யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை-அராலிப் பகுதியில் நேற்றிரவு பயங்கரக் கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக வட்டுக்கோட்டைப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அராலி வடக்கு செட்டியா மடம் பகுதியிலேயே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மேலும் தெரியவருவதாவது,
நேற்றிரவு மேற்படி பகுதியிலுள்ள வீடொன்றினுள் புகுந்த கொள்ளையர்கள் வீட்டில் இருந்த தந்தை மற்றும் மகள் ஆகிய இருவரையும் கூரிய ஆயுதங்களால் தாக்கிவிட்டு தங்க ஆபரணங்களைக் கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர்.
இதில் படுகாயமடைந்த தந்தையும் மகளும் அயலவர்களால் மீட்கப்பட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்த முறைப்பாடு ஒன்று தமக்கு கிடைக்கப்பெற்றிருப்பதாகவும் அது தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளவிருப்பதாகவும் வட்டுக்கோட்டைப் பொலிஸார் ஐ.பி.சி தமிழ் செய்திச் சேவைக்கு கூறியுள்ளனர்.
இதேவேளை நேற்று நள்ளிரவை அண்மித்த நேரத்தில் பலத்த இடி மின்னலுடன் கடும் மழை பொழிந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.