ஐஎஸ் பயங்கரவாத அமைப்பின் தலைவன் அபு பக்கர் அல் பாக்தாதி ஆப்கானிஸ்தானில் மறைந்திருப்பதாக புதிய தகவல் ஒன்றினை அதிகாரிகள் வெளியிட்டுள்ளனர்.
ஈஸ்டர் தினத்தன்று இலங்கையில் நடத்தப்பட்ட மோசமான தற்கொலை படை தாக்குதலுக்கு பின்னர், முதன்முறையாக ஐஎஸ் பயங்கரவாத அமைப்பின் தலைவன் அபு பக்கர் அல் பாக்தாதி வீடியோவில் தோன்றினான்.
2014ம் ஆண்டிற்கு பின்னர் வெளியில் எங்குமே தோன்றாத அபு பக்கர், இறந்துவிட்டதாக செய்தி வெளியானது.
ஆனால் அவன் சமீபத்தில் பேசிய வீடியோ வெளியானதை அடுத்து, உலக நாடுகள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
அவன் வெளியிட்ட வீடியோவை வைத்து, அச்சுறுத்தல்-பகுப்பாய்வு நிபுணர் குழு மறைந்திருக்கும் இடம் குறித்து விசாரணை மேற்கொள்ள ஆரம்பித்தனர்.
அந்த வீடியோவில் படுக்கைகள் இருந்த விதம் மற்றும் தலையணைகளை வைத்து அவன் தற்போது ஆப்கானிஸ்தானில் மறைந்திருக்கலாம் என அவர்கள் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.
இந்த மாத ஆரம்பத்தில் பேசிய ஈராக் பிரதமர், ஐஎஸ் அமைப்பின் தலைவன் மிக எளிய மற்றும் ஒதுக்குபுறமான ஒரு இடத்தில் வசிப்பதை போல அந்த வீடியோவில் உள்ளதாக குறிப்பிட்டிருந்தார்.
அவன் எங்கு மறைந்திருக்கிறான் என்பது குறித்து அவர் தெரிவிக்கவில்லை. ஆனால் ஈராக் பாதுகாப்பு ஆலோசகர் ஹிஷாம் அல் ஹஷெமி, 4 இடங்களில் அவன் மறைந்திருக்க வாய்ப்புள்ளது என தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.