ஓட ஓட விரட்டி கொலை செய்யப்பட்ட இளைஞர்… தகாத உறவால் நடந்த கொடூரம்!

0

திருப்பூரில் தகாத உறவின் விளைவாக இளைஞர் ஒருவர் ஓட ஓட விரட்டி கொடூரமாக கொல்லப்பட்ட சம்பவத்தில், சம்பந்தப்பட்ட பெண்ணின் கணவரையும், சகோதரரையும் பொலிசார் கைது செய்துள்ளனர்.

திருப்பூர் சிவசக்தி நகரில் சனிக்கிழமையன்று ஆள் அரவமற்ற பகுதியில், கழுத்தில் முன்னும் பின்னும் சரமாரியாக வெட்டப்பட்டுக் கிடந்த இளைஞரின் உடலை திருப்பூர் மத்திய பொலிசார் கைப்பற்றினர்.

சடலத்தின் சட்டைப்பையிலிருந்து செல்போனை ஆராய்ந்ததில், கொல்லப்பட்டது குளித்தலையைச் சேர்ந்த லோகநாதன் என்பதும், திருப்பூரில் வேலை செய்து வரும் அண்ணன் நாகராஜின் வீட்டுக்கு வந்தபோது கொலையானதும் கண்டுபிடிக்கப்பட்டது. நாகராஜிடம் நடத்திய விசாரணையில், திடுக்கிடும் உண்மைகள் அம்பலமாகின.

அதன்படி, குளித்தலையில் பக்கத்து வீட்டில் வசிக்கும் முருகனின் மனைவி நளினிக்கும், கொல்லப்பட்ட லோகநாதனுக்கும் தொடர்பு இருந்துள்ளது. இதையறிந்த முருகன், இருவரையும் கண்டிக்க, ஒரு கட்டத்தில் நளினியும், லோகநாதனும் ஒரு வாரத்துக்கு முன் வீட்டை விட்டு வெளியேறி, கிருஷ்ணகிரி சென்றுள்ளனர். வெள்ளியன்று திருப்பூரில் உள்ள தனது வீட்டுக்கு வந்ததாக நாகராஜ் தெரிவித்தார்.

இதையடுத்து, குளித்தலை விரைந்த திருப்பூர் பொலிசார், ஞாயிற்றுக்கிழமை காலை நளினி, முருகன், நளினியின் தம்பி பெருமாள் ஆகியோரை பிடித்து விசாரித்தனர். அதில் லோகநாதனை கொன்றதை அவர்கள் ஒப்புக் கொண்டனர்.

அவர்களது வாக்குமூலத்தின்படி, லோகநாதனுடன் செல்போனில் பேசிய நளினியின் கணவர் முருகன், நளினி இனிமேல் தனக்கு வேண்டாம் என்றும், இருவருக்கும் மணமுடித்து வைப்பதாகவும் கூறியுள்ளார்.

இதை நம்பிய லோகநாதன், திருப்பூரில் தான் இருக்குமிடத்தை கூறியுள்ளார். அங்கு சென்ற முருகனை சந்திக்க நளினியுடன் வந்த லோகநாதனை, முருகனும், நளினியின் சகோதரர் பெருமாளும் அரிவாளால் வெட்ட முயன்றுள்ளனர்.

சுதாரித்த லோகநாதன் தப்பி ஓடியபோது, இருவரும் விரட்டி விரட்டி, நளினியின் கண் முன்னே சரமாரியாக வெட்டி கொலை செய்துள்ளனர். பின்னர் நளினியுடன் கொலையாளிகள் ஊர் திரும்பியுள்ளனர். இதையடுத்து, முருகன், பெருமாளை கைது செய்த பொலிசார், நளினியை சாட்சியாக வழக்கில் சேர்த்துள்ளனர்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleகிம் ஜாங் திடீர் மனமாற்றம்! அமெரிக்காவிற்கு நட்பு அழைப்பு! அதிர்ச்சியில் உலக நாடுகள்!
Next articleபிரித்தானியாவில் இலங்கை பெண்ணின் அற்புதச் செயல்: நெகிழ வைக்கும் உண்மை சம்பவம்!