சென்னையிலுள்ள கல்லூரிகளில் பயிலும் மாணவர்களில் சிலர் நாயக மனோபாவத்துடன் தங்களுக்கென்று ஒரு குழு சேர்ந்துகொண்டு பிற மாணவர்களுடன் சண்டையிடுவதும், தாங்களே பெரியவர்கள் என்பதனை நிரூபிக்க எந்த எல்லைக்கும் செல்வதும் வாடிக்கையான செயலாகிவருகிறது.
மாணவர்களுக்குள் நடக்கும் மோதலில் சில மாணவர்கள் பட்டாக்கத்தியுடன் பேருந்துகளில் வந்து பயணிகளையும் பயம் கொள்ள செய்கிறார்கள். சமீபத்தில் இது குறித்து போலீசார் எச்சரிக்கை விடுத்தனர். கல்லூரிகளும் இத்தகைய மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டது.
ஆனபோதிலும் மாணவர்கள் சேட்டை அடங்கவில்லை. இன்றும் அரசு பஸ்சில் கல்லூரி மாணவர்கள் பட்டாக்கத்தியுடன் படியில் பயணம் செய்து அட்டகாசம் செய்தனர். இதை பார்த்த பயணிகள் அச்சம் அடைந்தனர்.
தங்கள் கனவுகளை நோக்கி நகர வேண்டிய மாணவர்கள் இப்படி தங்கள் வாழ்வினை சீரழித்துக்கொள்வது, தடம் மாறி செல்வது சமூக ஆர்வலர்களை அதிகமாக கவலையுறச்செய்துள்ளது.




