொரட்டூரில் வைத்து மணியை சுற்றிவளைத்த பொலிசார் சரணடைய கோரியும் அவர் கத்தியை காட்டு தப்பிக்க முயன்றுள்ளார். இதில் பொலிசாருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. உடனே பொலிசார் மணியை என்கவுண்டர் செய்துள்ளனர்.




