இந்தியாவின் கேரள மாநிலத்தில் 7 வயது சிறுவன் மீது கொடூர தாக்குதல் நடத்திய இளைஞர் தொடர்பில் பதறவைக்கும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
கேரள மாநிலத்தின் தொடுபுழா பகுதியில் 7 வயது சிறுவனுக்கு நேர்ந்த கொடூரம், மாநிலம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
முக்கிய குற்றவாளியாக கருதப்படும் அருண் ஆனந்த் என்பவர் பொலிசாரால் விசாரிக்கப்பட்டு வரும் நிலையில்,
அருண் தொடர்பில் திடுக்கிடும் தகவல்கள் ஒவ்வொன்றாக வெளிவந்தவண்ணம் உள்ளது. தாக்குதலுக்கு இரையான 7 வயது சிறுவனின் தந்தை மாரடைப்பால் மரணமடைந்ததாக கூறப்படுகிறது.
அவரது நண்பரான அருண் அடிக்கடி இவர்களது குடியிருப்புக்கு சென்று வந்ததால் சிறுவனின் தாயாருக்கும் அருணுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இதனிடையே சிறுவனின் தந்தை மாரடைப்பால் மரணமடையவே, மூன்றாவது நாள் அருணை திருமணம் செய்துகொள்ள ஒப்புக்கொள்ள வேண்டும் என உறவினர்களிடம் சிறுவனின் தாயார் கோரிக்கை வைத்துள்ளார்.
மட்டுமின்றி கணவர் மரணமடைந்த மூன்றாவது மாதம் அவர் தமது இரு பிள்ளைகளுடன் அருணுடன் சேர்ந்து தனிக்குடித்தனத்திற்கு சென்றுள்ளார்.
ஆனால் தனியாக சென்ற பின்னரே அருணின் உண்மை முகம் வெளிவந்துள்ளது. அருண் குறித்த யுவதியையும் அவரது இரு பிள்ளைகளையும் தொடர்ந்து துன்புறுத்தி வந்துள்ளார்.
மட்டுமின்றி 7 வயது சிறுவனையே கொடூரமாக தாக்கி வந்துள்ளார். பொறுக்க முடியாமல் குறித்த யுவதி தடுக்க சென்றால், அவரையும் அருண் கடுமையாக தாக்கிவந்துள்ளார்.
பல இரவுகளில், பிள்ளைகள் இருவரையும் தூங்க வைத்துவிட்டு இருவரும் காரில் வெளியே சென்று வந்துள்ளனர்.
அருண் எப்போதும் போதையில் இருப்பதையே விரும்பியுள்ளார். மட்டுமின்றி உள்ளூர் கூலிப்படையுடன் அருணுக்கு தொடர்பு இருப்பதாகவும்,
அதில் கொலை வழக்கு உள்ளிட்ட பல புகார்கள் பல்வேறு மாவட்டங்களில் உள்ள காவல் நிலையத்தில் பதிவாகியுள்ளதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த நிலையிலேயே, தமது காதலியின் மகனை கொடூரமாக தாக்கிய விவகாரத்தில் பொலிசாரிடம் அருண் சிக்கியுள்ளார்.
மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் இருக்கும் சிறுவன், இதுவரை ஆபத்து கட்டத்தை கடக்கவில்லை என்றே மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மேலும் மூளைச்சாவுக்கான அறிகுறிகள் இருப்பதாகவும், ஆனால் எதையும் தற்போது உறுதிப்படுத்த முடியாது எனவும், தங்களால் இயன்ற சிகிச்சை அளித்து வருவதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.