இந்தியாவை பூர்வீகமாக கொண்ட கங்கோத்ரி மகாராஜ் என்ற வயதான பெண்மணி தனது கணவர் கண்ணெதிரிலேயே உடல் நசுங்கி உயிரிழந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அவுஸ்திரேலியாவில் வசித்து வந்த 80 வயதான விஜய் – கங்கோத்ரி மகாராஜ் தம்பதியினருக்கு கடந்த வாரம் தான் அந்நாட்டு குடியுரிமை கிடைத்தது.
நேற்று காலை 10 மணியளவில் சிட்னியில் நடக்கும் கூட்டாட்சித் தேர்தலில் வாக்களிப்பதற்காக வில்லோபி சாலையில் உள்ள அல்பானி தெருவுக்கு வந்துள்ளனர்.
இவர்கள் இருவரையும் சாலையில் இறக்கிவிட்டு மகள் கீதா சென்றுவிட்டார். தம்பதியினர் தங்கள் கையை கோர்த்துக்கொண்டு சாலையை கடக்க முயற்சிக்கையில், அதிவேகமாக வந்த சிமென்ட் டிரக் இருவர் மீதும் மோதியதில், விஜய் தூக்கிவீசப்பட்டார், மனைவி கங்கோத்ரி வாகனத்தின் அடியில் சிக்கி சிறிது தூரம் இழுத்துசெல்லப்பட்டு உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
தனது மனைவி இழுத்து செல்லப்படுவதை பார்த்து அய்யோ என் மனைவியை காப்பாற்றுங்கள் என விஜய் கத்தியுள்ளார். இதனை அங்கிருந்தவர்கள் பார்த்து டிரக்கை நிறுத்தியுள்ளனர். கங்கோத்ரியின் உடலைப் பொதுமக்கள் மீட்டனர். இந்தக் காட்சி அங்கிருந்தவர்களை உருக்குலைத்து விட்டது.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட விஜய் தற்போது அபாய கட்டத்தை தாண்டிவிட்டார். கடைசி வரை எனது மனைவியின் கையினை பிடித்தபடியே நடந்து சென்றேன், ஆனால் எனது கையை விட்டு அவள் மட்டும் என்னைவிட்டு தனியாக சென்றுவிட்டாள் என கதறி அழுதுள்ளது பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.